Monday, March 31, 2025

நெல்லிக் கனிகள்

இந்த நெல்லி மரத்தில் கனிகள்
கூட்டாகவா தனித்தனியாகவா
தொங்கிக் கொண்டிருக்கின்றன?
கூட்டாகவும் தனித்தனியாகவும்
என்கின்றன அவை ஒருமித்த குரலில்.
அவர்கள் சொல்வது பிரிவு எனும்
துயர்ப் பொருள் கொண்ட தனிமை அல்ல.
முழுமையாய் அமைந்து
முழுமையைப் பரப்பத் துணிந்த தனிமை!

அவைகளை உதிர்த்து
ஒரு மூட்டையில் கட்டினார் தோட்டக்காரர்
அப்போதும் கூட்டாகவும் தனித்தனியாகவும்தான்
இருக்கிறோம் என்றனர்!

மூட்டையை அவிழ்த்து
தரையில் கவிழ்க்கவும்
சிதறி ஓடப் பார்த்தன சில கனிகள்
மேலே மேலே விழுந்து மோதி
கூடிக் கொள்ளவே பார்த்தன சில கனிகள்.
மொத்தத்தில் அப்போதும்
கூட்டாகவும் தனித்தனியாகவுமே இருந்தனர்
பிரிவு எனும் அவலத்தனிமை கொண்டவர்களாயல்ல.
(மரணமற்ற பெருவாழ்வைக் கொண்ட)
கனிகள் அல்லவா?

Friday, March 28, 2025

ஒற்றைக் கை

மனிதன் துவைத்து உடுக்கவேண்டிய
ஆடைகளை
சூடான இரும்புப் பெட்டி கொண்டு
அழுந்தத் தேய்த்து முடித்து
ஒழுங்கு கூட்டி
அவன் அடுக்கி அடுக்கி வைப்பதற்கு
எவ்வளவு கனல் வேண்டும் என்பது
அவன் அறியாததா?

பொட்டுத் தீ கனலும் பீடி கொண்டே
தன் உடலைப் பேணிக் கொள்கிறான் அவன்.

பயில்வானுடையது போலிருக்கும்
ஒரு புஜம் தவிர்த்து அத்தனை உறுப்புகளும்
ஒரு குச்சிப் பூச்சியினுடையது போலிருக்கின்றன

இவன் ஆற்றல்களையெல்லாம் உறிஞ்சிவிட்டது
இந்த உழைப்பு மட்டும்தானா?
இவனது பிற நாட்டங்களையெல்லாம்
கவனித்திருக்கிறீர்களா?

Wednesday, March 26, 2025

M

        இரண்டு நண்பர்கள்
        பிரிய மனமின்றியே
        சண்டை போட்டுக் கொண்டு
        எவ்வளவு காலமாய்
        இப்படியே
        பிடிவிடாமலும் நிற்பார்கள்?

Monday, March 24, 2025

உரையாடல் குறுக்கே ஓசையெழுப்பிவிடாதபடி…

பின்புறத் தோளில் நீளமாய்
காற்றோடு கொஞ்சி உரையாடியபடியே வரும்
முந்தானையை அல்லது துப்பட்டாவை
முகத்திற்கு வெகு அண்மையிலிருந்தும்
கண்டுகொள்ளாமல்
தன்பாட்டில் ஆடிக்கொண்டிருக்கும்
மயிர்க்கற்றைகளை
ஒரு எண்ணம் தோன்றும்போதெல்லாம்
பற்றி அடக்கிக்கொள்கிறார்.

அதே போலத்தான் அவர் இவனோடு
பேச நேர்கையிலெல்லாம்
பற்றி அடக்கிக்கொள்கிறார்
இன்னும் எத்தனை எத்தனை அழகினர் அவரிடம்
எத்துணை அழகும் அமைதியும்
சுடர்மதிக் கவனமும் கொண்ட பேரழகினர்
ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாதவர்களாய்!

Friday, March 21, 2025

ஆடை

அவனிடம் என்ன இருக்கிறது?
திக்குகளையே ஆடையாகக் கொண்டவன்போல்
அவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது
அந்தச் சொற்றொடரும் கழன்று விழுந்தபோது
திகம்பரர்கள் என்று
ஆகப் பெரிய ஆடம்பரமான
அம்மணத்தை அணிந்தவர்களாய்
நடந்தவர்களை எண்ணியபோது
அந்த எண்ணமும் சொற்களுமே
கழன்று விழுந்தபோது
அவனிடம் என்ன இருந்தது
திக்குகளையே ஆடையாகக் கொண்டவன்போல்
அவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது?

Wednesday, March 19, 2025

அங்கே நிகழ்ந்தது




















ஓவிய வகையில் ஒட்டப்பட்டிருந்த
மேப்பில் உதிர் இலை நுனியில்
ஏதோ ஒரு காரணம் தீண்டி
முறிந்து மூளியாகிப்போன இடத்தில்
இழந்த உறுப்பை
வண்ணம் கொண்டு வரைந்துவிட்டான்.

இழந்துபோன ஒன்றை
மீண்டும் சந்தித்த மகிழ்ச்சி
அந்த மேப்பில் இலைகளுக்கு!

மலைமுடியில் எரிந்த ஒரு விளக்குபோலும்
சருகிலேயே ஒரு புதுச்சுடர்
பூத்ததுபோலுமல்லவா இருந்தது அது!

தன்னைப் பகிர்ந்துகொண்ட மனிதர்களாலும்
தன்னை முடிவின்மையில் வாழவைத்து
இரசித்துக் கொண்டிருக்கும் மனிதனாலுமல்லவா
அங்கே நிகழ்ந்தது ஒரு நிறைவாழ்வுப் பேரொளி!

Monday, March 17, 2025

நடைபாதையிலும் திருமணமேடையிலும்…

நடைபாதையில் கோயில்வாசல்களில்
பிச்சைக்காரியாய் அமர்ந்துவிட்ட
அந்தப் பெண்ணுக்கு
அன்னை இல்லையா? காதலன் இல்லையா?
எப்போதாவது வந்து சிரிக்கவைக்கும்
கடவுள் போதுமா?

காமவெறியர்களையா தேடிக்கொண்டிருக்கிறாள்?

பிரச்னை உலகைக் கண்டுகொள்ளாமல்
புலனின்பங்களில் திளைத்துக்கொண்டிருக்கிறோம்!

எதையாவது யோசித்துக்கொண்டேயிருக்காமல்
நிகழ்காலத்துக்கு வா நிகழ்காலத்துக்கு வா என்று
அழைத்துச் செல்லப்பட்டுதான்
திவ்யா மேடம் திருமணவிழாவிற்கு அவன் வந்து நின்றான்.

நீங்கள் யாராயிருந்தாலும் சரி
எப்போதாவது - ஒரு கணம் –
நீங்கள் இதனைப் பார்க்கத்தானே செய்திருப்பீர்கள்
பற்றி சுடர் இயற்றத் தெரியாதவர்களாயினும்?

பழைய கவிதை புதிய கவிதை எனக் குழம்பாமல்
நித்ய சவுந்தர்யம் கொண்ட வாழ்வை
நித்யஸ்ரீயை
இயற்றுவதையே இலட்சியமாகக் கொண்டவர்கள்தாமே?

அன்னை தன் மகளையோ
ஆண்மகன் தன் காதலியையோ
அவள் தன்னைத் தானோ
இல்லை அழகின்மீதே அழகுதானோ
இப்படித்
தானற்ற வெளிதனிலே
தன்னை அழகுபடுத்திக் கொள்கிறது

பார்வையை அடிக்கோடிடுவதுபோல்
கண்களுக்கு மையிட்டுக்கொள்கிறார்கள்
புன்னகையை அடிக்கோடிடுவதுபோல்
இதழ்களுக்கு வண்ணம்…
தாவரங்களை நெருங்குபவர்களாய்
கூந்தலில் மலர்கள்…
தனித்ததொரு நட்சத்ரத்தைக் காட்டுவதும்
யாவும் ஒற்றை ஒற்றைத்
துளிகளால் மட்டுமே
என்பதைக் காட்டுவதுமாய் அமைந்த
மூக்குத்தி…

உதயசூரியனை நெற்றிப்பொட்டாகவும்
வண்ண மலர்களையெல்லாம்
ஒளிரும் நட்சத்திரங்கள் மின்னும் ஆடைகளாகவும்
சூட்டிக் கொள்கிறவர்கள் யார்?

அந்த நெற்றிச் சுட்டியும்
பார்வையும் ஒன்றே போதுமென்றாலும்
பூரண நிறைவடைந்துவிட்ட ஓருடலை
கைவளைகள் கால்கொலுசுகள் காதணிகள் என்று
எண்ணற்ற அணிகளால்
ஆராதிக்கும் வண்ணமாயும்
ஒரு செயல்முறைப் பாடமாயும்
சுட்டும் ஓர் அழகினைத்தானே
அலங்காரம் என்கிறோம்
மகாலட்சுமி என்கிறோம்
இன்று
மானுட இலட்சியம் என்கிறோம்

உள்ளதை அறிபவர்கள்தாமே நாம்?

Friday, March 14, 2025

இந்தக் காற்று வெளியிடையே…

தொட்டு தடவிச் செல்கிறது காற்று
பற்றற்றான் பற்றினைப்
பற்றிக் கொண்ட பேருயிராய்!

காற்றின் தழுவலில்
நாம் காணும் இன்பமும்
காதலின் இன்பமும்
ஒன்றா?

அதேதான் அதேதான்
எனச் சிரித்தன
காற்றிலும் ஒளியிலும்
குதித்தாடும் மரக்கிளைகள்!

பார்த்திருக்கிறீர்களா?

எத்தகைய செல்வத்தால்
இத்துணை இன்பக் கொண்டாட்டங்கள்!
என்பதையறியாத சுகஜீவிகளைப்
பார்த்திருக்கிறீர்களா?

காலமற்ற பொழுதுகளின்
கருணைக் கொடையினால் பூக்கும்
ஏழைகளின் களிப்பினைச் சுட்டி சுட்டி
“நன்றாகத்தானே இருக்கிறார்கள்” என
தப்பித்துவாழும் மனிதர்களைப்
பார்த்திருக்கிறீர்களா?

வறுமையையே
ஊனமாகக் கொண்ட
ஏழ்மையுடன்
கோயில் வாசல்கள்முன்
பிச்சையெடுக்கும் மானுடத்தைப்
பார்த்திருக்கிறீர்களா?

Wednesday, March 12, 2025

ஒரு அய்யம்

நாம் அறிந்திருக்கிறோமா,
ஆசைகள் அலங்கார அகங்காரச்
சுமைகளில்லாமல்
காற்றையும் வெளியையும் ஒளியையும் மட்டுமே
அளாவும் எளிய உயிருக்குத்தான்
பறவை என்று பெயர் என்பதை?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP