Friday, April 3, 2026

காற்று தழுவிச் செல்லாத…

காற்று தழுவிச் செல்லாத
உடம்பின் ஒரு பகுதியில்
நீங்காத புழுக்கம்!

காரணமான ஆடைதான்
தனை உணர்ந்து ஒற்றி
ஆறுதலளிக்கிறது அதை!

Read more...

Wednesday, April 1, 2026

எத்துணை பெரிய விடுதலை!

வியர்த்துக் கசியும் உடலை
ஆற்றட்டும் என
சட்டையைக் கழற்றி
நாற்காலியின் முதுகில் போட்டான்!

அவன் பெண்ணானதால் போடமுடியவில்லை
ஆணானதால் போட்டான்
மனிதன் ஒருபாலுயிரியாயிருந்தால்
இந்த பிரச்னை உண்டுமா, சொல்லுங்கள்?

Read more...

Friday, March 27, 2026

அந்த பெருமழை!

பூமியின் தாகவிடாயினால்தானே
மழை பொழிகிறது பூமியின் மீது!

அறத்தின் தாகவிடாய் கொண்டுதானே
காலமற்ற பொழுதுகளில்
கருணையின் அவ்வப்போது
பெய்யும் பெருமழையும்
பொழிகிறது அறத்தின் மீது?

போதாத அதிருப்திக் கனலால்தானே
ஒரு மரத்தைக்கூடக் காணமுடியாத
பாலைவனமாகிக் கிடக்கிறது உலகம்?

காலம் காலமாய்
எரிந்து கொண்டிருக்கும் பாலைவனம்
எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பெருமழை
- நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் -
ஒட்டுமொத்தமான
தாகவிடாய் பெருகினால் மட்டுமே
பொழியும் காண்!

Read more...

Wednesday, March 25, 2026

நாம் யார்?

எல்லைக்குள் வசிப்பவர்களா

எல்லையோரம் வசிப்பவர்களா

எல்லைமீறலில் வசிப்பவர்களா

எல்லையில்லா வெளியில்
எல்லையையும்
எல்லையின்மையையும்
அறியும் வெளியில் வசிப்பவர்களா

யார் நீங்கள் என்று ஒருவர் கேட்டால்
நாம் யார் என்று சொல்லப் போகிறோம்?

Read more...

Monday, March 23, 2026

செவிலி

அலம்புவதுபோல்
அவன் தலையைக்
கோதிச் செல்கிறார் செவிலி
கவலைப்படாதீர்கள்
எல்லாம் சரியாகிவிடும் என்றபடி,
எல்லாப் பிரச்னைகளும்
அங்கே-
நம் மண்டையில்தான் இருப்பதுபோல்!

Read more...

Friday, March 20, 2026

கண்டுபிடித்துவிட்டதால்…

தன் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதால்
இருந்த இடத்தில் இருந்தபடியே
நடந்து கொண்டேயிருக்கிறது
இதயம்.

Read more...

Wednesday, March 18, 2026

மூடிய பனித்திரை விலக்கி…

மூடிய பனித்திரை விலக்கி
தான் படைத்த உலகின்
குன்றாத பேரெழிலை
எட்டிப் பார்க்கிறான் சூரியன்!

நாம் படைத்த உலகைப் பற்றி
அவனுக்கென்ன கவலை?

Read more...

Monday, March 16, 2026

ஓ, சூர்ய!

ஓ, சூர்ய
நீ மலர்விக்கும் இப் பூமிப் பூவில்
நான் ஒரு இதழ், அப்படித்தானே?

என்ன வியப்பு இது, நீயே
எனக்கு உள்ளும் புறமுமாய்
திகழ்ந்து கொண்டிருப்பது?

நாம் யார் சூர்யா?

இப் பேரண்டத்திற்கும் வெளியேயிருக்கும்
பேரின்மைதான் கடவுள் எனில்
அவரும் நமக்கு உள்ளேயும் வெளியேயும்
இருப்பவர்தானே?

கடவுள் என்பதும்
பேரின்மை என்பதும்
தன்மய்யமற்றதாலே முடிவிலியும்
முடிவிலியானதாலே தன்மய்யமற்றதும்,
அல்லவா?
இம் முடிவிலியே
எல்லாப் படைப்புகளுக்கும் ஆதாரமாய்
தாய்பிள்ளை சுழற்சியில் இயங்குவதை
நான் என் கண்ணாலே பார்த்திருக்கிறேன், சூர்யா!

மனிதர்களும் தாம் படைக்கவேண்டிய
மானுட வாழ்வுக்கான முன்மாதிரியும்
இதுவாகவே இருக்க வேண்டும்.
இப் பேரண்டத்தின் மதம் இது
இல்லையா, சூர்யா?

Read more...

Friday, March 13, 2026

வருகை

உப்பிய வயிற்றை
ஒரு உள்ளங்கையால் தொட்டபடி
தன் உள்ளிருப்பை உணரும்
பெண் விழிகளைப் பார்த்திருக்கிறீர்களா?

இந்தக் குழந்தை-
(இதுபோல் இப்போது
உலகில் பிறந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு குழந்தையும்தான்)
இந்த உலகைக் காப்பாற்றும்
கடவுள் என்றே நம்புகிறேன்
இந்த அன்னையர்கள் எல்லோருமே
கன்னிமேரிகள்தாம் என்றே நம்புகிறேன்

ஒரே ஒரு வேறுபாடுதான்
இயற்கை தன் தவறிலிருந்து
தன்னைத் திருத்திக் கொண்டுவிட்ட
இந்த உலகத்திலிருந்து இனி பிறக்கப்போவது
ஒற்றைப் பாலுயிரியான
தெய்வங்கள் மட்டுமே என்பதுதான்!

Read more...

Wednesday, March 11, 2026

அமிர்தவர்ஷினி

நிழற்குடைத் தாழ்வாரங்களிலோ
மழைநீர் ஓடும்
நிதான நடைத் தளங்களிலோ

எங்கேயும் அசையாது நிற்கின்றன
நடக்கின்றன
புருவக் குடையின்கீழ்
ஒரு ஜோடிக் கண்கள்
அமிர்த மழைப் பொழிவை
பார்த்தபடியோ
வேட்டபடியோ
பொழிந்தபடியோ

Read more...

Monday, March 9, 2026

துயரும்…

துயரும்
கருநீலமலர்களாய்ப்
பூத்துவிட்டபோது
அது எப்படி
துயர் ஆகும்?

Read more...

Sunday, March 8, 2026

காற்றினிலே வரும் கீதம்


பாடகி: தீபா

இக் கவிதை ”காற்றினிலே வரும் கீதம் - 2022” கவிதைத் தொகுப்பில் உள்ளது. தன்னறம் பதிப்பகத்தின் தொகுப்பு- 1ல் உள்ளது

Read more...

Friday, March 6, 2026

நமக்குள்ளே

அடுத்த அடுத்த பொம்மைகளுக்கு
தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும்
குழந்தைகளைத்தாமே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?

பேரின்மை
பொம்மை வடிவானவுடனேயே
மரித்தும் போனதை
கண்டு உதறி
யாண்டும் மெய்ம்மை காணவே
விழித்துக் கொண்ட குழந்தைகளைப் பார்த்திருக்கிறோமா?

Read more...

Wednesday, March 4, 2026

பொம்மைகளின் விழிகளில்…

விதவிதமான பொம்மைகளால்
அறையை நிறைத்துவிட்டார் சுநேகா.
“ஏன்ம்மா இப்படி?
நீ இன்னும் வளரவேயில்லை சுநேகா”
என்றார் அவள் கணவரும்.

ஒருநாள் அவன் கண்டு கொண்டான்
பொம்மைகளின் விழிகளிலுள்ள
பேரின்மையே
குழந்தைகளின் விழிகளிலும் ஒளிர்வதை!

மேலும்
அவர்கள் வளர்வதில்லை!
அவர்களின் நிரந்தரத்தன்மைக்கு
நிகரே இல்லை!

அவர்கள் மரிப்பதேயில்லை!
கவனியுங்கள்
ஏன் எப்படி என்று
கேட்கவேமாட்டீர்கள்!

அவர்களுக்கு உயிர் இல்லை என்றால் என்ன
உயிருள்ள மனிதர்கள்தாம்
என்ன சாதித்துவிட்டார்கள் இந்த உலகில்?
சுநேகாவிடமோ குழந்தைகளிடமோ
இதைச் சொல்லிவிடாதீர்கள்
உங்களைக் கொன்றுவிடுவார்கள்!

அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்
என்பதுதானே முக்கியம்?
சொல்லி முடித்தவுடன்
நாமும் கேட்டுக் கொண்டவுடன்
அவர்களும் அங்கிருந்து
போய்விடுவார்கள்தானே?

Read more...

Monday, March 2, 2026

ஒரு பொட்டு மூக்குத்தி!

ஒரு பொட்டு மூக்குத்தி!
அதன் அழகு ஏன் நம்மை
இப்படிக் கொல்கிறது?

எவ்வளவு காலமாய்
நாம் கண்டடையாமலே இருந்த ஒன்றை
இன்று நாம் கண்டு கொண்டோம்
ஒரு மொத்த அழகோடே!
ஆழ்கடலினின்று கண்டெடுத்த
முத்தின்மேல் ஒளிரும் முழுநிலவுபோலும்
ஒரு பேரொளியை!
பெரும் புரட்சியைப் படைக்க இருக்கும்
பெரு வெள்ளத்தின்
ஒரே உண்மையான ஒரு துளியை!

Read more...

Friday, February 27, 2026

புதிது புதிதாய்…

அவர் நடக்க நடக்க
இடமும் வலமுமாய்
அவர் செறிகுழலும் அசைந்தது.

தன்னை ஆட்டுவிக்கும்
உயிர் பற்றியோ
உடல் பற்றியோ
உறுப்புகள் பற்றியோ
தன்னைப் பற்றி
எதுவும் அறியாத பிறவி

நடை நிற்கவும்
அது தானும் நின்றபோதெல்லாம்
யாவும் அறிந்தது மட்டுமா
நிகழ்ந்தது
யாவும் அறியாததும்
புதிது புதிதாய்
நிகழ வேண்டியதுமல்லவா
நிகழ்ந்தது அங்கிருந்து?

Read more...

Wednesday, February 25, 2026

ஊழல் மலிந்துவிட்ட...

ஊழல் மலிந்துவிட்ட
மனித உறவுகளை விட்டு
தூர வந்து நிற்பதாலோ
இத்துணை களி நிறை
இந்தக் காற்று வெளியினிலே
கண்விழித்துக் கொண்ட தாவரங்களுக்கு?

Read more...

Monday, February 23, 2026

புல்லிலிருந்து ஒரு பூ

இப் பேரண்ட
பெருவெளியைப் பார்த்தல்லவா
புன்னகைக்கிறது,
புல்லிலிருந்து ஒரு பூ!

Read more...

Saturday, February 21, 2026

யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்


பாடகி: தீபா

இக் கவிதையை இங்கே வாசிக்கலாம் .

Read more...

Wednesday, February 18, 2026

இப்போதெல்லாம் மனிதர்கள்...

“இப்போதெல்லாம் மனிதர்கள்
நம்மைப் பார்ப்பதேயில்லை
எப்போதும் கைபேசியிலும்
அல்லது ஏதாவது ஒரு எண்ணங்களிலும்தான்
மூழ்கியவர்களாய் இருக்கிறார்கள்
எல்லாப் பிரச்சனைகளும்
காரணங்களும்
விடுதலையின் அமைதியும்
தாங்களே என்பதறியார்”

இந்த அகால வேளையிலும்
நடை உலா வந்தவர்களைப் பார்த்து
கனிவுடனும் பெருந்துயருடனும்
பேசிக்கொண்டனர்.

சொக்கவைக்கும்
ஜில்லென்ற குளிர்காற்றும்
ஊர்ந்து சென்று கொண்டிருந்த
உச்சிநிலாவும்
விண்மீன்களை மறைத்துவிட்ட
மழைமேகங்களும் நீலவானமும்
இரவிருளில் ஆன்றமைந்துவிட்ட
மரச்செறிவுகளும்
விரிவளாகத்தின் வீதிவிளக்குகளும்.

Read more...

Monday, February 16, 2026

மரநிழலில் ...

மரநிழலில்
ஒரு பெஞ்சு
சித்தார்த்தரேயாய்!

அமர வந்த மனிதருக்கு முன்னமே
நன்கு அமரத் தெரிந்ததாகவேதானே
இருக்க வேண்டும்
அந்த பெஞ்சு?

Read more...

Saturday, February 14, 2026

இன்று காதலர் தினம்

காதல் திருமணம் செய்து கொண்டோர்களால்
பூத்திருக்க வேண்டாமோ
பொன்னுலகு இப்பூமியில்?

காதல் திருமணம் என்ற பெயரில்
ஆண் பெண் இச்சைத்
தேர்வு மட்டும்தான் நடந்துள்ளதா?

மலராத மொட்டாகவும்
கனியாத காயாகவும்
காத்திருக்கிறதோ காதல் திருமணமும்?

வேரோடும்
வீசும் காற்றோடும்
வெயிலோடும்
ஒளியோடும் மட்டுமே
அவர்கள் நின்றிருந்தால்தானே
மலரவும் கனியவும் முடியும்?

Read more...

Friday, February 13, 2026

அழகழகான இளம் பெண்கள்

பாதுகாப்புணர்வு போலும்
இருளில் ஓடும் வாகனங்களின்
பின் சிவப்பு விளக்குபோலும்
நடுநெற்றி உச்சியில்
சிவப்பு அணிந்துகொண்டு
அழகழகான இளம்பெண்கள் ...!

அழகு, மேலும் அழகுபெற்றதே தவிர
பாதுகாப்பு எங்கே தோன்றியது ?
பயம் எங்கே தோன்றியது?
நம்பிக்கை நம்பிக்கை இழப்பு என்ன
மானுட சஞ்சலங்கள் எங்கே தோன்றின?

அற்புதமானதோர் முடிவும் துவக்கமுமாய்
தோன்றியதோர் நிறையுணர்வுதான்
எத்துணை அற்புதம்!

Read more...

Wednesday, February 11, 2026

ஆண்களும் பெண்களும் …

ஆண்களும் பெண்களும் காதலும் காதல் தோல்வியிலுமாய் எவ்வளவு இன்பம் அவ்வளவு வலியுடனுமாய் வாழும் வாழ்க்கை நாம் அறிந்ததுதானே?

ஆண் என்றும் பெண் என்றும் உள்ள இந்த இருபால்மையினால்தானே மனிதன் இயற்கையோடும், சக மனிதனோடும் கொள்ளும் உறவை இழந்து போரும் துயருமான உவகைப் படைத்துவிட்டான்?

குடும்பம் என்றும் சமூகம் என்றும் கடவுள் என்றும் பெரியவன் என்றும் அடிமை என்றும் மேலாண்மை என்றெல்லாம் வளர்ந்து ... இருமையும் அதற்கு எதிரான ஒருமையும்கொண்ட உலகைப் படைத்துவிட்டான்?

இயற்கையின்முன் இயற்கையை மறைத்துக்கொண்டு நின்றபடி இணையாகவும் தனியாகவும் மனிதர்கள் சுயப்படம் எடுத்துக் கொள்வதை நீங்களும்தானே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?

அன்னை இயற்கையே, இதற்கு பதில் சொல்லுங்கள்!

உங்கள் இயற்கையில்மட்டும் நீங்கள் பாதுகாக்கத் தொடங்கியுள்ள ஓரவஞ்சனை ஏன்?

Read more...

Monday, February 9, 2026

பொறாமைப் படுவானேன்?

பொறாமைப் படுவானேன்
கூந்தல் இருக்கிறவா
கொண்டை போட்டுக்கிடுறா
நமக்கு
ஒரு மயிர் இருந்ததால் போதுமே
ஒரு பேருலகைப் படைத்துவிடுவதற்கு?

Read more...

Friday, February 6, 2026

கடற்கரையில்…

என்ன கெடுபேறு! யார் செய்தது இது?
எதைக் காண வந்தார்களோ
அந்தக் கடலை மூடிவிட்டது,
அவர்கள் சந்திப்பு!

என்றாலும் தனிப்பெருங்கருணையால்
அவர்கள் எந்த இடத்தில் சென்றமர்ந்தாலும்
அடங்காத காதலுடன், தனது வானத்துடன்
அவர்கள் அருகேதானே வந்தமர்ந்து கொண்டிருந்தது
கடல்!

Read more...

Wednesday, February 4, 2026

இதழ் வண்ணம்

சாப்பிடும்போது அவர்
தன் இதழ்களில் சூடியிருந்த
வண்ணத்தையும் சாப்பிட்டுவிட்டாரா, என்ன?

கைப்பை திறந்து எடுத்து
அதனை மீண்டும் சூடிக்கொண்டார்
மனிதர்களைப் போலின்றி
தன் வாழ்வினை நன்கறிந்த
உண்ணும் உணவோடு போலவே
பார்க்கும் விழிகளோடும்
கேட்கும் செவிகளோடும்
தழுவும் காற்றோடும்
உயிர்க்கும் மூச்சோடும்
உட்சென்று செரித்து மறைந்துவிடும்
வண்ணத்தை!

Read more...

Monday, February 2, 2026

பேரு புகழு . . .

பேரு புகழு இரசிகர்கள் என
நிறைந்திருந்த மனித சமூகம்
நடுவே அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்

“நீ பெண்ணாயிருப்பதே போதும் தெரியுமா?”
என்றான் அவன்.

அறிவுரை கூற வந்துவிட்டாயா, முட்டாள்!
நாம் மனிதர்களாய் இருப்பதே போதுமானது என
ஏன் சொல்ல முடியவில்லை உனக்கு?
எனச் சொல்லாமலேயே
ஒரு முறை முறைத்தார் அவர் அவனை!

Read more...

Monday, January 26, 2026

மானசா-90

ஒவ்வொருவராய் தங்கள் கவிதைகளை வாசித்துவிட்டபின் பார்வையாளர்களிடமிருந்து ஒவ்வொரு கவிதைக்கும் எதிர்வினை எதிர்பார்த்து நடத்தப்படும் ஒருவகையான கவியரங்கம் அது. பார்வையாளர்களில் ஒருவராய் அமர்ந்திருந்த தந்தையின் மடியில் அமர்ந்திருந்தது, ஒரு குழந்தை.

ஒவ்வொருவரும் தங்கள் கவிதையை வாசித்து முடிக்கும்போதும் மிகச்சரியாகவே அதே நேரத்தில் அதேநேரத்தில் அந்தக் குழந்தை கரைந்தது. அப்படியொரு கரைச்சல்! குழந்தைகளுக்கே உரிய கரைச்சல்!

முதன்முதலாக அதைக் கண்டபோது, நல்லவேளை கவிதை முடிந்த போது கத்தியது என்று சமாதானமாகிக் கொண்டார்கள். தந்தைக்கு, குழந்தையை வெளியே கொண்டுசென்று நிற்கவேண்டுமே என்ற சங்கடம். அப்புறம்தான் அந்த குழந்தை ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்தான் கரைந்தது கண்டு எல்லோரும் திடுக்கிட்டார்கள். நிகழ்ச்சி இயக்குனர் அதிர்ந்துவிட்டார்.

விழா முடிந்து வெளியேறுகையில் ஒவ்வொருவரும் அவர்களை ஈர்த்த கவிதைகளையும், ஒரு சந்திப்பின் நிறைவிலுமே செல்ல வேண்டியவர்கள் மிகுதியும் அந்த குழந்தை கரைச்சல் பற்றிய மனமூட்டத்தோடேயே சென்றார்கள்.

அடுத்த ஆண்டு, அதே காலை, அதே விழா, நிகழ்ச்சி அமைப்பாளரும் இயக்குனருமானவர் ஒரு அழைப்பிதழை அழுத்தமான ஒரு வேண்டுகோளுடனே குழந்தை மானசாவுக்கும் தந்தை நவீனுக்கும் மறக்காமல் அனுப்பிவைத்தார்.

கவியரங்கில் அந்த துடிப்பு ஒரு சடங்காக நிகழ்த்தப்படுவதை இயக்குநர் தன் மேலாண்மையால் நிறுவிய அந்த நாளிலிருந்து அது உறுதியாகிவிட்டது. குழந்தை அழாவிட்டால் குழந்தையைக் கிள்ளிவிட்டார்கள், பெற்றோர்கள். குழந்தையே வராவிட்டாலும், இருக்கிறவர்களிடையே வளர்ந்த குழந்தை, இளைஞர்கள் என்று மெது மெதுவாக ஆர்வமும் அக்கறையும் உள்ள யாராவது ஒருவர் குழந்தையைப் போலவே கால்கை உதைத்து கரைந்தனர்.

குழந்தை மானசா சிறுவயதிலேயே கவிதை மற்றும் இலக்கிய அரங்கில் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்தவர். அந்நாட்டின் மரியாதைக்குரிய கவிஞரும் வருங்காலத்திற்கு வழிகாட்டும் ஒரு இலக்கியப் புள்ளியும் ஆனவர். அவர் இல்லாத ஒரு காவியமேடை அந்த நாட்டில் கிடையாது.

இப்போது மானசா தொண்ணூறு வயது மூதாட்டியாக அந்த மேடையில் இருக்கிறார். விழா அரங்கில் கவிதைதோறும் கரைவதற்குரிய குட்டிக்குழந்தை இல்லை. வளர்ந்தவர்களும் இல்லை. அந்தச் சடங்கிற்குரிய குழந்தையாவதற்கு வெட்கப்பட்டவர்களாய் நீ செய், நீ செய் என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் மானசா அந்தப் பொறுப்பை தானே எடுத்துக்கொண்டு கைகால்களை உதைத்துக்கொண்டு கரையத் தொடங்கினார். யாராவது நிகழ்த்த வேண்டுமல்லவா?

Read more...

Saturday, January 24, 2026

தேவதேவனின் மூன்று கவிதைத் தொகுப்புகள் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - இரண்டாம் பதிப்பு












தேவதேவனின் மூன்று கவிதைத் தொகுப்புகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் இரண்டாம் பதிப்பாக வெளி வந்துள்ளன

நூல்கள் கிடைக்குமிடம்:








விலை விவரம்:
முதல் தொகுதி - இரவெல்லாம் விழித்திருந்த நிலா - ரூ 230
இரண்டாம் தொகுதி - கண் விழித்தபோது - ரூ 365
மூன்றாம் தொகுதி - அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது - ரூ 405

Read more...

Friday, January 23, 2026

கலைச் செல்வியே, அம்மா!

உள்ளதாம் பொருளை
ஓதி உணர்த்த முடிந்ததா?
ஓதும் வேதங்களால்
உள்ளொளி துலங்கியதா?

கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
துயர்மலி உலகின் பெருவலி கொண்ட
துய்யர்களிடமும் இருப்பாள்தானே?

கருணை வசனங்கள் போதுமோ
கருணை அதில் உண்டோ, செல்வி?
கள்ளமற்ற முனிவர்களா,
கள்ள முனிவர்களா என்பதையும்
கண்ணுடையார் ஒருவரால்தானே
கண்டுகொள்ள முடியும், தேவி?

கைப்புண்ணைக் காணக்
கண்ணாடி வேண்டுமோ, அம்மா?

உள்ளதாம் பொருள் அதனையே
வளர்ப்பதற்கு வேறு வழியே இல்லையா?
அதைக் காட்டாமல்
துதிகளுக்கோ காத்திருப்பவள் நீ?

எம் அன்னையே
காண்பவர்களோடு காணாதார்க்கும்கூட
அருளும் நீ
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
அழித்துக் கொண்டேயிருக்கும் மனிதனுக்கும்
அளித்துக்கொண்டேதானே இருக்கிறாய்
கடவுளின் ராஜ்ஜியத்தை?

மெய்ச் செயல்வடிவமாக மட்டுமே
ஒளிரும் கருணையே!
துதிகளுக்கு வளையாத
அரும்பொருளேயான ஆளுமையே...!

Read more...

Wednesday, January 21, 2026

தேவமலர்கள்

குட்டி வானத்தைத்தான்
அவன் ஒரு போர்வையாய்ப்
போர்த்திக்கொண்டு
தலையைமட்டும்
வானத்திற்கு வெளியே நீட்டியவனாய்
துயின்றுகொண்டிருந்தான்.

வேற்றுக் கிரகத்திலிருந்துதான் ஒரு மனிதன்
தழைக்கும் காம்போடு
ஒரு மலரைக் கொண்டுவந்தான்.

ஒரே மலர்தான்
முதல் மலராய்
வேர்விடத் தொடங்கியது இந்த பூமியில்.

அப்புறம் இந்த பூமியில்
எல்லா இடங்களுக்கும் பரவிவிட்டது.
ஆனால் ஒவ்வொரு மலருமே
தன்னை முதல் மலராகவும்
மனிதர்கள் தேடும்
பேர், புகழ், பெருஞ்செல்வம் எல்லாம்
தானேதான் என்றும்
நொடிதோறும்
மாறி மாறி நிகழ்ந்து கொண்டேயிருக்கும்
தனது பிறப்பையும் மரணத்தையும்
சொல்லவே முடியாது என்றும்
கண்டவரே கிடையாது என்றும்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது காண்!

Read more...

Monday, January 19, 2026

காற்று

இந்தக் காற்று வெளியிடையே - கண்ணம்மா
நீதான் சொல்ல வேண்டும்.
வெளி அல்ல, வெளியிலுள்ள
அசைவிற்குப் பெயர்தானே காற்று?

பற்றி நிற்பதன்றி
வருடிச் செல்வதற்குப் பெயர்தானே, காற்று?

தான் என்பதும் ஆசை என்பதும்தானே
பற்றுகிறது?
பற்றாது வருடிச் செல்வதுதானே
அன்பு என்பது?

எங்குமிருப்பதனால்
அது ஓடிப் போவதேயில்லையே!
சென்று கொண்டேயிருப்பதுபோல்
அது வந்துகொண்டேயிருக்கிறதே;
பின் எதற்கு - என் கண்ணம்மா
ஆசையும் அச்சமும் சேகரிப்புகளும்?

Read more...

Saturday, January 17, 2026

அமைதி என்பது


பாடகி: தீபா

இக் கவிதையை இங்கே வாசிக்கலாம்.

Read more...

Friday, January 16, 2026

இந்த இடத்திற்குத்தான்...

இந்த இடத்திற்குத்தான்
உங்கள் எல்லோரையும்
அழைத்து வந்துவிட விரும்புகிறேன்
ஆனால் உங்கள் ஒவ்வொருவரினதும்
முழு ஒத்துழைப்பும் இல்லையெனில்
இது நடக்காது.
துளிகளால்தாம்
பெருவெள்ளம் என்பதை
நாம் எப்போதும் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம்.
இங்கே வந்துவிட்டால்
எரியும் நம் தாகவிடாய்
எல்லாம் அடங்கிவிடும்.

எரியும் நம் தாகவிடாய்
எல்லாம் அடங்கிவிட்டால்
நாம் இங்கே வந்துவிடலாம்
என்றும் சொல்லலாம்.
இங்கு அங்கு எனும் இடங்களில்லை
காலமும் இல்லை
ஒரு நொடிதான் காலம்
என்றும் சொல்லலாம்.

எல்லாம் அடங்கிவிடும் இங்கே
பேர் புகழ் பெருஞ்செல்வம்
எதுவுமே தேவைப்படாது
ஒரே ஒரு துயரம்தான்
நம்முடைய தாகமாய் நம்மிடம்
தங்கிவிடக்கூடும்
எல்லோரும் இந்த இடத்திற்கு
வந்துவிட வேண்டும் என்பதே அது!

இந்த இடத்திற்குத்தான்
உங்கள் எல்லோரையும் அழைத்து வந்து விட விரும்புகிறேன்.
அங்கே நான் இருக்கமாட்டேன்
நாம் மட்டுமே இருப்போம்.
இல்லை, நாமும் இருக்கமாட்டோம்
நம் உறவு மட்டுமே இருக்கும்!

Read more...

Thursday, January 15, 2026

குளிர்

குளிர் கூடிவிட்டது
எனது பெருங்களிப்பும்தான்
கூடிவிட்டது!

இறுகக் கட்டி அணைப்பதுபோன்ற
இந்தக் குளிர்
உனது பேரன்புதான் அல்லவா?

உனது செல்ல ஆட்டுக்குட்டிகளான
எங்களுக்கு
தலைக்கவசமும் உடல்கவசமுமாய்
குளிராடைங்கள் அணிவித்து
நடக்கமட்டுமே செய்தால் போதுமென்றும்
வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றும்
இரண்டு கைவிரல்களையும் சட்டையின்
கீழ்ப்பைகளுக்குள் புதைத்துக்கொண்டு
எத்துணை சுகமாய் நடக்கச்சொல்கிறாய்
உன் காதல் வெளியில்!

Read more...

Monday, January 12, 2026

தன்னறம் வெளியீட்டில் தேவதேவனின் புதிய கவிதைத் தொகுப்பு நூல்கள்
























தனிமரம் தோப்பாகுமோ 
என்றார்கள்
ஆ கும் என்றெழுந்தது பார்
ஆலமரம்!
---------------------------------------------------------
  - ப382, ”பக்கத்தில்தான் இருக்கிறது வீடு”(2019) கவிதைத் தொகுப்பிலிருந்து.


தேவதேவனின் புதிய கவிதைத் தொகுப்பு நூல்கள் 
"ஆ கும் என்றெழுந்த ஆல்”  
மற்றும் 
இந்தக் காற்று வெளியிடையே” 
தன்னறம் வெளியீட்டில்  வந்துள்ளன.  

தற்போதைய சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கடை எண் 315லும்  கிடைக்கிறது.

Read more...

இந்த மனிதர்கள்

தளிர்நடைச் சிசுக்களாய்
சொர்க்கத்திலிருந்து வந்த
தேவதைகளை நடத்தியபடி
"மாமாவுக்கு வணக்கம் சொல்லு" என்றபடி
உலவும் மனிதர்களாய்
இன்று ஓர் அற்புத உலகக் காட்சி!

இந்த மனிதர்கள் எல்லோருமே
சொர்க்கத்தை
கவிதையின் மதம் உலவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
படைத்துவிடும் முகமாய்
தங்கள் குழந்தைமையைத்தான் இப்படி
வெளியே உலவ விட்டுள்ளார்களா?
அல்லது
தங்கள் வேண்டாமையினால்தான்
இப்படி வெளியே விட்டுவிட்டு
அதையும் அறியாமலே உலவுகிறார்களா?

யாண்டும்
களங்கமில்லாத
கருப்பை உடையவர்களில்லையா
இந்த மனிதர்கள்?

தங்கள் மூடத்தனங்களால்
சொர்க்கத்தை மூடிவிட்டு
புகைமூட்டத்தில் திணறிக்கொண்டிருப்பவர்கள்தாமோ?

Read more...

Friday, January 2, 2026

சவால்

எத்தனை பயன்பாட்டுக்குப் பிறகும்
அழுக்காகாமல்
மிக எளிதில் மீண்டு கொள்ளும்படியாய்
எப்போதும் ஒளிர் பளபளப்புடனே
படைக்கப்பட்டிருக்கும்
இந்த உணவுத் தட்டுகள் போலே
படைத்துக் கொள்ள முடியாதா என்ன.
நம் மனதை நாம்?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP