Monday, September 16, 2024

கடவுள் – 3

இன்னும் இன்னுமாய் பெரிய பெரிய
வீணாற்றல்கள் நிறைந்த நம் உலகில்

அழிவற்ற பேராற்றலொன்றால்
ஆட்கொள்ளப்பட்டவர் போல்
அவர் காணப்பட்டார்!

எந்த இடங்களிலும் இல்லாமல்
அவர் எப்படி எல்லா இடங்களிலும்
இருக்கிறார்?

எந்தக் காலத்திலும் இல்லாமல்
அவர் எப்படி எல்லாக் காலங்களிலும்
நம் உடன் வருகிறார்?

உலகை உருப்படவே விடாத
வீணாற்றல்களையெல்லாம்
விழி கலங்க எட்ட நின்றே பார்த்தபடி…
கேட்கிறதா அவர் கூறுவது?

நான் என்ன செய்ய முடியும்
சுட்டிக் காட்டத்தானே முடியும்
நீங்கள் படைத்த இந்த உலகை
நீங்கள்தானே சரி செய்ய முடியும்

கண்டுகொள்வது ஒன்றுதானே தேவை
பார்வையினின்று பிறக்கும் பாதை வளர்வதற்கும்
களத்தை அடைவதற்கும்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP