Wednesday, June 5, 2024

கண்கள் மட்டுமே தொடும் மலர்கள்

மேல்வானத்
திரை நடுவேயும்
மரங்களிடையேயும் வந்து
பூத்தது காண்
ஒரு மாலை வெயில்ப் பெருமலர்

காதல் கொண்டு அதனைக்
கொய்ய நெருங்கிக் கொண்டிருந்தது
அந்தி என்னும் ஒரு செம்பொன் மலர்

அதைத் தொடர்ந்து
விண்மீன் புள்ளிகளுடன்
ஒரு காரிருள் மலர்

அதைத் தொடர்ந்து
கொய்த மலர்கள் கோடியுடன் வந்து
கவிழும் ஒரு பூக்குடலையாய்
ஒரு காலை மலர்

அதைத் தொடர்ந்து
பசுமரக் கிளை இலைகளெல்லாம்
விண்மீன்களாக்கி விளையாடும்
நண்பகல் என்னும் ஒரு பேரொளி மலர்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP