விதையும் கனியுமான பாரம்
அந்தோ! அன்று அச்சிறு செடி
வழிவிலங்கொன்றின் கால்மிதிபட்டோ
காட்சியளித்தது அப்படி?
பதறி அதனருகே சென்று குனிந்து
அதைத் தொட்டு நிமிர்த்தியபோது கண்டேன்:
அதனை அவ்விதம் இழுத்துக் கவிழ்த்தியிருந்த
இலைமறை கனியொன்றின் பாரம்!
கம்பீரமான ஒரு கல்மரமாய்த் திமிர்ந்து
வான்நோக்கி நிமிர்ந்து எழுந்து
ஒரு பூங்கொத்தைப்போல்
தாங்கி நிற்கலாகாதா,
விதையும் கனியுமான பாரத்தை
அச் செடி?