தளிர் நுனிதோறும்
தளிர் நுனிதோறும்
கதிர் கதிராய்ச் சிலிர்த்த
மலர் மொக்குகள் குலுங்கும்
கொன்றை மரத்தில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப்
பூத்த மலர்கள்,
பின்வரும் பூவெள்ளத்தை அறிவிக்க என
ஆர்வமாய் முன்னோடி வந்து நிற்கும்
குழந்தைகள்!
ஒரு நண்பகல் ஓய்வு உறக்கத்தின்போது
காற்றின் படிக்கட்டுகளில்
ஓசை அஞ்சி வைக்கும் மெல்லடிகளுடன்
என் நாசியருகே வந்து
என்னைத் தொட்ட
மலரொன்றின் சுகந்தம் துய்த்தவனாய்
நான் விழித்தெழுந்து பார்க்கையில்
ஓராயிரம் சிரிக்கும் மலர்த்தேவதைகளில்
நான் அறியாதே என்னைத் தீண்டிய
ஒற்றை மலர் அவள் எங்குள்ளாள்
எனத் தேடினேன்.
எல்லோரிலும் தன்னைக் காணுக
என்பதுவோ
அவள் தன்னைக் காட்டி, பின்
மறைத்துக்கொண்டதன் இரகசியம்
என வியந்தேன்.
காணக் கிடைக்காமலோ
கண்டுகொள்ள இயலாமலோ போகும்
பிரிவின் வேதனையே
நம் துயர் என்பதறிந்தேன்.