Sunday, March 27, 2011

இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி

வண்டி புறப்படவும்
தனியே விட்டுவிட்டு
மகிழ்ச்சியுடனே
விடைபெற்றுச் சென்றனர் தோழிகள்

மேனியெங்கும்
மணப்பெண் போலொரு நாணத்தின் நறுமணம்
மணமகன் விழித்துக் காத்திருக்கும்
முதலிரவு அறையோ இத்தனிமை என ஒரு விகாசம்
சிலுவை மிளிரும் வெள்ளுடையையும்
தொண்டிதயம் ஒளிரும் என் கன்னிமையையும்
என் நேசரிடம் ஒப்படைக்கப்போவதுபோல் நிற்கிறேன்

வண்டி குரலெடுத்த ஓங்காரத்தில்
புறப்பட்டு ஓடத் தொடங்கிய இரும்பு ராகத்தில்
ஜன்னல் வழி வந்துகொண்டேயிருக்கும்
நிலக்காட்சிகளின் கொள்ளை ஒளியழகில்
வேகமாய் வந்து தழுவும் காற்றில்
சக பயணிகளின் மத்தியில்

என் நேசருடனல்லவா நான் கலந்திருந்தேன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP