Friday, August 29, 2025

கனியின்…

கனியின்
பூ மலரும்
ஒரு கணத்தையும்
கற்றிராத மனிதர்கள்தாம் கோடியோ
இந்த உலகில்?
காலத்தின் சங்கிலித் தொடர் பாலையில்
பூக்கவே பூக்காத ஒரு மலர்
பார்வை மின்னலில் அறுந்துவிழும் சங்கிலியால்
கண்டடைந்த பொன்வெளிதானோ
கனியும் மலரும்?

Read more...

Wednesday, August 27, 2025

வசமாக மாட்டிக் கொண்டானோ?

என்ன பிழை இது?
இனி எப்போதும்
கவனமாக இருக்க வேண்டும் என்பதை
உணர்த்திக்கொண்டே இருக்கிறது
கழுத்துப் பக்கம் பட்டன் திறந்து கிடக்க
எடுக்கப்பட்டுவிட்ட புகைப்படம்?

Read more...

Tuesday, August 26, 2025

கவிஞனுடன்… வேலாயுதம் பெரியசாமி

துறவிகள் மலையில் மலையைபோன்ற தனிமையில் இருப்பவர்கள். அந்த தனிமையில் நமக்கு பங்கோ, இடமோ துளி கூட கிடையாது. ஆனால் கவிஞர்கள் நதிபோல மண்ணிலேயே நம்முடன் இருப்பவர்கள். நதிகளில் நீந்தலாம், விளையாடலாம், ஆனந்திக்கலாம். கவிகள் நம்முடனும் இருப்பார்கள், தனிமையிலும் இருப்பார்கள்.



Read more...

Monday, August 25, 2025

அந்த அற்புத இசையின் பின்னால்…

அந்த அற்புத இசையின் பின்னால் நின்றபடி
இத்துணை உக்கிரமாய்
அந்த இசையைக் கேட்டுக் கொண்டிருப்பது யார்?

நிலைகுலைய வைக்கவில்லையா
செயல்களனைத்தையும் சாதிக்கக்கூடிய
எத்துணை பெரிய அற்புத இசையையும்
சுத்தமாகத் தகர்த்துவிடும்
பின்னால் ஓடத் துவங்கும் நம் சிந்தனைகள்?

Read more...

Friday, August 22, 2025

அன்பு எனும் பெயரால்…

துயருடையவனால்
எப்படி அன்பு செலுத்த முடியும்?
ஆழமற்றதும் ஆபத்தானதும்
தந்திரங்களாலானதுமான
பற்று, பிரியம், பாசம், ஒற்றுமை, நட்பு
என்பவற்றால்
அன்பு எனும் பெயராலே
காலம் காலமாக
நம்மையும் உலகையும்
ஏமாற்றிக் கொண்டேயிருப்பவர்கள்தாமே, நாம்?

துயருடையவனால்
எப்படி அன்பு செலுத்த முடியும்?
புண்பட்ட கோணல் மனிதர்களால்
உருவானதல்லவா
போரும் குழப்பமும் வலிகளுமான
இந்த உலகம்?

ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை
ஒரு மனிதனைக்கூட காண முடியவில்லை
என்ற மனிதன்
தனக்குள்ளாவது
ஒரு மரத்தையோ மனிதனையோ
கண்டிருக்க மாட்டானா?

தன் துயர் என்பதே இல்லாதிருந்ததால்தானே
அன்புடையவனாயிருந்தான் அவன்?
தன் துயர் அல்ல
துயர்மலி உலகின்
பெருந்துயர்தானே
பரிவு என்றும் பேரன்பு என்றும்
அவனிடம் இருந்தது?

Read more...

Wednesday, August 20, 2025

மின்னற் பொழுதே தூரம்

நான் நான் நான் எனும்
நம்முடைய துயர்களிலிருந்து பிறப்பவைதானே
போர்களும் குழப்பங்களும் வலிகளும்?

இந்த உலகத் துயரங்களே
நம்முடைய துயரங்கள் எனும்
மானுடத் துயரங்களாகும்போதுதானே
பிறக்கின்றன
அன்பு, பரிவு, பேரன்பு, கடவுளின் ராஜ்ஜியம்
என்பதெல்லாம்?

நம்முடைய துயருக்கும்
மானுடத் துயருக்குமிடையே
மின்னற் பொழுதுதானே தூரம்?

Read more...

Tuesday, August 19, 2025

தேவதேவன் அருகிருத்தல்- நாகநந்தினி

 அனைத்து வாழ்வுகளும் மகத்தானவைஅதே சமயம் அவை பெரிய அடையாளங்களை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லைஇயல்பாக இருந்தால் போதும் 



முழுவதும் படிக்க...

Read more...

Monday, August 18, 2025

ஒரு பேராளுமைபற்றி

அறியாமை மற்றும்
அறிய முடியாமையையும்
அறிதல்தானே
அறிகிறது?

அறிவாகி
தன்பெயரையே கெடுக்கிறதையும்
அனைத்து துயர்களுக்கும்
பெருந் தீமைகளுக்கும்
காரணமாகிவிடுகிறதையும்
அவன் (அறிவு) வேறு
இவன் (அறிதல்) வேறு என்பதையும்
அறிதல் தானே அறிகிறது?

எவ்வளவுதான் பெரியவனானாலும்
அவனை, தனக்குரிய இடத்தை விட்டு
எங்கும் நகராதபடி கட்டிப்போட்டுவிட்டு
அவனோடு நாம் எவ்வளவு எச்சரிக்கையோடு
இருக்க வேண்டும் என்பதை
அறிதல்தானே சுட்டுகிறது?

நம்பிக்கை, நம்பிக்கையின்மை
இரண்டுமே அறிவாகி
முடமாகி விட்டிருக்கிற உலகில்
அறிதல்தானே எதுவாகவும் மாறாத
ஆற்றலாக இருக்கிறது?
அனைத்து துயர் இருளையும்
விரட்டியடித்துவிடத்தக்க
ஒளியாக இருக்கிறது?

அறிதல்தானே
பார்க்கவும் கேட்கவும் கவனிக்கவும் சொல்கிற
வழிகாட்டியாக இருக்கிறது?

மனிதனல்ல,
எந்த மனிதனுமில்லாத
ஆளுமைப் பண்புகள் என்றேதுமில்லாத
அறிதல்தானே மகாஞானியாக-
பேராளுமையாக இருக்கிறது?

Read more...

Friday, August 15, 2025

கவிதைத் தொழில்

கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
நிறுவ வேண்டுமல்லவா?

”எனது அழகினதும் ஆரோக்கியத்தினதும் இரகசியம்
கவிதைதான்” என்றபடி போஸ் கொடுக்க
ஒரு கவிஞனைக் கொண்டு வந்து நிறுத்தினோம்.

“கடை விரித்தோம், கொள்வாரில்லை”
என்று சொல்ல
நாம் ஒன்றும் பழைய வள்ளலாரில்லையே

பார்த்துவிடலாம் ஒரு கை!

Read more...

Wednesday, August 13, 2025

காலத்தின் ஒரு விதையாகத்தானே…

காலத்தின் ஒரு விதையாகத்தானே
கருப்பைக்குள் ஊன்றப்பட்டது
ஒரு மனித உயிர்?

அது இயல்பாக அறிந்துள்ளது
காலத்தைத்தானே?
மரணத்தை அறிந்திருந்தால் அல்லவா
வாழ்வை அறிந்திருக்கும்?

மரணம் எங்கே?
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்
வீட்டையும் வெளியையும்
பிரித்துக் கொண்டு நிற்கும்
நிலைவாசல் போலல்லவா அது நிற்கிறது?

மரணத்தை அறிந்திராதவனும்
விலகி நிற்பவனுமான
மனிதனுக்கும் மனிதவாழ்வுக்கும்தான்
உய்வு ஏது?
நம் துயரங்களின் விளைநிலம்
காலம்தான் என்பதையும்
காலத்தையும்
காலத்தைக் கழுவித் தூய்மையாக்கும்
மரணத்தையும்
நாம் அறியாதவரை
நமக்கு விடுதலை ஏது?

நம்மால் உச்சிமுகரப்படும்
உயிர்ப் பிறப்பிற்காக
மானுடப் புதுவாழ்விற்காக
எப்போதும் தூய்மையின் உச்சத்திலிருக்கும்
நம் கருப்பையும் பிறப்புறுப்புமே
கழிவு உறுப்பாகவும் செயல்படுவது
இடையறாத தூய்மையினைச்
சுட்டுவதற்காக அல்லவா?
மரணத்தைச் சுட்டுவதற்காக அல்லவா?

மிகமிகச் சிக்கலாகிக் கிடக்கும் இந்த விடுதலை
மிகமிக எளிமையானதும்தானே?
முயன்றால்
மின்னற் பொழுதுதானே தூரம்?

Read more...

Tuesday, August 12, 2025

தேவதேவன், கவிதையின் மதம் - க சரத்குமார்

கவிதை உலக வாழ்வை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட முடியாதுகவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும்வேறு எதற்கும் கவிதையை மதிப்பிட அதிகாரம் கொடுக்கப்படவில்லை.



கவிதை என்பதை ரத்தினமாக பிரமிள் சொல்வதை குறிப்பிட்டுரத்தினம் ஒரே சமயத்தில் இயற்கையின் அற்புதத்தின் குறியீடாகவும்பேராசையின் குறியீடாகவும் திகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சிக்கொள்ள செய்வதே கவிதை என்று குறிப்பிடுகிறார்.



 

முழுவதும் படிக்க...


Read more...

Friday, August 8, 2025

நத்தை

அடைய வேண்டிய இடத்தையும்
தன்னுடைய வீட்டையும்
பேரமைதி மிளிரும்
நிதானமான நடையையும்
கண்டு கொண்ட பேருயிர் !

தான் கண்டுகொண்டதிலேயே
மாட்டிக் கொண்ட சிற்றுயிர் !

Read more...

Wednesday, August 6, 2025

ஒன்றுதான் அது

ஒன்றுதான் அது
உள்ளதுதான் அது

ஆனால் அது
செயலாக வெளிப்படும்போது மட்டும்தானே
கடவுளாக இருக்கிறது?

தன்னை மய்யம் கொண்ட
எந்தச் செயலிலும் இல்லாதது

ஒன்றிலிருந்தும்
உள்ளதிலிருந்தும்
ஊற்றெடுத்து வருகிறது.

Read more...

Tuesday, August 5, 2025

அருகிருத்தல், தேவதேவன் – பிரீத்தி கருணா

நாற்காலி இருந்தும் சம்மணமிட்டு கீழே அமர்ந்துஎதிலும் சாயாமல் நாள் முழுதும் உரையாற்றினார்தன்னால் நான்கு நாட்களுக்கு கூட உணவில்லாமல் இவ்வாறு பேச முடியும் என்றது கவிஞரின்கவிதையின் தீவிரத்தை உணர்த்தியதுநான் உணர்ந்த வரை அவர் நாள் முழுதும் திகழ்ந்ததுஉணர்த்த முனைந்தது– பேரன்புகருணைகளங்கமின்மைஉறுதிகாதல்காலமும் இடமும் இலாத நிகழ்தல்இன்னும் சொற்களால் என்னால் முழுமையாய் விளக்க முடியாத நிலை.


முழுவதும் படிக்க...




Read more...

Monday, August 4, 2025

நாம்தான் அது

அடைய வேண்டிய இடம்
என்று ஒன்றுண்டா?

இங்கே வந்துவிடுங்கள்
இங்கே வந்துவிடுங்கள்
என்று சொல்வதற்கு என்று
ஓர் இடம் கிடையாது
ஆனால்
இதை விட்டுவிடுங்கள்
இதை விட்டுவிடுங்கள்
என்று சொல்வதற்கோ
ஒவ்வொரு நொடியும்
ஒரு முந்தைய நொடி உள்ளது.

நாம் விட்டு விடுதலையாகி
நிற்கும் போதெல்லாம்
அடைய வேண்டிய இடத்திற்குத்தான்
வந்து சேர்ந்துவிடுகிறோம்.

அது ஒரு இடம்கூட அல்ல
நாம் தான் அது
இந்த பேரண்டம் !
எந்த ஒரு சொல்லிலும்
சிக்கிக் கொள்ளாது
ஒளிரும் பேருண்மை!
அல்லது
ஒளி மற்றும் பேருண்மை!

எதுவானாலும் சரி
அது சொல்லப்படுமபோது அல்ல
விட்டு விடுதலையாகி
ஒரு பொருளாகவோ செயலாகவோ
இருக்கும்போதுதான் அது உண்மை.

இப்போது "நாம்தான் அது" என்ற சொல்லை
எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறோம்?

Read more...

Friday, August 1, 2025

ஒரு பறவை?

மானுடத் துயர் கலக்காத
எத்தகைய அமைதிப் பெருவெள்ளத்தைப்
பார்த்துத் திளைத்துக் கொண்டிருக்கிறது
வானளாவிய பெருமரத்தின்
உச்சாணிக் கிளையில்
வந்தமர்ந்து கொண்டிருந்தது?

பெயரும் உருவமுமில்லாத ஒன்றின்
சிறியதொரு பெயரும் உருவமும்?

மோனப் பெருவெளியின் ஒரு பிஞ்சுக்
குரல் சொல் உரு.

ஒரு சொல்லால் அனைத்தையும்
உபதேசித்து விட முடியுமா?

அங்கிருந்து- அசையாமல்
அது நின்று கொண்டிருந்தது-
நகர்ந்தது. அபூர்வமாய்!

வானில் சிறகடிக்கும் ஒரு பறத்தல்
உபதேசமும் உபதேசப் பெருக்கமுமான
வியர்த்தம்தானா?
தானே இல்லாதபோது தான் எப்படி
அதை உபதேசித்திருக்க முடியும்?
ஒரு சொல்தானே பறந்து கொண்டிருந்தது
அதில் எங்கே இருக்கிறது உபதேசம்?
ஒவ்வொருவரும்
தானேதான் கண்டுபிடிக்க முடியும் உண்மைக்கு
பிறருடைய இடம் எங்கிருக்கிறது ?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP