Friday, December 8, 2023

கயிற்றில் நடப்பவன்

இரண்டு கம்பங்களின்
ஒரு நுனியிலிருந்து ஒரு நுனிக்கு
இழுத்துக் கட்டப்பட்ட கயிற்றில்
ஒரு மனிதன்

வான்வெளியில் ஒரு பாதையைக்
கண்டுகொண்டவனாய்
அந்தரத்திலிருந்தும்
தவறி விழுந்துவிடாதபடி
தன் உடல் பேணும் அபிநய
நடை கண்டு விட்டவனாய்...!

அண்ணாந்து பார்க்கும்
ஞானிகளுக்கு ஞானம்
கவிஞர்களுக்கு ஞானமும் கவிதையும்
அந்த மனிதனுக்கு பிழைப்பு
வறுமையிலாததோர் உலகைப் படைக்க
வக்கில்லாத மனிதத் திரளுக்கு
வித்தையும் பொழுதுபோக்கும்!


-துயர்மலி உலகின் பெருவலி (2023) தொகுப்பிலிருந்து.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP