Wednesday, November 26, 2025

நமது அறவுணர்வை மீட்டுக்கொண்டோமா?

நம் அறவுணர்வை மீட்டுக்கொள்ள
நமது கணக்கறிவும் அறிவியல் தொழில்நுட்பமும்
போதாதா என்ன?

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்
பிறக்கப் பிறக்க ஒவ்வோரு குழந்தைக்கும்தான் -
ஒரு எண் இட்டு அவர்களை ஒரு தாய் போல்
பேணிக்கொள்ள முடியாதா,
அவர்கள் சாகும்வரை?

இந்த எண்ணைப் பாருங்கள்
எந்த எண்களையும் பாருங்கள்
ஒரு எண்ணோடு ஒரு எண் நெருங்கி
செயல்வளர்ச்சி நோக்கில் போகும் நோக்கமன்றி
இணக்கமற்ற உணர்ச்சிகள் ஏதாவது கொண்டிருக்கிறதா
பாருங்கள்!
333333 – இந்த எண்கள்தாம் ஒற்றுமையாய்
இருக்கின்றனவா?
3685907214 – இந்த எண்கள்?
எந்த எண்களானாலுமே
எப்படி இணங்கி வாழ்கின்றன, பாருங்கள்

Read more...

Monday, November 24, 2025

நாம் வந்துவிட்டோமா அந்த உலகிற்கு?

ஒரு வயதிற்குள்ளேயே
பேயறைபட்ட முகங்களாகிவிட்ட
குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனவும்
அச்சம் கொண்ட பெண் விழிகளை
மான் விழிகள் எனவும் –
கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடக்கும்
நம் அழகியல்பற்றி
நாம் யோசித்திருக்கிறோமா?

இரண்டுபட்டுக் கிடக்கும்
எல்லாவற்றாலும்
பாதிக்கப்பட்டும் பாதிக்கப்படாமலும்
அய்ம்பதுக்கும் அய்ம்பதுக்கும் நடுவே
தராசுமுள் நுனிக்கூடா மய்யத்தின் –
பூஜ்யத்தின் –
பேருலகினின்றும் பிறக்கும் செயல்கள்
தானில்லாமல் தானாகவே
அமைதியாக நடந்துகொண்டிருக்கின்றனவா
இவ்வுலகில்,
இயற்கையான ஒத்துழைப்பு எனும்
சின்னஞ்சிறு முயற்சிகளை மட்டுமே பற்றிக்கொண்டு?

எல்லாத் தடைகளையும்
வீணாற்றல்களாகும் குப்பைகளையும்
கண்டு தாண்டி
நாம் வந்துவிட்டோமா, இந்த உலகிற்கு?

Read more...

Friday, November 21, 2025

கோயில் நகர்

நகர் நுழை வாயிலிலிருந்தது
கொட்டை எழுத்தில்
கோயில்நகர் என்ற அறிவிப்புப் பலகை!

சடாரென்று ‘கோயில்நகர்’ என்று
கூச்சலிட்டார் சுநேகா,
நகரமே திரும்பிப் பார்க்கும்படி!

ரொம்ப நன்றி என்றது பலகை
உன்னைப்போல
களங்கமின்மையும், களிப்பும்
எழுச்சியுமிக்க மனிதர்களை
இப்போதெல்லாம் எங்கே பார்க்கமுடிகிறது?
ரொம்ப மகிழ்ச்சியம்மா
உன்னைக் கண்டதிலும் வரவேற்பதிலும்
என் வாழ்வே நிறைவடைந்துவிட்டதுபோல் தோன்றுகிறது!

கோயில் இருந்தென்ன
பக்தி இருந்தென்ன
பழம்பெருமைகள் இருந்தென்ன
வாழ்வை மனிதன் இழந்துவிட்டால்
என்ன இருந்து என்ன பயன்?

Read more...

Wednesday, November 19, 2025

மெய்வழிச்சாலை

நாம் இதுகாறும்
கட்டியிருந்த வீடு
பாதைகளைப் பற்றிக்
கவலைப்படுவதில்லைதானே?

வீட்டுக்கு இணையான தொகையுடன்
வாங்கிய கார்
பாதையைப் பற்றிக் கவலைப்படுகிறது!

Read more...

Monday, November 17, 2025

நான்கு சக்கரங்கள்

நான்கு சக்கரங்களும்
நான்கு திசைகளைத் தேராமல்
ஒரே திசைநோக்கியே ஓடுகின்றன

நான்கு திசைகளுக்கும்
போகவேண்டுமெனினும்
ஒன்றுபோல் கூடியே
ஒரே திசைவழியேதான்
நான்கு திசைகளையும்
பார்த்து வருகின்றன

Read more...

Friday, November 14, 2025

நீண்ட மவுனத்திற்குப் பிறகு...

நீண்ட மவுனத்திற்குப் பிறகு
சுநேகா பேச ஆரம்பிக்கும்போதெல்லாம்
மழலையுடன்
பேச்சைத் துவங்குகிறார்

ஏன்?

அப்படியெல்லாம் கேட்கமுடியாது
அது அப்படித்தான்

Read more...

Thursday, November 13, 2025

நாம் செய்யவேண்டியதென்ன?


கவிதை வாசிப்பு: கவிநிலவன்

இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Read more...

Wednesday, November 12, 2025

மெய்ச்செயல்கள் பிறக்கும் ...

மெய்ச்செயல்கள் பிறக்கும்
புதையலையும் அதன் இடத்தையும்
அவன் அவர்களுக்கு -
கூச்சலிலும் குழப்பங்களிலும்
புலம்பல்களிலும் மாட்டிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு எப்படிக் காட்டப்போகிறான் ?

வாய்திறந்தால்
முத்து உதிர்ந்துவிடும் என்றா
பேசாமல் நிற்கிறாய்?
(அது அப்படித்தான்
இயேசுகூட சொல்லியிருக்கிறாரே
பன்றிகள்முன் முத்துக்களை எறியாதே என்று!)

தலையில் குடம்
விழுந்துவிடும் என்றா
நிறைபானம் அலம்பிச்
சிந்திவிடும் என்றா
இப்படி ஆகிவிட்டாய்?
(உன்னால் கண்டுபிடிக்க
இயலவில்லையா அன்பா?)

நீ கல்யாணம் செய்திருக்கக்கூடாது
எங்காவது சாமியாராகப் போயிருக்கலாம்தானே?
(எல்லோரும் சாமியாராகாதவரை
மீட்சி இல்லை அன்பா! மேலும்
பிரச்னைகள் திருமணங்களில் அல்ல

Read more...

Tuesday, November 11, 2025

கடற்கரை


கவிதை வாசிப்பு: கவிநிலவன்

இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Read more...

Monday, November 10, 2025

ஓர் உலகம், ஓர் வீடு...

ஓர் உலகம் ஓர் வீடு என்றாகிவிட்ட
மலை உயர அடுக்கக மாளிகையின்
ஒரு லிஃப்ட் அறையில்

இதற்கு முன்பு
நாடு மொழி இனம் சாதி கடந்த
அந்நியர்கள்
இவ்வளவு நெருக்கமாக
நின்றுகொண்டிருப்பதைப்
பார்த்திருக்க மாட்டீர்கள்!

எந்த ஒரு இரகசியச் செயல்பாடாக
இவையெல்லாம் நடக்கின்றன என்பதையும்
உணர்ந்திருக்க மாட்டீர்கள்?

Read more...

Saturday, November 8, 2025

ஒளிவேளை


பாடகி: தீபா

இக் கவிதை விரும்பியதெல்லாம்(2002) கவிதைத் தொகுப்பில் உள்ளது.

Read more...

Friday, November 7, 2025

லிஃப்ட் அறையில்

லிஃப்ட் அறையில்
நெருக்கமாக நான்குபேர்
ஒரு நற்காலை மணத்துடன்
அலுவலகப் பயணப்பைகளுடன்
ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல்...

ஒருவரை ஒருவர்
நன்கு புரிந்தவர்கள் போன்ற
புன்னகையும்தான்
எத்துனை அழகு! அற்புதம்

Read more...

Thursday, November 6, 2025

அனைத்து உயிர்களுமே?


கவிதை வாசிப்பு: கவிநிலவன்

இக் கவிதை ”நல்லதோர் வீணை” கவிதைத் தொகுப்பில் உள்ளது.

Read more...

Wednesday, November 5, 2025

சிலுவையில் அறையப்பட்ட இயேசு

இடிந்துவிடாமல்
வானத்தைத் தாங்கிக் கொண்டன
விரிந்த கைகள்
கால்கள் மண்ணில்
அழுத்தமாக ஊன்றிக் கொண்டன

“எல்லோரும் இன்புற்றிருக்கும்
உலகைக் கண்டடையும் வரை
இங்கிருந்து என்னால்
இறங்க முடியாது, அன்பா!”

கண்களும் காதுகளும் உள்ளோர்க்கெல்லாம்
அவர் குரல் கேட்கத்தானே செய்யும்?

Read more...

Tuesday, November 4, 2025

மின்னற் பொழுதே தூரம்


கவிதை வாசிப்பு: கவிநிலவன்

இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Read more...

Monday, November 3, 2025

கேள்விகள்

அன்புடையவர்களாய் நாமிருந்தால்
அன்பைத் தேடி, புகழைத் தேடி
அலைவோமா நாம்?

நிறைவுடையோராய் நாமிருந்தால்
செல்வத்தைத் தேடி, செல்வாக்கைத் தேடி
அலைவோமா நாம்?
தன்மய்யம் கொண்டோராய்
புன்மையப் பாதைகளிலெல்லாம்
அலைவோமா நாம்?

எல்லோரும் கவிஞர்களாகாதவரை
நமக்கு விடுதலை இல்லை என்பவன் எப்படி
போட்டி, பொறாமை, பேராசை, மேலாண்மை
பயம் கொண்ட உலகில் அலைவான்?

Read more...

Saturday, November 1, 2025

கவிஞர் தேவதேவனுடன் ஓர் உரையாடல், ”குவியம் கலை மையம்” ஒருங்கிணைத்த ஒரு நிகழ்வு.

இந் நிகழ்வு 10.10.2025 அன்று கேள்வி பதில் பாணியில் இனிதே அமைந்தது.

கவிஞர் தேவதேவன் தன் பால்ய பருவம் பற்றி உரையாடுகையில் மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

முதலாவது, அவர் குழந்தை பருவத்தில் இருந்தே சொல் எடுத்து வார்த்தையாடுவதில் ஈடுபாடு இல்லாதவராகவும், அதற்கு நேர்மாறாக தன்னை சுற்றி நிகழ்வனவற்றில் அதிகம் கவனம் உள்ளவராகவும் இருந்தார் என்பது.

இரண்டாவது, அவர் சகோதரி அவர்களுடைய தந்தையாருக்கு புத்தகம் படித்து காண்பிக்கும் பழக்கம் உடையவராக இருந்ததால், மிக சிறிய வயதிலேயே கேள்வி ஞானமாகவே நிறைய புத்தகங்களை அறியும் வாய்ப்பை பெற்ற ஒருவராக இருந்தார் என்பது.

மூன்றாவது அவர் 1948 ஆம் வருடத்தில் பிறந்தமையாலும், 1945 உலகப் போர் பற்றிய உரையாடல்கள் அவரை சுற்றி நிகழும் சூழல் நிலவியதாலும், அச்சூழல் அவருள் எழுப்பிய கேள்விகளை அச்சிறு வயதிலேயே கொண்டவராக இருந்தார் என்பது.

கவிஞர் தேவதேவனின் தந்தை ஈ.வெ. ரா அவர்களின் அபிமானி என்பதால் அவரிடமே தன் மகனுக்கு பெயரிடும்படி கேட்டு கொண்டார். ஈ.வே. ரா அவர்களும் கைவல்ய நவநீதம் எனும் தத்துவநூலின் (ஆசிரியர்: தாண்டவராய முதலியார் ) மேல் கொண்ட தீவிர ஈடுபாட்டால், நன்பர்களால் கைவல்யம், கைவல்ய ஸ்வாமிகள் என்றெல்லாம் அழைக்கப்பட்டவரும், தனது பெரும் மதிப்பிற்குரியவருமான அன்பர் பெயரை குழந்தைக்குச் சூட்டினார். தனக்கு நினைவு தெரியும் வயதை அடைந்ததும் அப்புத்தகத்தை நூலகங்களில் தேடி சென்றதாகவும், தன் 19ஆவது வயதில்தான் வெளியூர் நூலகம் ஒன்றில் அதை வாசித்ததாகவும், அத்தேடலில் பிற தத்துவ புத்தகங்களை வாசிக்கும் நல் வாய்ப்பு அமைந்ததாகவும் பகிர்ந்து கொண்டார்.

இத்தனை தத்துவ தரிசனங்களும் மனிதனை ஆற்றுப்படுத்த தவறியதைத் தான் உணர்ந்ததாலே, அதை பற்றி தீவிரமாக சிந்தித்ததாகவும், அச்சிந்தனையில் இருந்து தான் கவிதையின் மதம் என்ற தரிசனத்தை தான் அடைந்ததாகவும் கூறினார்.

நம் தற்கால வாழ்க்கை முறை இயற்கையை விட்டு வெகு தூரம் விலகி இருப்பதால், நாம் மெதுமெதுவாக இயற்கை மீது நமக்கு இருக்க வேண்டிய அன்பையும் அக்கறையையும் விட்டு விலகி மனிதனால் உருவாக்கபட்ட சின்னங்களையும் உருவ சிலைகளையும் கொண்ட மதங்களின் வழிப்பாட்டை சென்று அடைந்துவிட்டோம். மதத்தை ஒரு பற்றுகோளாக இறுக பற்றி கொள்ளும் பண்பு மனிதத்திடையே தோன்றிவிட்டது. மதங்களிலேயே திளைத்த மனித மனம் கவிதை தருணங்களை உணரும் ஆற்றலை இழக்க தொடங்கியது.

மனிதம் மனிதத்தை நோக்கி நிறைவான பயணம் ஒன்றை மேற்கொள்ள தேவையான எல்லா தரிசனங்களையும் கவிதையின் மதம் தன்னுள் கொண்டிருக்கிறது. அது ஓன்றே எல்லோர் உள்ளும் உறங்கும் கவிஞனை தொட்டு எழுப்பும் வல்லமை பெற்று உள்ளது, அவ்வாறு நிகழும்போதே அமைதியும் பெருவாழ்வும் அமையும் என்பதே அவர் கூற்று.

ஒரு கவிதை என்பது பெருவெளி நம்மை நோக்கி பெரும் நேசத்துடன் நீட்டும் ஒரு கரம் என்றும், அதை பற்றிகொண்டே நாம் ஒவ்வொருவரும் மேலெழ முடியும் என்பதையும் ஆணித்தரமாக முன் வைக்கிறார்.

ஒரு சிறந்த கவிதை என்று எதை கூற வேண்டும் என்ற கேள்விக்கு அவர் பதில் உரைக்கையில், நாம் நம் கவி மனம் கொண்டு உணரும் தரிசனங்களே கவிதைகள் ஆகின்றன. இயற்கை, உறவுகள், செயல்கள், பெயர்கள், அகநிலை சொற்கள் யாவற்றிலும் கவிதை உள் உறைந்துள்ளது. அவற்றை வெளி கொண்டு வருபவனே கவிஞன் ஆகிறான் என்கிறார். கவிதையை விமர்சனம் செய்யும் அளவுகோளும் அதுவாகவே இருக்க வேண்டும் என்றும் மாறாக காட்சி விளையாட்டுகளையும் சொற் சேர்கைகளையும் கவிதை என்று மயங்கி கொள்ள கூடாது என்பதையும் கூறுகிறார்.

நாம் நம் நெருங்கிய நண்பரிடம் ஆத்மார்த்தமாக உரையாடும் போது எவ்வாறு அர்த்தம் பொருந்திய ஒரு உணர்வு நிலையை கொண்டிருப்போமோ அதே உணர்வு நிலையிலேயே கவிதையும் எழுதப்பட வேண்டும் என்கிறார்.

8000கும் மேற்பட்ட கவிதைகள், சில சிறுகதைகள், ஒரு நாடகம், ஒரு கட்டுரை தொகுதி என்று அனைத்து இலக்கிய வகைகளின் ஊடாக சென்று கொண்டிருக்கும் அவர் பயணத்தில் நாமும் ஒரு சில மணித்துளிகள் இணையும் நல்வாய்ப்பு கிடைக்க பெற்றோம்.

நன்றி,
பிரியா, பெங்களூர்.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP