Saturday, October 12, 2013

கடற்கரை நகர்

சின்ன வயதில்
நேராய் கிழக்குநோக்கி நடந்து சென்று
கடலை நான் பார்த்து வருவதுண்டு.
இன்று அந்த இடம், நிலம் விழுங்கி விழுங்கித்
தூரப் போய்விட்டது.
ஏற்கனவே
நலிந்த பகுதியாயிருந்த எமது கடற்கரை
நகரத்தின் சாக்கடை கலந்த ஓர் ஏரி போலானது.
கடலின் பெரும் பெரும் உயிர்களால்
சுத்தமாகி விடாதபடிக்கு தனித்துவிட்டது.
கண்ணெட்டுந் தூரத்திலிருந்த தீவும்
நிலம் தீண்டி தீபகற்பமானது.
கப்பல்கள் வந்து நிற்கத்தகும் கடல் ஆழம் காண
கடலூடே நெடுந்தூரம்
சாலையமைக்க வேண்டியதாயிற்று

இன்று
பொங்கி எழுந்து
நுரை சிலிர்த்து வீசிவரும்
அலைகள் காண,
கால்களை நனைத்து, திரும்பத் திரும்பத்
தன்னுள் என்னை அழைத்துக்கொள்ளும் கடல் காண
இந்த நகருக்குள்ளே பஸ் பிடித்து
இந்நகரைக் கடந்து செல்லவேண்டியதாயிற்று
ஆனாலும்
கடலின் இடையறாத பெருங்குரல் மட்டும்
எங்கும் எப்போதும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP