Friday, March 4, 2011

சிறகுகள்

வானம் விழுந்து, நீர்;
சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை

நீரில் எழுந்தது வானம்;
சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு

சிறகினுள் எழும் சூர்யத் தகிப்பே
சிறகடிப்பின் ரகசியம்; ஆகவேதான்
சுயவொளியற்ற வெறும் ஒரு பொருளை
சிறகுகள் விரும்புவதில்லை;
பூமிபோன்ற கிரகங்களை அது நோக்கவில்லை
(சிறகடிக்கையில்
சிறகின் கீழே வெட்கி ஒடுங்கிக்கொள்கின்றன
பறவையின் கூர்நகக் கால்கள்)

சூரியனுள் புகுந்து, வெறுமே
சுற்றிச் சுற்றி வருகின்றன சிறகுகள்
சிறகின் இயல்பெல்லைக்குள்
நிற்குமிடமென்று ஏதுமில்லை
வெளியில் அலையும் சிறகுகளுக்கு
இரவு பகல்களுமில்லை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP