Thursday, October 3, 2013

ஆப்பிள் மரம்

என் ஜன்னல் வழியே
வானையும் நட்சத்ரங்களையம் மறைத்து நின்றது
ஒரு நூறு பறவைகளின் ஓசைகளுடன்
இலை செறிந்து அடர்ந்து
இருண்டிருந்த ஒரு மரம்

நான் அறிந்த பறவைகளின் ஓசை கேட்டு
இன்புறுகிறேன்,
அறியாத பறவைகளின்
அறியாத ஓசை கேட்கையில்
அந்த மௌனம் –
காரணமற்றுக் கண்ணீர் மல்கவைக்கும்
அந்த மௌனம்…

அறிந்தும் அறியாததுமான
பறவைகளின் கோஷ்டி கானம்
இலைகள் அமைத்த இருளைக்
கொத்திக் கிழித்துக்கொண்டிருக்கும் வேளை,
அந்த இருளின் ஆழத்துள்ளிலிருந்து
ஏதோ ஒன்று
எனக்கு மிக அருகில்
கதகதக்கும் ஜீவனுடன்

எனது பயத்தின் நரம்புகளைப் பிறாண்டியபடி
எச்சில் கனியுடன் ஓர் அணில்.
சர்வ ஜாக்ரதையுடன் அதிநுட்ப உக்கிரத்துடன்
அங்கும் இங்கும் அசைந்தன அதன் கண்கள்
அதன் இயக்கம் பம்மல், தாவல்
விர்ர்ர்களுடன்

வீட்டுக் கூரைகளாய் அமைந்த வெளியில்
என் ஜன்னல் கம்பிகளை முறைத்தபடி
மதில் மீது விர்ர்ரிட்டு ஓடித் தாவி
பறக்கும் வேட்கையில்
சிறகைக் கட்டிக்கொண்டு குதித்தவனைப்போல்
குதித்தது, மண்ணில் விழ விரும்பாது
ஒரு பறவையினுடையதாகி விட்டிருந்தது
அதன் குரல் மட்டுமே

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP