Friday, May 6, 2011

கனவுகள்

முலை பருகிக்கொண்டிருக்கும்
சிசுவின் மூடிய இமைக்குள்
தாய்முலையாய் விரிந்த ஒரு சுவர்
பிஞ்சுக் கைவிரலாய் அதில் ஒரு பல்லி
பல்லியை அலைக்கழித்து விளையாடுகிறது
முலைக்காம்புப் பூச்சி

அலைக்கழிக்கும் பூச்சியை மறந்து ஒரு கணம்
தன்னுள் ஆழ்ந்த பல்லியின் கனவில்
தாய்முலை பற்றிப் பால் பருகும் சிசு

முலை திறந்து நிற்கும் தாயின் கனவில்
பாற்கடலில் தவழும் குழந்தை

அலையும் பூச்சியின் இமைக்குள்
பால் சுரக்கும் அகண்டதோர் முலையின்
ஊற்றுவாயாய்த் தான் ஆகும் கனவு

பாலூறும் உணர்வினையும்
பாப்பாவின் தொடுகையையும்
தன் கனவில் அனுபவிக்கும் சுவர்

‘சிறந்ததோர் கனவு கண்டவர்க்குப் பரிசு’
என்ற அறிவிப்பு ஒலிக்கவும்
காணாமற்போன தாயைத் தேடிப் போய்க்
காணாமற்போன என் கவிதையைக்
கனவு கண்டதால்-
எல்லாம் கனவு ஆனதால் நான் விழித்தேன்,
மேலானதோர் யதார்த்தத்தின் முள்படுக்கையில்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP