Tuesday, March 1, 2011

சூர்யமறைவுப் பிரதேசம்

உனக்குச் சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்குச் சூரியன்
உதாரணமாய் ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
ஒரு பப்பாளிப்பழம்
ஒரு நண்பனின் முகம்
ஒரு குவளை தண்ணீர்
ஒரு கண்ணாடி
இன்னும்,,,
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்
என சொல்லிக்கொண்டே போகலாம்

ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லையெனில்
ஒரு பப்பாளிப்பழம்
அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையெனில்
ஒரு நண்பனின் முகம்
உன் முகத்திற்கு ஒளியேற்றவில்லையெனில்
ஒரு குவளை தண்ணீர்
உன் தாகம் தணிக்கவில்லையெனில்
ஒரு கண்ணாடி முன்
நீ புன்னகைகொள்ள இயலவில்லையெனில்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகளாய்
உனக்கு உன் வாழ்க்கை ஒருபோதும் காணப்படவில்லையெனில்
உணர்ந்துகொள்:
‘நீ இருக்குமிடம் சூர்யமறைவுப் பிரதேசம்!’

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP