சுட்டுவிரல்
அது பிறந்ததுமில்லை
இறக்கப் போவதுமில்லை.
வளர்ச்சி, வளர்ச்சிப் படிநிலைகள்
என்றேதுமில்லை அதனிடம்.
அளவிடமுடியாத எடைபொருந்திய
அதன் மவுனம்,
அவன் குழந்தைப் பருவத்திலிருந்த
அதே மவுனம்,
அவன் இல்லாதபோதும் நிலவுகிறது,
பணி ஓய்வுக்குப் பின் அதிலே அவன்
கூடுதலாய்த் திளைக்க-
எப்போதும் எங்கும் நிலவுகிறதுதானே,
பேரளவினதாய்க் கனலும்
இந்த மவுனத்தின்
ததும்பும் வெறுமையில்
நான் எனும் பிரக்ஞைவலிநிலையே
தான் எனும் இவ்வுலகென்றும்
அறிந்தோனால்
என்ன செய்ய இருக்கிறது இங்கே!
எத்தகையது
காலத்தோடு நமக்குள்ள உறவு!
காலம் அவனைத் தன் சுட்டுவிரலாற்
நகர்த்திக் கொண்டிருக்கும் வெளியில்
காலத்தின் மேடை நின்று
நாம் செய்யப் போவதென்ன,
காலத்தினின்றும் அவன்தன்னைக்
கழற்றிக் கொள்வதைத் தவிர?
0 comments:
Post a Comment