அந்த நகரி்ல்…
அந்த நகரில் எவரும் அறியாதபடிக்கு
மர்மமான ஒரு தீவிரவாதக் குழுமம்
தோன்றி அலைந்து கொண்டிருந்தது
எந்த ஒரு திட்டமும் சிந்தனையுமில்லாமலே
(மாறாத இந்த உலகை மாற்றிவிடத்தான்)
எந்த ஒரு மனிதர்களும்
தாங்கள் அப்படி ஒரு குழுமத்தில்
உறுப்பினர்களாயிருக்கிறோம்
என்பதையே உணராதபடி
அந்தக் குழுமம் பெருகிக்கொண்டேயிருந்தது
மெதுவிஷத்தாலும் தீண்டப்பட்டிராத
அந்த மனிதர்கள் எல்லோரும் கூடி
எந்த இடத்திற்கும் சென்று சேராத
ஒரு தானியங்கும் சாலையையும்
எவர் கண்களுக்கும் புலப்படாத
ஒரு பூந்தோட்டத்தையும்
எந்த ஒரு மனிதனையும் காயப்படுத்திவிடாத
(எளிமையும் இரக்கமுடைய)
கவிதை எனும் மொழியையும் ஒலியையும்
படைத்துக் கொண்டிருந்தார்கள்.