நெல்லிக் கனிகள்
இந்த நெல்லி மரத்தில் கனிகள்
கூட்டாகவா தனித்தனியாகவா
தொங்கிக் கொண்டிருக்கின்றன?
கூட்டாகவும் தனித்தனியாகவும்
என்கின்றன அவை ஒருமித்த குரலில்.
அவர்கள் சொல்வது பிரிவு எனும்
துயர்ப் பொருள் கொண்ட தனிமை அல்ல.
முழுமையாய் அமைந்து
முழுமையைப் பரப்பத் துணிந்த தனிமை!
அவைகளை உதிர்த்து
ஒரு மூட்டையில் கட்டினார் தோட்டக்காரர்
அப்போதும் கூட்டாகவும் தனித்தனியாகவும்தான்
இருக்கிறோம் என்றனர்!
மூட்டையை அவிழ்த்து
தரையில் கவிழ்க்கவும்
சிதறி ஓடப் பார்த்தன சில கனிகள்
மேலே மேலே விழுந்து மோதி
கூடிக் கொள்ளவே பார்த்தன சில கனிகள்.
மொத்தத்தில் அப்போதும்
கூட்டாகவும் தனித்தனியாகவுமே இருந்தனர்
பிரிவு எனும் அவலத்தனிமை கொண்டவர்களாயல்ல.
(மரணமற்ற பெருவாழ்வைக் கொண்ட)
கனிகள் அல்லவா?