Wednesday, November 20, 2024

கோயில் திருவிழாக்களும் குழந்தைகளை வசீகரிக்கும் பொம்மைகளும்

கோயில் திருவிழாப் பொருட்காட்சிகளில்தான்
பெண்களுக்கான அணிகளுக்கும்
யாவருக்குமான உணவுப்பண்டங்களுக்கும்
மேலாக ஒளிர்வது
குழந்தைகளுக்காகக் குவிந்து கிடக்கும்
பொம்மைகள்தான் அல்லவா?

குழந்தைகளின் விழிகளிலும்
அவர்கள் விரும்பும்
பொம்மைகளின் விழிகளிலும்
ஒன்றை ஒன்று ஈர்ப்பதுபோல்
ஒன்றுபோல் சுடர்வது என்ன?

மெய்ம்மையான மதத்தையும்
அதன் தெய்வீகத்தையும்
நாம் பார்த்து விட்டோமா?

பெரியவர்களின் கடவுள் சிலைகளுக்கும்
மதத்திற்கும் நம்பிக்கைகளுக்கும் வெளியே
போட்டியோ தொடர்போ இல்லாத விளக்கமாக
ஒரு பெருஞ் சொல்லாக
கூட்டமும் கொண்டாட்டமும் குதூகலமுமாக
மனிதனுக்குத் தேவையானதெல்லாம் இருக்கிறதல்லவா?
பின் ஏன் இப்படி இந்தத் திருவிழா
கலைந்து போகிறது?

துயர இருள் மீண்டும் மீண்டும் இவ்வுலகைக் கவ்வ
கூடிக் கூடிக் கலையும்
இத் திருவிழாக்களின் இரகசியமும்
ஒருநாளும் மனிதர்கள் இதனை கண்டுகொள்ளாததின்
கொடுமையும்தான் என்ன?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP