Friday, March 29, 2024

ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை - தேவதேவன் கவிதைகள் பற்றி பூங்குழலி வீரன்

வல்லினம் பெப்ரவரி 2013 இதழில் வெளிவந்த கட்டுரை.

வண்ணத்துப்பூச்சிகள் கவிஞர்களுக்குப் மிக பிடித்த நண்பர்கள் எனலாம். அவர்களின் துயர் பகிரும் உயிராகவும் கூட இந்த வண்ணத்துப்பூச்சிகள் உலவித் திரிந்திருக்கின்றன. குழந்தைகளுக்கும் உற்ற தோழனாகவும் உறக்கத்தில் அலறி எழுவதற்கான காரணமுமாகவும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. சிறியதும் பெரியதுமான ஆங்காங்கே மொய்த்துக் கிடந்து எப்போதும் படபடத்த சிறகோடு பறந்தபடியேயிருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் மிக அழகாக எதையோ நமக்கு உணர்த்தியபடியே இருக்கின்றன. ஒரு வண்ணத்துப்பூச்சி எப்போதுமே ஒரு வண்ணத்துப்பூச்சியாக பிறப்பதில்லை.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

”ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை” கவிதை இங்கே


Wednesday, March 27, 2024

மரங்கள், பூக்கள், தேவதைகள்

ஒளிரும் வானத்தைச்
சிறிய பெரிய
விண் சுடர்களாய்க் காட்டுகின்றன
வனப் பூங்காவின் மரங்கள்!

விண்ணில் ஒளிர்ந்தாலும்
மண்ணை வாழ்த்தவே
தரையில் வந்து
விரிந்து கிடக்கும் பூக்கள்.

தன் வேர்களையும்
இப் பேரண்டத்தின் வேர்களையும்
நன்கறிந்து கொண்ட
பெருந் தேவதைகள்!

Monday, March 25, 2024

அவரின் புன்னகை

இயங்கும் பெருக்குமாறோடு
விளையாடின சருகுகள்
கொஞ்ச நேரம்
அவரும் அவைகளுடன்!

Friday, March 22, 2024

தேவதேவன் கவிதை பற்றிய கட்டுரை "காலம், நேரம், இடம்" - ஜி.எஸ்.எஸ்.வி.நவின்

2021ல் வெளிவந்தது.

நத்தையின் அகத்துள் அமைந்த பெரும்புரவி என்கின்ற படிமத்திற்கு இணையானது கீழுள்ள தேவதேவனின் கவிதை. ஒரு ஆறுக்கு ஆறு அறையில் எப்படி இருளும், ஒலியும் ஒரு சேர முயங்க முடியும். ஒருவன் எப்படி தன் வீட்டு அறையின் மறுமுனையில் அமெரிக்காவை பொருத்தி காண முடியும் என்றால் அது கவிஞனின் வாழ்வில் மட்டுமே சாத்தியம்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Wednesday, March 20, 2024

யாருமேயில்லாத பழக்கடை

யாருமே இல்லாத அந்த பழக்கடை
ஆசீர்வாதிக்கப்பட்டது போல இருந்தது!

வானத்தையும் மரத்தையும் பறவைகளையும்
பக்கத்துக் கடைக்காரர்களையும்
காவலாக வைத்துவிட்டு
தேனீர்க் கடைக்குச் சென்றிருந்த பழக்கடைக்காரன்
வேகமாய் திரும்ப வந்தபோது

அருந்திய தேநீரின் சுவையாலோ
கண்டு கொண்ட மனிதர்களைக்
கண்டுகொண்ட விழிப்பினாலோ
கடமை மிக்கதொரு
கடவுளைப் போலவே தோன்றினான்!

Monday, March 18, 2024

நிறை

தாகம்!
’தண்ணீர்’ என விரல் அடையாளமிட்டுக் கேட்கிறீர்கள்.
வருகிறது
தேவாமிர்தம் என அருந்தி முடிக்கிறீர்கள்
பெற்றுக் கொண்ட குவளையுடன்
இன்னும் கொஞ்சம் கொண்டு வரட்டுமா
என்று கேட்கிறார்
போதும் என்கிறீர்கள்
அப்படி ஒரு நிறைவுடன்தானே?

பணம் பொருள் சேர்ப்பதில் மட்டும்
ஏன் இந்த நிறைவு இல்லை?

Friday, March 15, 2024

பரிசுப் பொட்டலமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை! - தேவதேவன் பேட்டி

ஜனவரி 2019ல், இந்து தமிழ் திசைக்கு கொடுத்த பேட்டி இது

இயற்கை வியப்பு, ஆன்மிக அம்சத்தைத் தனது கவிதைகளின் அடிப்படையாகக் கொண்டு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் கவிஞர் தேவதேவன். கடவுளின் இடத்தில் இயற்கை ஒழுங்கை வைத்து அதன் விகாசத்தில் அது தரும் ஆனந்தத்தில் இயங்கும் பக்திக் கவிஞர் இவர். ‘கவிதை பற்றி’ என்ற சிறிய உரையாடல் நூலும் முக்கியமானது. முதல் தொகுதியான ‘குளித்துக் கரையேராத கோபியர்கள்’ தொடங்கி நாற்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். ‘புரியாது கழிந்த பொய்நாட்கள் எல்லாம்’ என்பது இவரது சமீபத்திய தொகுப்பு. கவிதையை உயிர்த்துவம் மிக்கச் செயல்பாடாகக் கருதும் தேவதேவனிடம் உரையாடியதிலிருந்து… முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

”ஒரு புல்லின் உதவிகொண்டு” கவிதை இங்கே


Wednesday, March 13, 2024

அசையும் பல்

என்ன காலம் இது?
என்ன வேலை இது?
அசையும் பல்லை
சுட்டு விரல் ஒன்றால்
தொட்டு அழுத்தி
ஆட்டு ஆட்டு என்று
ஆட்டிக் கொண்டிருந்தான் அவன்!

அதுவும் ஆட்டத்தில்
ஆட்டத்தை இரசித்துக்கொண்டே
ஆடிக்கொண்டிருந்தது
உயிரினின்றும்
கழன்று போகப் போகும்
கவலையே இல்லை
மரணம் பற்றியோ
எதிர்காலம் பற்றியோ
இழப்பு பற்றியோ
எந்த நினைவுகளுமே இல்லாத
பேறுபெற்ற வாழ்வின்
பெருநடனத்திலல்லவா
திளைத்துக் கொண்டிருந்தது அது!

Tuesday, March 12, 2024

நடைவழியில்

நடை வழியில் கிடந்தது ஒரு சுள்ளி
இந்த அமைதியான காலை வேளையில்
அது தன் உள்ளே வைத்திருந்த குரல் கேட்கவே
அதை நெருங்கி
அவன் தன் பாதங்களால் தொட்டு அழுத்தினான்
அதுவும் மகிழ்ந்து வெளிப்படுத்திய
இனிமையான அந்தக் குரல்
உரைத்தது காண்:
“வெளியினதும் உன்னுடையதுமான
உறவு அன்றி ஏதுமில்லை, அன்பா!”

Friday, March 8, 2024

தேவதேவன் கவிதைகள் -1 & 2, முதல் 16 தொகுதிகளின் தொகுப்பு - வம்சி பதிப்பகம்


தேவதேவனின் முதல் 16 கவிதைத் தொகுப்புகள் , இரண்டு புத்தகங்களாக வம்சி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.

வாங்குவதற்கு இங்கே சொடுக்கவும்.


Wednesday, March 6, 2024

மலர்கள்

நடைபாதையில்
செம்பொற்கம்பளம்போல் விரிந்து கிடந்த
டுயூலிப் மலர்களைக்
கூட்டிவைத்திருந்தார் தோட்டக்காரர்

எந்த ஒரு மலரும்
தன் தனித்தன்மையை விடாமலேயே
கூடிக் களித்துக் கொண்டு
அப்போதும் ஓர் ஒற்றைப் பூச்செண்டு
மலர் போல!

Monday, March 4, 2024

மலர்

ஒரு நாளுக்குள் உதிர்ந்து
ஒரு வாரத்திற்குள் சுருண்டு
உலர்ந்து விடும் இந்த மலர்
தனக்குள் வைத்திருக்கும் காலத்தை யார் அறிவார்?
இந்த மொத்த உலகின் ஒரு பகுதியாகவே
தன்னை உணர்ந்த மலர்
இந்த மொத்த உலகிற்கும் தனது மணம்
பரவிக் கொண்டிருப்பதைத்தான் அறியாதா?
துயரங்களேயற்ற அமைதியான
முழுவாழ்வையும் வாழ்ந்து விடத்தானே செய்கிறது?

இந்தப் பேரன்மையும் பெருவாழ்வையும்
பேரழகையும் தெரிந்து கொண்டுதானா
காதலன் காதலிக்கு மலரை நீட்டுகிறான்?
காதலி தன் தலையில் சூடிக் கொள்கிறாள்?

Saturday, March 2, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

வரலாறு அதிகாரமிக்கவர்களாலும் பூசிமெழுகுபவர்களாலும்தான் எழுதப்படுகிறது என்றாலும் அவற்றையும் மீறி உண்மையை ஆய்ந்துணர முடிபவர்களால் நாம் கண்டடைவது என்ன? நாம் கண்டுகொள்ளாததும் கண்டுகொள்ள வேண்டியதும் என்ன என்பதுதானே அதுவாக இருக்க முடியும்?
அதுதான் மெதுவிஷமாய் நம் உள்ளும் புறமுமாய் எங்கும் பரவிக்கிடக்கிறது என்கிறோம். கண்ணுக்குத் தெரியாத அதற்கு நாம் என்னென்ன(சாத்தான்!) பெயர்களைச் சூட்டினாலும் அது பெயர்களில் மறைந்து கொண்டு மீண்டும் மீண்டும் நம்மைப் பற்றிக் கொள்கிறது. மெதுவிஷமும் பற்றமுடியாத ஒரு புதுமனிதனை நாம் உருவகித்துப் பார்க்கிறோம் இப்போதும். விளம்புவதற்கப்பாற்பட்ட ஓர் செயலாக, செயல்களாக, அது உலவ வேண்டும்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Friday, March 1, 2024

பேறு பெற்றோர்

தன் காலடியில் ஒரு சிறு சக்கரம்
இருப்பதைக் கண்டு கொண்டவர்கள்
பேறு பெற்றோர்

அதுவே தர்மசக்கரம் என்பதை உணர்ந்தோர்
பெரும் பேறு பெற்றோர்

அதனை இயக்கும் பிடி கிடைத்தோர்
மீப் பெரும் பேறு பெற்றோர்

அதுவே மொத்த உலகத்தையும்
விபத்தே இல்லாமல் படைத்து இயக்கும்
மய்யமற்றதோர் மய்யப்
பெருஞ்சக்கரம் என்பதை உணர்ந்தோர்
மீ மீப் பெரும் பேறு பெற்றோர்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP