Monday, January 15, 2024

தோள் பை

ஓடும் ரயிலில்
அவன் மடியில் தலைவைத்து
அமர்ந்திருந்தது
ஒரு தோள் பை.
அடக்கமான
அய்ந்து திறப்புவாய்கள் அதற்கு.
அவனுடையன
எல்லாவற்றையும் சுமந்துகொண்டு
தன்னையே அவனைச் சுமக்கச் செய்யும்
பேரறிவன்!

குழந்தையாய் வந்த பேரன்னை!

மடியில் அவன் கையடங்கலுக்குள்
அது சாய்ந்து படுத்திருப்பதைப் பாருங்கள்!
என்ன ஒரு உறவு அது!
தீண்டும், வருடும்,
அவன் விரல்களில் பூக்கும் மகரந்தங்களும்
விழிகளில் ததும்பும் கண்ணீருமாய்!
இத்துணை அமைதியும் அன்பும்
ஒழுக்கமும் உடைய உயிர்கள் இருக்கத்தானே செய்கின்றன இவ்வுலகில்.

அருகில் வந்து அமர்ந்தவன் இடித்து
இடைஞ்சலிக்காமல் இருக்கும்படி
அதனை மேலும் நெருக்கமாய்த் தனக்குள்
இழுத்து அணைத்துக்கொண்டான் அவன்.
தனக்குப் பாதுகாப்புத் தரும் உயிரைத்
தான் பாதுகாக்கும் முறையோ அது, அல்லது
அருகிலமர்ந்த அந்த மனிதனுக்காகவோ?
விளக்கிச் சொல்லத்தான்,
பிரித்துச் சொல்லத்தான்,
சொற்களாலே சொல்லிவிடத்தான்
முடியுமோ இந்த அன்பை!


- மகாநதியில் மிதக்கும் தோணி - 2022 தொகுப்பிலிருந்து

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP