Tuesday, October 15, 2013

ஷம்லா குன்றில் ஒரு சூர்யோதயம்

தன்னந்தனியே
ஓடோடி வந்து
நான் அந்த இடத்தைக் காண விழைவேன்
சூர்யன் உதித்துவிடும் முன்னே!

ஆனால் அந்தோ
நான் அங்கே வந்த உடனேயே
சூர்யன் உதித்துவிடுகிறது!

சூர்யன் வரும்முன்னே
வந்துவிடும் அதன் மெல்லொளியில்
இருளும் குளிரும்கூட இதமாயிருந்தது

பருவமொட்டின் ஊசிநுனியை
உள்நின்று மோதியது
பிரபஞ்ச விரிவின் பெருக்கு

குன்றை நேசித்தபடியே
அதைப் பிளந்துகொண்டிருந்தது மரம்
அந்தப் பிளவில் தம் பீடமைத்தன பறவைகள்
குன்றை நேசித்தபடியே
அதைக் குடைந்தேன் நான்
குன்றை நேசித்தபடியே
என் கவிதைகளை அதன் மீது
கிறுக்கினேன் நான்

ஓ ஷம்லா குன்றே!
காலை உணவைக் கைவிட்டுவிட்டு உலாவுகிறேன்
அடிவானில்
என் பசியைப் போல்
உதித்து ஏறிக்கொண்டிருக்கும் சூர்யன்முன்
’என்னைப் புசி’ என்னும் ஓர் அற்புத உணவாய்
நான் நின்றேன்
ஓ ஷம்லா குன்றே!
இனி இங்கிருந்து வேறெங்கும் நகர
விரும்பும் வேட்கையெனும் சக்தியற்றுக்
கிடக்கும் ஒரு பெரும் ஏரி நான்
சூர்யவொளியின் தீவிரத்தை எதிர்கொண்டு
என்னிலிருந்து உயர்ந்தெழும்
நீராவியல்லவோ என் கவிதை!
ஏதோவொரு கோணத்தில்
சூர்யனாய்த் தகதகத்தது ஏரியும்.
சூர்யனின் உன்னிப்பான பார்வையில்
பளிங்கு ஏரியில்
பளீரெனத் துலங்கியது
படிந்துள்ள அனைத்தும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP