Monday, January 26, 2026

மானசா-90

ஒவ்வொருவராய் தங்கள் கவிதைகளை வாசித்துவிட்டபின் பார்வையாளர்களிடமிருந்து ஒவ்வொரு கவிதைக்கும் எதிர்வினை எதிர்பார்த்து நடத்தப்படும் ஒருவகையான கவியரங்கம் அது. பார்வையாளர்களில் ஒருவராய் அமர்ந்திருந்த தந்தையின் மடியில் அமர்ந்திருந்தது, ஒரு குழந்தை.

ஒவ்வொருவரும் தங்கள் கவிதையை வாசித்து முடிக்கும்போதும் மிகச்சரியாகவே அதே நேரத்தில் அதேநேரத்தில் அந்தக் குழந்தை கரைந்தது. அப்படியொரு கரைச்சல்! குழந்தைகளுக்கே உரிய கரைச்சல்!

முதன்முதலாக அதைக் கண்டபோது, நல்லவேளை கவிதை முடிந்த போது கத்தியது என்று சமாதானமாகிக் கொண்டார்கள். தந்தைக்கு, குழந்தையை வெளியே கொண்டுசென்று நிற்கவேண்டுமே என்ற சங்கடம். அப்புறம்தான் அந்த குழந்தை ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்தான் கரைந்தது கண்டு எல்லோரும் திடுக்கிட்டார்கள். நிகழ்ச்சி இயக்குனர் அதிர்ந்துவிட்டார்.

விழா முடிந்து வெளியேறுகையில் ஒவ்வொருவரும் அவர்களை ஈர்த்த கவிதைகளையும், ஒரு சந்திப்பின் நிறைவிலுமே செல்ல வேண்டியவர்கள் மிகுதியும் அந்த குழந்தை கரைச்சல் பற்றிய மனமூட்டத்தோடேயே சென்றார்கள்.

அடுத்த ஆண்டு, அதே காலை, அதே விழா, நிகழ்ச்சி அமைப்பாளரும் இயக்குனருமானவர் ஒரு அழைப்பிதழை அழுத்தமான ஒரு வேண்டுகோளுடனே குழந்தை மானசாவுக்கும் தந்தை நவீனுக்கும் மறக்காமல் அனுப்பிவைத்தார்.

கவியரங்கில் அந்த துடிப்பு ஒரு சடங்காக நிகழ்த்தப்படுவதை இயக்குநர் தன் மேலாண்மையால் நிறுவிய அந்த நாளிலிருந்து அது உறுதியாகிவிட்டது. குழந்தை அழாவிட்டால் குழந்தையைக் கிள்ளிவிட்டார்கள், பெற்றோர்கள். குழந்தையே வராவிட்டாலும், இருக்கிறவர்களிடையே வளர்ந்த குழந்தை, இளைஞர்கள் என்று மெது மெதுவாக ஆர்வமும் அக்கறையும் உள்ள யாராவது ஒருவர் குழந்தையைப் போலவே கால்கை உதைத்து கரைந்தனர்.

குழந்தை மானசா சிறுவயதிலேயே கவிதை மற்றும் இலக்கிய அரங்கில் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்தவர். அந்நாட்டின் மரியாதைக்குரிய கவிஞரும் வருங்காலத்திற்கு வழிகாட்டும் ஒரு இலக்கியப் புள்ளியும் ஆனவர். அவர் இல்லாத ஒரு காவியமேடை அந்த நாட்டில் கிடையாது.

இப்போது மானசா தொண்ணூறு வயது மூதாட்டியாக அந்த மேடையில் இருக்கிறார். விழா அரங்கில் கவிதைதோறும் கரைவதற்குரிய குட்டிக்குழந்தை இல்லை. வளர்ந்தவர்களும் இல்லை. அந்தச் சடங்கிற்குரிய குழந்தையாவதற்கு வெட்கப்பட்டவர்களாய் நீ செய், நீ செய் என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் மானசா அந்தப் பொறுப்பை தானே எடுத்துக்கொண்டு கைகால்களை உதைத்துக்கொண்டு கரையத் தொடங்கினார். யாராவது நிகழ்த்த வேண்டுமல்லவா?

Read more...

Saturday, January 24, 2026

தேவதேவனின் மூன்று கவிதைத் தொகுப்புகள் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - இரண்டாம் பதிப்பு












தேவதேவனின் மூன்று கவிதைத் தொகுப்புகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் இரண்டாம் பதிப்பாக வெளி வந்துள்ளன

நூல்கள் கிடைக்குமிடம்:








விலை விவரம்:
முதல் தொகுதி - இரவெல்லாம் விழித்திருந்த நிலா - ரூ 230
இரண்டாம் தொகுதி - கண் விழித்தபோது - ரூ 365
மூன்றாம் தொகுதி - அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது - ரூ 405

Read more...

Friday, January 23, 2026

கலைச் செல்வியே, அம்மா!

உள்ளதாம் பொருளை
ஓதி உணர்த்த முடிந்ததா?
ஓதும் வேதங்களால்
உள்ளொளி துலங்கியதா?

கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
துயர்மலி உலகின் பெருவலி கொண்ட
துய்யர்களிடமும் இருப்பாள்தானே?

கருணை வசனங்கள் போதுமோ
கருணை அதில் உண்டோ, செல்வி?
கள்ளமற்ற முனிவர்களா,
கள்ள முனிவர்களா என்பதையும்
கண்ணுடையார் ஒருவரால்தானே
கண்டுகொள்ள முடியும், தேவி?

கைப்புண்ணைக் காணக்
கண்ணாடி வேண்டுமோ, அம்மா?

உள்ளதாம் பொருள் அதனையே
வளர்ப்பதற்கு வேறு வழியே இல்லையா?
அதைக் காட்டாமல்
துதிகளுக்கோ காத்திருப்பவள் நீ?

எம் அன்னையே
காண்பவர்களோடு காணாதார்க்கும்கூட
அருளும் நீ
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
அழித்துக் கொண்டேயிருக்கும் மனிதனுக்கும்
அளித்துக்கொண்டேதானே இருக்கிறாய்
கடவுளின் ராஜ்ஜியத்தை?

மெய்ச் செயல்வடிவமாக மட்டுமே
ஒளிரும் கருணையே!
துதிகளுக்கு வளையாத
அரும்பொருளேயான ஆளுமையே...!

Read more...

Wednesday, January 21, 2026

தேவமலர்கள்

குட்டி வானத்தைத்தான்
அவன் ஒரு போர்வையாய்ப்
போர்த்திக்கொண்டு
தலையைமட்டும்
வானத்திற்கு வெளியே நீட்டியவனாய்
துயின்றுகொண்டிருந்தான்.

வேற்றுக் கிரகத்திலிருந்துதான் ஒரு மனிதன்
தழைக்கும் காம்போடு
ஒரு மலரைக் கொண்டுவந்தான்.

ஒரே மலர்தான்
முதல் மலராய்
வேர்விடத் தொடங்கியது இந்த பூமியில்.

அப்புறம் இந்த பூமியில்
எல்லா இடங்களுக்கும் பரவிவிட்டது.
ஆனால் ஒவ்வொரு மலருமே
தன்னை முதல் மலராகவும்
மனிதர்கள் தேடும்
பேர், புகழ், பெருஞ்செல்வம் எல்லாம்
தானேதான் என்றும்
நொடிதோறும்
மாறி மாறி நிகழ்ந்து கொண்டேயிருக்கும்
தனது பிறப்பையும் மரணத்தையும்
சொல்லவே முடியாது என்றும்
கண்டவரே கிடையாது என்றும்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது காண்!

Read more...

Monday, January 19, 2026

காற்று

இந்தக் காற்று வெளியிடையே - கண்ணம்மா
நீதான் சொல்ல வேண்டும்.
வெளி அல்ல, வெளியிலுள்ள
அசைவிற்குப் பெயர்தானே காற்று?

பற்றி நிற்பதன்றி
வருடிச் செல்வதற்குப் பெயர்தானே, காற்று?

தான் என்பதும் ஆசை என்பதும்தானே
பற்றுகிறது?
பற்றாது வருடிச் செல்வதுதானே
அன்பு என்பது?

எங்குமிருப்பதனால்
அது ஓடிப் போவதேயில்லையே!
சென்று கொண்டேயிருப்பதுபோல்
அது வந்துகொண்டேயிருக்கிறதே;
பின் எதற்கு - என் கண்ணம்மா
ஆசையும் அச்சமும் சேகரிப்புகளும்?

Read more...

Saturday, January 17, 2026

அமைதி என்பது


பாடகி: தீபா

இக் கவிதையை இங்கே வாசிக்கலாம்.

Read more...

Friday, January 16, 2026

இந்த இடத்திற்குத்தான்...

இந்த இடத்திற்குத்தான்
உங்கள் எல்லோரையும்
அழைத்து வந்துவிட விரும்புகிறேன்
ஆனால் உங்கள் ஒவ்வொருவரினதும்
முழு ஒத்துழைப்பும் இல்லையெனில்
இது நடக்காது.
துளிகளால்தாம்
பெருவெள்ளம் என்பதை
நாம் எப்போதும் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம்.
இங்கே வந்துவிட்டால்
எரியும் நம் தாகவிடாய்
எல்லாம் அடங்கிவிடும்.

எரியும் நம் தாகவிடாய்
எல்லாம் அடங்கிவிட்டால்
நாம் இங்கே வந்துவிடலாம்
என்றும் சொல்லலாம்.
இங்கு அங்கு எனும் இடங்களில்லை
காலமும் இல்லை
ஒரு நொடிதான் காலம்
என்றும் சொல்லலாம்.

எல்லாம் அடங்கிவிடும் இங்கே
பேர் புகழ் பெருஞ்செல்வம்
எதுவுமே தேவைப்படாது
ஒரே ஒரு துயரம்தான்
நம்முடைய தாகமாய் நம்மிடம்
தங்கிவிடக்கூடும்
எல்லோரும் இந்த இடத்திற்கு
வந்துவிட வேண்டும் என்பதே அது!

இந்த இடத்திற்குத்தான்
உங்கள் எல்லோரையும் அழைத்து வந்து விட விரும்புகிறேன்.
அங்கே நான் இருக்கமாட்டேன்
நாம் மட்டுமே இருப்போம்.
இல்லை, நாமும் இருக்கமாட்டோம்
நம் உறவு மட்டுமே இருக்கும்!

Read more...

Thursday, January 15, 2026

குளிர்

குளிர் கூடிவிட்டது
எனது பெருங்களிப்பும்தான்
கூடிவிட்டது!

இறுகக் கட்டி அணைப்பதுபோன்ற
இந்தக் குளிர்
உனது பேரன்புதான் அல்லவா?

உனது செல்ல ஆட்டுக்குட்டிகளான
எங்களுக்கு
தலைக்கவசமும் உடல்கவசமுமாய்
குளிராடைங்கள் அணிவித்து
நடக்கமட்டுமே செய்தால் போதுமென்றும்
வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றும்
இரண்டு கைவிரல்களையும் சட்டையின்
கீழ்ப்பைகளுக்குள் புதைத்துக்கொண்டு
எத்துணை சுகமாய் நடக்கச்சொல்கிறாய்
உன் காதல் வெளியில்!

Read more...

Monday, January 12, 2026

தன்னறம் வெளியீட்டில் தேவதேவனின் புதிய கவிதைத் தொகுப்பு நூல்கள்
























தனிமரம் தோப்பாகுமோ 
என்றார்கள்
ஆ கும் என்றெழுந்தது பார்
ஆலமரம்!
---------------------------------------------------------
  - ப382, ”பக்கத்தில்தான் இருக்கிறது வீடு”(2019) கவிதைத் தொகுப்பிலிருந்து.


தேவதேவனின் புதிய கவிதைத் தொகுப்பு நூல்கள் 
"ஆ கும் என்றெழுந்த ஆல்”  
மற்றும் 
இந்தக் காற்று வெளியிடையே” 
தன்னறம் வெளியீட்டில்  வந்துள்ளன.  

தற்போதைய சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கடை எண் 315லும்  கிடைக்கிறது.

Read more...

இந்த மனிதர்கள்

தளிர்நடைச் சிசுக்களாய்
சொர்க்கத்திலிருந்து வந்த
தேவதைகளை நடத்தியபடி
"மாமாவுக்கு வணக்கம் சொல்லு" என்றபடி
உலவும் மனிதர்களாய்
இன்று ஓர் அற்புத உலகக் காட்சி!

இந்த மனிதர்கள் எல்லோருமே
சொர்க்கத்தை
கவிதையின் மதம் உலவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
படைத்துவிடும் முகமாய்
தங்கள் குழந்தைமையைத்தான் இப்படி
வெளியே உலவ விட்டுள்ளார்களா?
அல்லது
தங்கள் வேண்டாமையினால்தான்
இப்படி வெளியே விட்டுவிட்டு
அதையும் அறியாமலே உலவுகிறார்களா?

யாண்டும்
களங்கமில்லாத
கருப்பை உடையவர்களில்லையா
இந்த மனிதர்கள்?

தங்கள் மூடத்தனங்களால்
சொர்க்கத்தை மூடிவிட்டு
புகைமூட்டத்தில் திணறிக்கொண்டிருப்பவர்கள்தாமோ?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP