குண்டு துளைக்காத ஆடைகளை…
நானற்ற இழைகளால் நெய்யப்பட்ட
குண்டு துளைக்காத ஆடைகளை
நீ அணிந்து கொண்டால் போதுமா?
பகையையும் பாதுகாப்பையும்
பயத்தையும் வெறுப்பையும்
போர்களையும் துயர்களையும்
அவற்றின் ஊற்றுக் கண்ணையும்
அதைக் கண்டு கொள்வதால் மூடி
அங்கேயே திறந்து கொள்ளும்
பேரன்பின் ஊற்றையும்
அது தரும் குண்டு துளைக்காத ஆடையையும்
உரைக்க வேண்டாமா
உன் வாழ்வும் சொற்களும்?