Wednesday, March 2, 2011

குருவியுடன் சற்று நேரம்

நான் அதைப்பார்த்து புன்னகைத்தவுடன்
அது கேட்டது
'என்ன செய்துகொண்டிருக்கிறாய் ? '
'ஒரு கவிதையை எழுதப்பார்க்கிறேன் '
'புரியும்படியாக சொல் '
'உன்பார்வையில் சொல்ல வேண்டுமானால் பறத்தல்
படிப்பவர்களை கொஞ்சம் பறக்கும்படி செய்கிற
சில வரிகள் எழுத முயன்றுகொண்டிருக்கிறேன் '
'உனக்கு பறக்கத் தெரியுமா ? '
'பறக்கத்தெரிந்தவன்தானே எழுத முடியும் ? ' '
'அப்படியா ரொம்ப சந்தோஷம்
அதுதான் உன்னைப்பார்த்த உடனேயே
எனக்கு உன்மேல் ஒரு பிரியம்
ஏற்பட்டது போலிருக்கிறது
சரி இப்போது என்னோடு வருகிறாயா
ஒரு ரவுண்டு போய்வருவோம் '

இருவரும் பறக்கதொடங்கினோம்

'எங்கே போயிருந்தீர்கள் இத்தனைநேரம் ?
எத்தனை முறை கூப்பிட்டேன் தெரியுமா ? '
மாடிப்படி ஏறிவந்து எரிச்சலுற்றாள் மனைவி

எழுதுவதிலேயே மூழ்கி இருந்திருக்கிறேன் என்றேன்
வெற்றுக்காகிதத்தை சுட்டிக்காட்டி
விடாது அவள் துரத்த
உண்மை வெளியே வந்துவிட்டது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP