அம்மாவின் முகம்
புகைப்படம் இல்லாது போய்விட்டதால்
பார்க்கும் பெண்களிடமெல்லாம்
பெருகிவிட்டது அம்மாவின் முகம்!
தனியான ஒரு விண்மீனைப் பார்க்கையில்
அம்மாவின் மூக்குத்தி ஏன் ஞாபகம் வருகிறது
என்று தெரியவில்லை!
Poet Devadevan
புகைப்படம் இல்லாது போய்விட்டதால்
பார்க்கும் பெண்களிடமெல்லாம்
பெருகிவிட்டது அம்மாவின் முகம்!
தனியான ஒரு விண்மீனைப் பார்க்கையில்
அம்மாவின் மூக்குத்தி ஏன் ஞாபகம் வருகிறது
என்று தெரியவில்லை!
எண்ணங்களை விலக்கியபடி
எண்ணங்களற்ற வெளிநோக்கி
அவன் நடந்துகொண்டிருந்தான்
இப்போது அவன்
எண்ணங்களற்ற வெளியில்
நடந்துகொண்டிருந்தான்
மரங்கள் நடுவே நடந்து செல்லும்
ஒரு மனிதனைப் போலவே!
காற்றில் நனைந்தபடி நடந்து செல்கையில்
காதலில் மிதந்து செல்வது போலில்லை?
எந்த ஒரு அன்பர்-அறிஞர்- எதிர்ப்பட்டாலும்
உங்கள் நடை தடைப்பட்டுவிடாதவரை
ஒரு பிழையும் நிகழ்வதில்லையல்லவா?
எல்லா அறிவுகளும்
விரல் தொடுகையில் எளிதாகவே
அடையக் கூடியதாகவே இருக்கிறது
அன்பு ஒன்றுதான் மிக அரிதாக
இருக்கிறதாய் உணர்கிறீர்கள்?
அதுவும் எத்துணை எளிதான ஒன்று
அனைத்து அறிவுகளையும்
ஒரு சுட்டுவிரல் விலக்கி நிற்கையில்!
அணைய வேண்டியதை அணைவதற்குத்தானே
விலக்க வேண்டியதெல்லாம் விலக்கப்படுகிறது
தொட்டுவிட்டாலே அன்பும் அறிவாகிவிடுகிறதெண்ணி
தொடுகையையும் விலகலையும் தொட்டுவிடாத, விட்டுவிடாத
அன்பின் இரகசியத்தை அறிந்ததுவாய்
தென்றலாய் விரல்கள் வருடிச் செல்கின்றன!
நடந்து செல்கிறான் அவனும்!
நடந்து செல்கிறீர்கள் நீங்களும்!
ஒளியிலிருந்து பிறந்த விழிகள்
இருளில் மாட்டிக்கொள்ளுமா என்ன?
ஒளியும் ஒளியின் நிழல் போலும்
நின்று கொண்டிருந்தார் அந்தப் பெண்!
பார்வை ஒன்றுதான் இந்த உலகைக்
காப்பற்ற வல்லது என்பதுபோல்
பார்த்தபடி நின்றிருந்தார்
பார்வையைக் கண்டுதானே
காதல் கொண்டுவிடுகிறார்கள் காதலர்கள்!
மெய்ச் செயல் இரகசியமாய்
பார்வையிலிருந்துதானே பிறக்கிறது பாதை?
அப்புறம்,
பார்வையைத் தக்கவைத்துக் கொள்ளாது
பற்றியதைப் பற்றிக்கொண்டு உழல்பவர்களால்தானே
பாழாய்ப் போய்க்கொண்டிருக்கிறது இந்த உலகம்?
நிலத்தில்
குதித்துக் குதித்துப் பகட்டித் திரிந்த
ஆடைகளையெல்லாம் களைந்துவிட்டு
மீண்டும் குழந்தையாய் தான் வாழ்ந்து களித்த
பெருங்களத்திற்கே வந்து
நீந்தத் தொடங்கியதுகாண் தவளை!
அப்போதுதான் உலகு மீண்டதுகாண்
போர்களும் துயர்களுமற்ற
ஆனந்தப் பெருவெளி அமைதிக்கு!
அப்பா
திராவிடர் கழகத்தின்
கருஞ்சட்டைக்காரராயிருந்தார்
அத்துணை தீவிரமானவர்.
அப்புறம் எப்படியோ திமுகவினரானார்
அப்புறம் எப்படியோ முதுமையான வயதில்
திருநீறணிந்து கடவுள் படத்தின்முன்
தொழுது கொண்டு நிற்பவரானார்…
ரொம்ப கனிந்துவிட்டாரா
எல்லோரும் செல்வதுபோல்?
அல்லது மழுங்கிவிட்டாரா
தனை அறியும் அறிவிலாத மானுடர்போல்?
குதித்துக் குதித்துக் குதித்தே நிதம் சாகின்றன
தூரம் வந்துவிட்ட தவளைகள்!
குதித்துக் குதித்துக் குதித்தே நிதம் சாகின்றன
தூரம் வந்துவிட்ட தவளைகள்!
எந்த மொழியானால் என்ன
அன்பில் தோய்ந்து ஒலிக்கையில்
தேவபாஷையாகத்தானே இருக்கிறது?
எந்த மனிதர்களானால் என்ன
அன்பில் வெளிப்படுகையில்
கடவுளாகத்தானே காணப்படுகிறார்கள்?
எவருடைய பெருவிருப்பமாக -?
நம் எல்லோருடைய பெருவிருப்பமமுமாகவா
பெய்கிறது இந்த மழை?
விண்ணில் கார்முகில்களாகக் கூடிய
கதையினைச் சொல்கின்றன
முத்து முத்தாய்
மேட்டு நிலங்களில்
மலைச் சரிவுகளில்
கண்ணாடிகளில்
மழைத் துளிகள் இணைந்து இணைந்து
வழியும் கண்ணீர்க் கோடுகள்
துயர் நீங்கிய காட்சியா
இந்தப் பெருமழை?
துயரகரமான நினைவுகளேதானா
கார்மேகங்களாய்த் திரண்டு
துயர் நீங்கும் பெருமழையாகவும்
பொழிகின்றன?
காதுகளைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு
கண்களைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு
வாயைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு
சும்மா சும்மா ஓடிப்போய் நின்றா
நாம் எதையாவது
பார்க்கவும் கேட்கவும் பேசவும் செய்கிறோம்?
காண்பதற்குத்தானே அய்யா
இந்தப் பொம்மைகளையும் வைத்திருக்கிறீர்கள்?
இவைகள் நல்லவைகளா? கெட்டவைகளா?
முன்னறிவில்லாத காணுகையிலிருந்துதானே
மனிதனால் படைக்கப்பட்டிராத
ஒளியின் பாதை
ஓடி வந்து நடத்துகிறது நம்மை?
வியப்புக் குறி என்றும்
அழைக்கப்படும் உணர்ச்சிக்குறியைத்தான்
கொஞ்சம் நீட்டி, சுளித்து, வளைத்து
கேள்விக் குறியாக்கியிருக்கிறோம்.
அதாவது அன்பர்களே
நாம்தான் கேள்விக் குறியாக்கியிருக்கிறோம்
அந்த ஆதிக் குறியை!
ஆகவே அன்பர்களே
அந்தக் கேள்வியை
நாமே தட்டி நிமிர்த்தி
உண்மையைப்
பார்த்துவிட முடிகிறது அல்லவா?
நான் வேறு நீ வேறின்றி
இருக்கும்போதுதான்
எத்துணை அமைதி!
அமைதி மட்டுமே!
“நானா”க இருக்கும்போது மட்டுமே
உன்மீது பரிவுகொண்ட உறவாக, செயலாக
எந்தத் துயர்களுக்கிடையிலும் ஒளிரும்
பெரும்களிகள்! பெருநிறைகள்!
“நீ”யாக்கி உன்னைப் பிரிந்திருக்கையில்தானே
இவ்வுலகத் துயர்களையெல்லாம் தாங்கி
தவிப்பவனாக இருக்கிறேன், என் அன்பனே?
கோயில் திருவிழாப் பொருட்காட்சிகளில்தான்
பெண்களுக்கான அணிகளுக்கும்
யாவருக்குமான உணவுப்பண்டங்களுக்கும்
மேலாக ஒளிர்வது
குழந்தைகளுக்காகக் குவிந்து கிடக்கும்
பொம்மைகள்தான் அல்லவா?
குழந்தைகளின் விழிகளிலும்
அவர்கள் விரும்பும்
பொம்மைகளின் விழிகளிலும்
ஒன்றை ஒன்று ஈர்ப்பதுபோல்
ஒன்றுபோல் சுடர்வது என்ன?
மெய்ம்மையான மதத்தையும்
அதன் தெய்வீகத்தையும்
நாம் பார்த்து விட்டோமா?
பெரியவர்களின் கடவுள் சிலைகளுக்கும்
மதத்திற்கும் நம்பிக்கைகளுக்கும் வெளியே
போட்டியோ தொடர்போ இல்லாத விளக்கமாக
ஒரு பெருஞ் சொல்லாக
கூட்டமும் கொண்டாட்டமும் குதூகலமுமாக
மனிதனுக்குத் தேவையானதெல்லாம் இருக்கிறதல்லவா?
பின் ஏன் இப்படி இந்தத் திருவிழா
கலைந்து போகிறது?
துயர இருள் மீண்டும் மீண்டும் இவ்வுலகைக் கவ்வ
கூடிக் கூடிக் கலையும்
இத் திருவிழாக்களின் இரகசியமும்
ஒருநாளும் மனிதர்கள் இதனை கண்டுகொள்ளாததின்
கொடுமையும்தான் என்ன?
உபவனத்து நடைபாதை ஒன்றில்
தொட்டில் வண்டியுடன் ஒரு பெண்
அவனைத் தள்ளிக்கொண்டுபோவதுபோலிருந்தது
அப்புறம்,
அய்ந்தாறு பெண்கள் சிரித்துப் பேசியபடியே
அய்ந்தாறு தொட்டி வண்டிக் குழந்தைகளுடன்
அப்புறம்,
அன்னையர்கள் தள்ளித் தள்ளி அமர்ந்து
எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் பூங்கா
குழந்தைகள் மட்டுமே
கால் நனைத்து விளையாடிக்கொண்டிருக்கும்
கடற்கரை
தள்ளித் தள்ளி நின்றே
எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும்
அன்னை/தந்தையர்கள் தவிர
யாருமே இல்லாத பூமி…
வேறு யாருமே இல்லாத பூமி…
தீராத அச்சத்தின்
விளைபொருள்களான
சாதி சமயங்களாலும்
பேராசை, போட்டி, பொறாமைகளாலும்
ஏழைகளை உறவுகளல்லர் என
ஒதுக்கி ஒதுக்கி வளரும் செல்வங்களாலும்-
நோய்பரப்பும்
நமது செயல்களும் செயலின்மைகளாலும்தானே-
பொதுவெளியெங்கும் விரிந்து கிடக்கின்றன
குப்பைகளும் நாற்றக் கழிநீர்களும்!
நமது உணவுப் பொட்டலங்களை
உண்டாக்கி காத்து வழங்கிவரும்
அன்னை இயற்கையையும் சகோதர மனிதர்களையும்தானே
பொதுவெளியெங்கும்
இப்படி கைவிட்டு எறிந்திருக்கிறோம்?
அவனுக்காகவேதான்
எத்துணை பெருங்காதலுடன்
விழித்திருக்கிறது இரவு!
அன்பு என்னும் பெயரில்
எந்த ஒரு தொந்தரவும் செய்துவிடாமல்!
அவன் விழித்திருந்தால்
அதுவும் விழித்திருக்கிறது
அவன் துயின்றால்தான்
அதுவும் துயில்கிறது!
அவன் பகல்களையெல்லாம்
இளைப்பாற்ற –
பணிகள் நிறைந்த
அவன் பகல்க்ளிலும்கூட
எத்துணை எத்துணை நிழல்களாய் வந்து
பிரியமனமில்லாப் பிரியத்துடன்
எட்டி எட்டி நின்றபடியே
பரிவு கொண்டு அவனைப்
பார்த்துக்கொண்டே இருக்கிறது!
அமைதிப் பெருங்கடலைப் போய்ச்
சேர்வதற்கான ஆறுகளா
இந்த மதங்கள்?
மதங்கள் இனங்கள் நாடுகள் என
சிதறிக் கிடக்கும்
இந்தப் படுகளங்களா…?
பாதைகளில்லாப்
பெருவெளியல்லவா
அமைதிப் பெருங்கடல்?
நமது பார்வையும் ஒளியுமல்லவா
பாதைகள்! மதங்கள்!
அல்லது
எந்தப் பெயர்களாலும்
அழைக்க முடியாதவை?
உடலை வதைத்த
மூச்சிளைப்பும்
சற்றே ஒரு தாளம்போல்
அமைதியாகிவிட்டது!
ஆனாலும்
புன்னகை இல்லாத அவர் முகத்தில்
மரணக்களை தீட்டிய
சோகம்
ஒரு பேரழகின்
உச்சத்தையல்லவா தொட்டுள்ளது!
காதலையும்
கருணையையும்
ஆன்றமைந்த முதிர்ச்சியையும்
திடீரென ஓர் ஒப்பனையால்
சூடிக்கொண்டது போல்
சிலரை திடுக்கிட வைக்கிறது அது
உண்மையானதென்றால்
மனிதர்கள் ஏன் அதைக் கண்டு
பயப்பட வேண்டும்?
சொல்லொணாத சோர்வுதான்
இப்படி நடிக்கிறதெனக்
கண்டு கொண்டவர்களாய்
அதை இதைக் கொடுத்து
உரம் ஊட்டப் பார்க்கிறார்கள்!
கைவிடப்பட்டவர்களாய் மட்டும்
அவர்கள் அறியப்படாதவரையில்
நடமாடுபவர்களைப்போலவே
நோயாளிகளும் அழகுதான் என்பதை
யாரால் மறுக்க முடியும்?
பள்ளி இறுதியிலிருந்த அவர் பையன்
ஓடி வந்து, அப்பா, அப்பா
சாதி சாதி என்கிறார்களே
அப்படி என்றால் என்ன?
நாம என்ன சாதி? என்று கேட்டான்
பதில் சொல்ல மனம் உடைந்து நின்ற அப்பா
அதெல்லாம் ஒன்றுமில்லைடா, நீ போய் விளையாடு
என்று அவனை விரட்டிவிட்டார்.
உடன் பணி செய்யும் நண்பர் ஒருவர்
தேநீர் வேளையின் போது கேட்டார்:
சார், மானுட விழுமியங்களைத்தானே
பண்பாடு என்கிறோம்?
மானுடப் பண்பாடு என்ற ஒன்றுதானே
இருக்க முடியும்?
நம்ம பண்பாடு நம்ம பண்பாடு
என்று சிலர் சொல்வது எதை
என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
புரியவில்லையா?
மனிதனைக் கொன்று குவித்துவிடக்கூடிய
சாதியைத்தான்
அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்று?
அய்ம்பது ஆண்டுகள்தானே கழிந்திருக்கும்?
நூறு ஆண்டுகள்?
உலகம் எவ்வளவு மாறிவிட்டது!
எவர் மனமும் நோகாமலே
எதுவும் அகற்றப்படாமலே
எல்லாம் மாறிவிட்டது!
ஒரு மின்னற் பொழுதில்!
ஒரு மயிலிறகுத் தொடுகையில்!
அழகழகான
பூங்காவனங்களுக்கு நடுவே உள்ள
நூலகங்கள்தாம் இப்போது கோயில்கள்!
தொன்மையான கோயில்கள் எல்லாம்
வரலாற்றை உணர்த்தும்
அழகிய கண்காட்சி தலங்களாகவும்
குழந்தைகள் ஓடி விளையாடக்கூடிய
மண்டபங்களாகவும் மாறிவிட்டன!
அடையாளங்களற்ற மேகங்களைப்போல்
மனிதர்கள் எங்கும் மிதந்து கொண்டிருந்தனர்
கவிதையின் மதம் மட்டுமே
கோலோச்சிக் கொண்டிருந்தது காண்!
அனைத்து மனிதர்களாலும் கொண்டாடப்படுபவையே
திருவிழாக்களாயிருந்தன.
ஒரு காலத்தில்
வேறுபடுத்தும் அடையாளங்களாய் இருந்தவை எல்லாம்
அழகை விரும்புவோர் எவராலும்
மாறி மாறி அணியக் கூடிய
வண்ண ஆடைகள் போல் மட்டுமே ஆகின.
எண்ணத் தொடர்களாலும் அச்சத்தாலும்
காலம் காலமாய் வந்த நினைவுகள் எல்லாம்
நூல்களுக்குள்ளும் மின் அணுத் தகடுகளுக்குள்ளும்
வெகு நிம்மதியாய் ஓய்வு கொண்டுவிட்டன!
அறிவியல் வளர்ச்சியின் கருணையினால்
சமூக அலுவல் நேரமும்
வெகு சிறியதாய் சுருங்கிவிட்டது!
எப்போதும் காலாதீதப் பெருவெளியில் பூக்கும்
காமலர்த் தோட்டத்து
வண்ணத்துப் பூச்சிகளே ஆயினர் காண்
மனிதர்கள்!
ஊர்ந்து சென்றுகொண்டிருக்கும்
சின்னஞ் சிறு வண்டுகள் போன்ற
இந்த மனிதர்களுக்குத்தான் எத்துணை திமிர்!
உச்சியிலிருந்து சூரியன்
பார்த்துக்கொண்டிருந்தது!
கொல்கத்தா பக்கம் கட்டிஹார் என்ற
சிறு நகரத்திலிருந்தது அவர்கள் இல்லம்.
சாலை ஒலிகளும் பள்ளிக்கூட ஓசைகளும்
ஒளிரும் அழகிய இடம்.
இந்த பெங்களூரு உபவனத்து
அடுக்ககக் கூட்டு வீடுகளின் அமைதியைத்
தாங்கமுடியவில்லை அவருக்கு.
அவன் சொன்னான்:
இந்த அமைதியைக்கொண்டு
என்னவெல்லாம் செய்யலாம் என
மேலும் அவன் விவரித்தான்.
அவர் சொன்னார்:
நான் என் ஓய்வுநேரம் ஒன்றில்
பஜனை பாட்டு வகுப்புக்கு
போகிறேன் என்றார்.
நல்லதுதான். எந்தப் பாட்டு என்றாலும்
இந்த அமைதியை விரட்டுவதற்காக அன்றி
இந்த அமைதியிலிருந்து
இந்த அமைதியை விளம்புவதற்காகவே
அது பிறந்திருந்தால்
அது எத்துணை நன்றாக இருக்கும்?
விடைபெறும்போது அவன் முகம்
அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்க
அவர் அதைக் கவனித்தாரா இல்லையா
என்று தெரியவில்லை…
துயரப்படுவோரை நோக்கி
”என் அருகில் வாருங்கள்
நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருகிறேன்” என்றீரே
அய்யா, இவ்வுலகில் ஏராளம்பேர்
நீங்கள் சொல்லும் இளைப்பாறலை நாடாது
மூடத்தனங்களின் கீழ்
இளைப்பாறிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?
இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
அவர்களை வெளியே இழுத்து வந்து
முதலில் இந்த உலக துயர்களுக்குள்ளேயல்லவா
நாம் அவர்களை தள்ள வேண்டியிருக்கிறது?
அய்யா, இப்போதும் இவ்வுலகில் ஏராளம்பேர்
உங்கள் அருகில் வந்தமர்ந்து உங்களை துதித்தபடி
அதே மூடர்கள் போன்றுதானே
இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்?
இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
நீங்கள் அவர்களைத்
தங்களுக்கு உள்ளேயே இழுத்து வந்து
நீங்கள் இருக்கும் மெய்யான இடத்தையல்லவா
சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது?
தான் அழிந்த போது கற்றுக்கொண்ட
மெய்ம்மையை ஒவ்வொருவனும்
தான் இல்லாமல்தானே பரப்புகிறான்?
இருளை அழித்த ஒளி
அதைப்பற்றியா பேசிக்கொண்டிருக்கிறது?
பேசினாலும்
பெருமை சிறுமையுடனா பேச முடியும்?
இருள் என்றிருந்தது தான்தான் என்பதை
அறிந்துதானே ஒளியானது?
ஒளி என்பதும் தன்னை உணர்கையிலெல்லாம்
தன்னை அழித்துக்கொண்டே இருப்பதாலல்லவா
அது ஒளியாகவும் பேரொளியாகவும் உள்ளது?
நீயும் கடவுளாக முடியாது
நானும் கடவுளாக முடியாது
ஆனால் கடவுளை எப்போதும்
நமக்குள்ளே உலவவிட முடியும்!
ஒன்று
ஏழாகியது
- ஆறு வந்து தன்னுடன்
சேர்ந்துகொண்டதால்தானே –
கெத்தாக
சற்றே சாய்ந்து நின்று
பார்க்கிறது உலகை?
உள்ளதுதான் மதம்
நம்மால் உருவாக்கப்படுவதோ
உருவாக்கப்பட்டு
கடைபிடிக்கப்படுவதோ அல்ல
நல்லதுபொல்லதுகள் கொடுமைகள்
போட்டிகள் பொறாமைகள் மெதுவிஷங்கள்
பெருங்கொலைகள் பிரிவுகள் போர்கள் எல்லாம்
நம்மிலிருந்தும் நம்மால் கட்டப்பட்டும்
கடைபிடிக்கப்பட்டும் வருகிற
மதங்களிலிருந்தே பிறக்கின்றன
உள்ளதாம் மதத்திலிருந்து அல்ல
அன்பு என்பதும் அழகு என்பதும்
அறம் என்பதும்
உள்ளதாம் மதத்திலிருந்தே பிறக்கின்றன
நானிலிருந்தும் நம்மால் கட்டப்பட்டும்
கடைப்பிடிக்கப்பட்டும் வருகிற
மதத்திலிருந்தல்ல
அப்படியானால்
ஆலயங்கள் தரும் அமைதி நிம்மதி
ஆசுவாசம் அனைத்தும் பொய் என்கிறாயா?
அன்பா,
யாரும் இதற்குச் சொல்லும்
பதிலை நீ நம்ப வேண்டாம்
நம்புவதும் நம்பாமலிருப்பதும் ஒன்றேதான்
நீயேதான் கண்டுபிடி.
கவிஞன் என்று வந்துவிட்டதனால்
ஒன்று சொல்கிறேன்:
சாத்தான் தன்னைச் சாத்தான் என்றா
சொல்லிக்கொண்டு வருவான்?
கடவுள் என்றுதானே
சொல்லிக்கொண்டு வருவான்?
சாத்தான் வரும் வழிகளும் உலவும் வழிகளும்
சாத்தானுடையது போன்றா இருக்கும்?
கடவுளுடையது போன்றுதானே இருக்கும்?
துயர்களுக்கும் போர்களுக்கும் காரணமான
அன்பில்லாத, மதமில்லாத, ஓர் உலகை
சாத்தான்தானே படைத்திருக்க கூடும்?
நாம் எத்துணை எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
என்பதை அறிந்துகொள்ளும்வரை
உய்வில்லை, இல்லையா அன்பா?
கண்டுகொண்ட மயக்கத்தால்
காதலால்
பிறக்காத நடை ஒன்றால்
எடைகொண்டு சிதைந்ததுபோல்
அமர்ந்திருந்தான் அவன்.
ஒரு மரணமோ
துயிலோ
ஒரு நட்போ அல்லவா
வந்து அவனை
அணைத்துக்கொண்டால் தேவலை?
அவனது இளம்பருவத்தோழி
பெரியவளாகி அமர்ந்திருந்தாள்
இப்போதுதானா?
இத்தனை நாட்கள் பழக்கத்தில்
அவள் எத்தனைமுறைகள்
தன்முன் பெரியவளாகக் காட்சியளித்திருக்கிறாள்!
இன்றுதான் அவளுக்கு ஒரு
கவுரவவிழா நடப்பதுபோல்
பூரித்திருக்கிறது வீடு.
இனி அவளை நெருங்கவே
அவன் அஞ்ச வேண்டுமா? ஏன்?
அவனுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது
அவளோ ரொம்பவும் நிறைவும் களிப்பும்
கொண்டவளாயிருக்கிறாள்
பயப்படாதே
சிறுமியாகவும் இருக்கமுடியும்
என்று அவள் அவனுக்கு ஆறுதலளிப்பதுபோல்
கண்சிமிட்டிப் புன்னகைத்தபோதுதான்
அவனுக்கு உயிரே வந்தது காண்!
கணக்கும் கவிதையும் சேர்த்து
ஒரு பாடல் புனைந்திருந்தான் அவன்
கணக்கும் கவிதையும் அறிந்தவர்களெல்லாம்
கூடிவந்து பாடிப் பரவசமானார்கள்.
கணக்கு மேலோங்கி நிற்கும்போதெல்லாம்தான்
குழப்பங்களும் பிழைகளும் துயர்களும் போர்களும்
தோன்றித் தோன்றி வதைத்தன காண், உலகை!
எப்போதும்
குழந்தைமை மாறாச்
சொல்லுடையாள் – மருமகள் –
புதுவீட்டை அமைக்கும்
பணியிலிருந்த வேலையாட்களைவிட்டு
அவள் வெளியே செல்ல நேர்கையில்
என் கண்களில் உதிரம் கொட்டும்படியாய்
சொன்னாளே மறைந்துநின்றபடி
தன் கைச்சைகை கொண்டு
“அப்பா, keep an eye on them!”
சாய் ரமணா ஜெய்ரிகி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட இருக்கும் கவிஞர் தேவதேவனின் ”ஈரத்தளமெங்கும் வானம்” கவிதைத் தொகுப்பிற்கு ஜி.எஸ்.எஸ்.வி. நவின் முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரைக் கட்டுரை ”கவிதைகள்” இணைய தளத்தில் வெளிவந்துள்ளது.
”தேவதேவன் பற்றிய ஒரு புகார் தமிழ் எழுத்தாளர்களிடம் உண்டு. குறிப்பாக அவர் தலைமுறை, தொட்டு அடுத்த தலைமுறை கவிகளிடத்தில். தேவதேவன் எங்கேயும், எப்போதும் அவரது கவிதைகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார் என்பது. ஆனால் உண்மையில் தேவதேவன் அவரது கவிதையில் சொல்லப்படாத விஷயங்கள் வேறு உலகில் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர். அதனை எழுதியும் காட்டியவர். எழுபத்தைந்து வயது கடந்த தேவதேவன் இந்த ஆண்டு (செப்டம்பர், 2024) எழுதிய கவிதை தொகுப்புகள் மட்டும் பன்னிரெண்டு. இன்னும் ஐந்து தொகுப்புகள் கூட ஆண்டிறுதிக்குள் எழுதக்கூடும். மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்... “
சாய் ரமணா ஜெய்ரிகி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட இருக்கும் கவிஞர் தேவதேவனின் ”மேஜைத் தடாகத்தில் ஓர் ஒற்றை மலர்” கவிதைத் தொகுப்பிற்கு கமலதேவி முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரைக் கட்டுரை ”கவிதைகள்” இணைய தளத்தில் வெளிவந்துள்ளது.
”அமைதியான உச்சிவேளையில் பறவைகளின் குரல்களுக்கிடையில் ஒலிக்கும் சிட்டுக்களின் கிச்கிச் ஒலிகள் அந்த நேரத்து உக்கிரத்திற்கு எங்கிருந்தோ வரக்கூடிய மாற்று. அடர்ந்த வெயிலை இந்த மெல்லிய குரல் என்ன செய்து விட முடியும்? ஆனாலும் அது ஏதோ செய்கிறது. மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்... “
சாய் ரமணா ஜெய்ரிகி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட இருக்கும் கவிஞர் தேவதேவனின் ”இனி அசையலாம் எல்லாம்” கவிதைத் தொகுப்பிற்கு மதார் முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரைக் கட்டுரை ”கவிதைகள்” இணைய தளத்தில் வெளிவந்துள்ளது.
”கவிஞர் தேவதேவன் வீட்டில் ஓர் ஆம்பல் குளம் உண்டு. வீட்டின் அருகிலுள்ள குழந்தைகளை ஆம்பல் குளத்திற்குள் கையை நனைக்கச் சொல்லி அதன் குளிர்ச்சியை உணரச் சொல்வார். உடனே நான்கைந்து மீன்கள் ஓடிவந்து குழந்தைகளின் கையில் அழுக்கு எடுக்கும். 'கூச்சமா இருக்கு' என்று சிரிக்கும் குழந்தைகளைச் சுட்டிக்காட்டி சொல்வார் "இவ்வளவுதான். இந்த chillness யை உணரவைத்தால் அதுதான் poetry". மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்...
”
முழுநிலவைக் கொண்ட
கவியின் துயரோ
விழிகளாய் நிறைந்த
பறவையின் தோகையோ
என் செல்லமே,
நின் நீள்நெடுங் கருங்கூந்தல்?
நெய்யிட்டு சீப்பால் வாரிமுடித்து
பாதிக்குப் பாதி கருப்பும் வெள்ளையுமாய்
மின்னிய தன் கூந்தலை பின் கழுத்தில்
சிறகுகளாய் உயர்ந்த தன் கைவிரல்களால்
ரப்பர்பிடிவட்டம் கொண்டு
இணைத்துக் கொண்டிருக்கும் அழகை
இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான் அவன்
நிமிர்ந்தவர் ‘என்ன’ என
முகம் அசைத்து பார்த்தார் அவனை.
‘ஒன்றுமில்லை’ என்றான் அவனும் அதுபோல்
ஒன்றுமில்லாமல் இந்த உலகில்தான்
எத்தனை எத்தனை கோடி அழகுகள்!
இன்னும் இன்னுமாய் பெரிய பெரிய
வீணாற்றல்கள் நிறைந்த நம் உலகில்
அழிவற்ற பேராற்றலொன்றால்
ஆட்கொள்ளப்பட்டவர் போல்
அவர் காணப்பட்டார்!
எந்த இடங்களிலும் இல்லாமல்
அவர் எப்படி எல்லா இடங்களிலும்
இருக்கிறார்?
எந்தக் காலத்திலும் இல்லாமல்
அவர் எப்படி எல்லாக் காலங்களிலும்
நம் உடன் வருகிறார்?
உலகை உருப்படவே விடாத
வீணாற்றல்களையெல்லாம்
விழி கலங்க எட்ட நின்றே பார்த்தபடி…
கேட்கிறதா அவர் கூறுவது?
நான் என்ன செய்ய முடியும்
சுட்டிக் காட்டத்தானே முடியும்
நீங்கள் படைத்த இந்த உலகை
நீங்கள்தானே சரி செய்ய முடியும்
கண்டுகொள்வது ஒன்றுதானே தேவை
பார்வையினின்று பிறக்கும் பாதை வளர்வதற்கும்
களத்தை அடைவதற்கும்?
அவன் கடவுள் எனும் பெயரைக்
கையிலெடுக்கவும் ஏன்
மறைந்துபோகிறார் கடவுள்?
அவரால் கிளம்பும்
கொலைபாதகச் செயல்களையெல்லாம்
அவரால் அன்றி வேறு யாரால்
அத்துணை தெளிவாக அறிந்திருக்கமுடியும்?
பெயரில்லாதவரும் உருவமில்லாதவருமான
அவரின் நோக்கை அறிந்துகொண்டபோதும்
அவர் இங்கே உயிர்த்தபடிதானே இருந்தார்?
பெயரில்லாமையும் உருவில்லாமையும்கொண்டு
ஒளிரும் ஒவ்வொரு செயலிலும்
உலவிக்கொண்டுதானே இருக்கிறார் எப்போதும்?
இந்த மலைகளும் அருவிகளும்
பசும்வெளிப் பள்ளத்தாக்குகளும்
எப்போதும் மேகங்களைத் தூக்கிக்கொண்டு
பொழியத் தயாராயிருக்கும் வானமும்
கதிரவனும் வான்மதியும் சுடர்களும்
கடவுளாகத்தானே இருந்தனர்
அவன்
கடவுள் எனும் பெயரைக்
கையிலெடுக்கும்வரை?
பயங்கரத் தீமைகளை விளைக்கும்
மத அடிப்படைவாதிகளும்
மதப் பழமைவாதிகளும்
மதச் சார்புடைய மனிதர்களும்தான்
எங்கிருந்து வருகிறார்கள்?
வழிபடப்படும் மதங்கள் எதுவானாலும்
மடமைகளின் போர்களின் துயர்களின்
பிறப்பிடமும் வளர்ப்பிடமும்
காப்பிடமுமே ஆவது எப்படி?
மனிதர்கள் கட்டத் தேவையில்லாத
கட்டமுடியாத
பெயர் எதையுமே ஏற்காத
எவ்வளவு சிதைக்க முயன்றாலும்
சிதைக்கவே முடியாத
கண்டுகொள்வதொன்றே
உறுதியானதான
மெய்யான மதமொன்றுள்ளதை
நாம் கண்டுகொள்ளவே இல்லையே ஏன்?
ஒரு பறவையையோ விண்மீனையோ
நிலவையோ மரத்தையோ வரைந்துதான்
வானத்தைக் காட்டவேண்டுமென்பதில்லை
காணக் கண்ணிருந்தாலே போதும் என்றபடி
எங்குமிருக்கிறது வானம்!
வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண
வரைபடம் எதற்கு?
வானமோ
இரு மண்துகள்களுக்கிடையிலும் இருக்கிறது.
இழந்துவிட்ட
தனது நீள்நெடுங்கருங்கூந்தலை
சமயங்களில் எண்ணி எண்ணி
ஒரு அபிநயத்துடன்
ஒரு நீள் நெடுங் கருஞ் சோகத்தை
அவர் எழுப்பும்போதெல்லாம்
அவர் எத்துணை அழகாகக்
காணப்படுவார் தெரியுமா?
அழகு என்பது
அறிந்த ஒன்றிலிருந்து
அறியாத பேரழகினைச் சுட்டும்
பேரழகா?
தன்னுடன் யாருமேயில்லாதபோது
தோன்றுவதன் பெயர்தான் அழகா!
நீண்ட விரிந்த கருங்கூந்தலுடன்
நின்று கொண்டிருந்தார் சுதா.
முகம் இல்லை
இப்போது பெயரும் இல்லை.
கைப்பேசியில் ஆழ்ந்த
அவர் குரலும் இல்லை
அங்கே ஓர் உருவம்கூட இல்லை
காலமும் இடமும் இல்லை
அவன் அவரைப் பார்த்த
அந்த ஒரு கணம்தான்!
எத்துணை பேரழகாய்
ஒளிர்ந்தது அது
குழந்தைகளுக்கு முன்னால்
அவன் கிறிஸ்மஸ் தாத்தா
இந்த பாழுலக
மனிதர்களுக்கு முன்னால்
கடவுளின் ராஜ்ஜியத்தைச் சுட்டவந்த
ஒரு புதிய இயேசு கிறிஸ்து
இன்னொரு மதத்தை நிலைநாட்டிவிடாத
கிறிஸ்துவும் புத்தனுமான கவிஞன்
கவிதையைத் தவிர
பிறிதெதற்கும் கையேந்தாத
பிச்சுமணிக் கைவல்யன்
யாதுமானவன்!
யாருமே பார்க்கவில்லையா என்ன
அடங்காப் பசியுடன்
தன்னைப் புசித்துக் கொண்டிருக்கும் மான்களை
குன்றாத குளிர்ப் பார்வையுடன்
பார்த்துக் கொண்டிருக்கிற புல்வெளியை?
பசியடங்கிய நிறைவுடன்
புல்வெளியில் நிற்கும் மான்களும்
பசியடங்கிய
மரநிழலில் ஓய்வுகொண்டு
பார்த்துக் கொண்டிருக்கும் புலி குடும்பமும்தான்
எத்துணை அழகும் ஆற்றலும்
காதலும் கொண்டு ஒளிர்கின்றனர்
இந்த முழு உலகையும் பேணும்
ஒரு பெரும் அரசியல் பணியினை
நாம் செய்தாக வேண்டியதிருக்கிறது
சுற்றுமதில்கள் மட்டும் இல்லையெனில்
உள்ளது மானுடச்சொர்க்கமே அல்லவா?
வைத்த பாதங்களைப் பற்றி பற்றி இழுத்தபடி
இங்கே தங்கிவிடேன்! இங்கே தங்கிவிடேன்!
என்றது கடற்கரை மணல்
ஒவ்வோரு காலடியிலுமாய்க் கூடிய
மொத்த கடற்கரையும்!
அதெப்படி? அதெப்படி?
இடையறாத அழைகடலை நோக்கியல்லவா
அவன் நடந்து கொண்டிருந்தான்!
வழி கண்டுகொண்டபிறகு
வழி எங்கே இருக்கிறது
நடை என்னும்
செயல் மட்டும்தானே இருக்கிறது?
அவன், ஆடை களைகையிலும்
குளிக்கையிலும்
புத்தாடை அணிகையிலும்
யாருமில்லாதபடி அறையடைத்தபடி
தனியாகத்தான் செய்கிறான்
அழுக்கேறியவைகளைக்
களைந்து துவைத்துக் காயப்போட்டு
புத்தாடைகளாக்குகிறான்
புதிய ஆடைகளுக்கே அவன்
தன் தலையையும் கைகால்களையும்
அளிக்கிறான்!
அழுக்காடைகளுடன் அலைகையில்
அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது
அல்லது அவனுக்குப் பைத்தியம்பிடித்தே
அழுக்காடைகளுடன் அலைகிறான்
குளித்தல் என்பதன் முழுமுதற் பொருள்
தன்னைத் தூய்மை செய்து
தூய்மையில் திளைத்தல்தான் இல்லையா?
எத்துணை குளிரான பொழுதிலும்
குளித்து முடித்ததும்
நம்மை வந்து தழுவிநிற்கும்
ஒரு புதுக்குளிர்மையை
பாருங்கள், புரியும்!
நமது ஆன்மாவும் உடலும்
வேறு வேறில்லை என்பதும்!
விரிந்து கிடந்த சிமெண்டுத் தளத்தில்
கோடானு கோடி புள்ளித் துளிகள்!
பெருவெள்ளம் ஒன்றை
வரைந்து காட்டுகிறது மழை!
பெயரிடப்பட்டதால்தானே
அது இல்லாமலாச்சு
எல்லா நட்டங்களும் தீமைகளும்
உருவாச்சு?
பெயரிடாமல்
பார்த்துக் கொண்டிருக்க முடியாதா நமக்கு?
பாதை பிறக்குமிடமல்லவா பார்வை?
தவிர்க்க முடியாமல் அது பெயரிடப்படுகையில்
நிகழ வேண்டியதே நிகழ்வதற்காக
நாம் கண்டுகொள்ள வேண்டியது
தவிர்க்க முடியாமல் அது பெயரிடப்படுகிறது
என்பதுதானே?
கறுப்புக்கும் வெண்மைக்கும்
(சாம்பலுக்கும்தான்)
இடையேயுள்ள இடம் எது?
பெயரிட ஏன் இயலவில்லை அதற்கு?
எங்கிருக்கிறது அது?
எவ்விடத்திலும்தானே இருக்கிறது அது?
எப்படி இருக்கும் அதன் வண்ணம் என்பதை
அறிய முடியுமா?
எனினும் உணர முடியும்தானே?
சொற்கள் சோறு போடாது எனினும்
உரைக்க முடியும்தானே?
மூன்றாம் இடம் அது.
அதுதானே விடுதலை இருக்குமிடம்?
அன்பு நடம் புரியும் இடம்?
எப்போதும் புதுச் செயல்கள் பிறக்குமிடம்?
நூல்களும் அலமாரிகளும்
அணுமின் தகடுகளும் வந்தபிறகு
நாம் தைரியமாய் உதறவேண்டிய
அனைத்துச் சுமைகளையும்
உதறிவிடலாமல்லவா?
நம் சடங்குகள் சம்பிரதாயங்கள்
விக்கிரகங்கள் வழிபாடுகள் எதனையும்
இனி நாம் சுமந்துதிரியவேண்டியதில்லை அல்லவா?
வரலாற்றையும் புவியியலையும்
அறிவியலையும்
கற்றல்தானே கடவுளாயிருக்கிறது?
வழிநடத்தல்தானே வழிபாடாயிருக்கிறது?
அழுது அழுது அரற்றிய
அவன் கண்ணீரில் நனைந்திருந்தது பூமி
புயலாய் முளைத்தெழுந்தது
ஒரு புல்லின்
குரல்:
”கடவுளின் ராஜ்ஜியத்தை
அடையவே முடியாது
நாம் எல்லோரும்
தாய்/தந்தையாகவும் குழந்தைகளாகவும்
மாறாத வரை!”
பணியிடங்களிலெல்லாம்
இடைஞ்சல்களாகத்தானே ஆகின்றன
பிறிதொன்றான
உன் ஆன்மீகச் சிந்தனைகள்?
தனி இடங்களில்தான்
அதனால் ஒரு ஆபத்தோ, இடைஞ்சலோ
இல்லை எனினும்
இறங்கி அது செயல்படுகையில்தானே
அன்பு என்றும் உறவு என்றும்
அதற்கு மரியாதை?
அறிதலின் சாலையில்
அறிவுகளெல்லாம்
அழிந்த பிறகல்லவா
அன்பு வந்து நிற்கிறது?
மதத்தை ஒரு அமைப்பாக்கவோ
சடங்காக்கவோ முடியுமா?
அன்பை
பரப்புரை செய்வார்களா என்ன?
இப்போது நமக்கு தெரிந்துவிடவில்லையா
இந்த ஈனச் சிறு உலகின் -சாத்தானின்-
தந்திரமயமான செயல்பாடுகளெல்லாம்?
யாவருக்குமாய்த்
தோற்றுவிக்கப்பட்ட ஒரு மதம்
பிறிதொரு மதமாய்த் தோன்றி
மனிதர்களைப் பிரித்தது எப்படி?
யாவருக்குமானதாக இல்லாத ஒன்று
எப்படி மதமாக இருக்க முடியும்?
விவேகமான மனிதர்கள் இவ்வுலகில்
இன்னும் உருவாகவில்லையா?
தோற்றுவிக்கப்படுவதல்ல மதம்
உள்ளது அது அதனைக்
கண்டுகொள்வதன்றோ மதம் என்பதை
இன்னும் மனிதன் கண்டு கொள்ளவில்லையா
விவேகமான மனிதர்கள்
இன்னும் உருவாகவில்லையா?
ஒவ்வொன்றாய் திரைகளனைத்தையும் விலக்குதலோ
சுற்றிச் சுற்றிச் சேலை களைதல்?
திரைகளனைத்தும் நீங்கி
நிர்வாணம் காணவேண்டிய அரங்கில்
ஒரு பேண்டேஜ் கட்டாய் உன் பிரா!
தரிசனம் தந்த அதிர்ச்சியா?
ஏன் ஏன் என்னவாயிற்று உனக்கு என
என்னை உலுக்குகிறாய் நீ
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறேன்
இல்லை ஏதோ இருக்கிறது…
என்றாலும் நீ
எதுவும் கேட்டுக்கொண்டிருக்கவில்லை
அரவணைத்தன உன் கைகள் என்னை.
அரவணைப்பை துய்க்காது
விலகி ஓடி அழலாமோ இதயம்?
சற்று நேரம் அல்லது 2500 ஆண்டுகள் கழிந்து
மீண்டு திரும்பியவன் காண்கிறேன்;
என் மாம்ச உடம்பின்மீது உன் கரம்
ஒரு சிகிச்சைக் கட்டாய் தழுவியிருப்பதை.
அன்பு நிகழும் போது
நீ ஆணா? பெண்ணா?
அழகை கண்ணுறும்போது?
உண்மை காணும்போது?
உயர்வைத் தீண்டும்போதெல்லாம்?
துன்பம் நேர்கையில்?
பெருங்களி துள்ளும்போது?
எப்போது இருக்கிறாய் நீ
ஆணாய்? பெண்ணாய்?
ஆணாகவோ பெண்ணாகவோ
அப்படி நீ இருக்கும் போதெல்லாம்
சங்கடப்படுகிறாயா? சந்தோஷப்படுகிறாயா?
நீ கண்டுகொண்டதுதான் என்ன, அன்பா
நீ யார்?
தன்னுடைய காதலைத்தான்
தான் தேடி அலைகிறோம் என்பதை
தேவதாசும் அறிந்திலனோ?
உலகியல் இன்பத்திலில்லை ”அது” என்பதை
தேவதாசிடமிருந்துதான்
கண்டுகொண்டாளோ சந்திரமுகி?
குடித்துக் குடித்துத்
தன்னை அழிக்கப்பார்த்துக்கொண்டிருக்கிற
தேவதாசைக் காக்கும் தாசியாகிறாள்!
தான் கண்டதை
விண்டுரைக்க முடியவேயில்லையா
சந்திரமுகிக்கும் தேவதாசிடம்?
தொண்டுசெய்தலும் உறவாயிருத்தலும் தவிர
கண்டடைய ஒன்றுமில்லை என்பதைக்
கண்டுகொண்டாளோ சந்திரமுகி?
”நான்” ”எனது” என்று அலைவது
எப்படி காதலாகும்?
தேவதாசிடமிருந்தது காதலா?
பார்வதியிடமிருந்ததல்லவா காதல்?
சாகுந்தறுவாயில்
பார்வதியை நோக்கித்தானே
பாடுவிடாது வந்துகொண்டிருந்தான்
தேவதாஸ்?
தேவதாசின் பிணத்தைக் காண
ஆசைப்பட்டுத்தானே விரைந்தாள் பார்வதி?
நாலுபேர் அறியப்பெறுவதில்
சந்தோஷம் கொள்வதற்குப் பெயர்தான்
புகழ் என்பதா?
இவ்வுலகத் துயர்களினதும்
தீமைகளினதும் ஊற்றே
இங்கிருந்தல்லவா தொடங்குகிறது
சிக்கல்களையே நெய்துகொண்டிருக்கும்
மனிதர்களைப் பார்த்து கேட்கிறான்
தன் தனிமையையும் துயர்களையும்
கடக்க தெரிந்தவன்
நிறைமகிழ்வின் ஊற்றை அடைந்தவன்
ஊற்றும் ஊற்றுமுகமுமானவன்
யாம்பெற்ற புனிதமுழுமையின் பேரின்பத்தைப்
பாருக்கெல்லாம் வழங்கிவிடப் பார்ப்பவன்!
எனக்கு என்ன குறை
என் தனிமையின் பாதையில்
உன்னை நான் மறந்து விடாதபடி
யாராவது ஒரு நபர் வந்துவிடுகிறார்
உன்னைப்போன்ற உருவில்!
உன்னை நான் நினைக்காத
பெருநிலையிலோ
உன்னுள்ளே நானும்
என்னுள்ளே நீயுமாய்
உயிரின் பேரொளிப்
பெருவெளியிலல்லவா
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்!
உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது
பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா,
பருந்து ஒன்று
கோழிக் குஞ்சொன்றை
அடித்துச் சென்ற காட்சியை?
முழுக் கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்
அழுக்குக் கந்தல் குழந்தை ஒன்று
நடைபாதையில் விழுந்து கிடந்த
குச்சிமிட்டாய் ஒன்றை எடுத்து
மண்ணைத் துடைத்துவிட்டு
சப்பத் தொடங்கியாயிற்று
ஆகா, என்ன சுவை! என்று
சுவையில் கிறங்கின அதன் விழிகள்!
அவன் தன் சிந்தனையில் ஆழ்ந்து போனான்
ரொம்ப சல்லிசான ஆரஞ்சுமிட்டாய்தான்
ஏழைகளுக்கானதாயிருந்தது
செல்வந்தர்களுக்கேயானதாய் ஏழைகளுக்கு
எட்டாததாயிருந்தது சாக்லேட்.
பின்னர் சாக்லேட்டும்
எட்டும்படியானபோது
மேலும் எட்டாததாயின
இன்னும் இன்னும் என பல இனிப்புகள்
ஆனால் எக்காலத்திலும் எவ்விடத்திலும்
குழந்தைகள் நாவில்
அம்ருதமாகத் தித்தித்தது எந்த இனிப்பும்!
வறுமை நம்மைத் தீண்டாமலிருக்க
இரண்டு காரியங்கள்
நாம் செய்தாக வேண்டியுள்ளது
அவற்றுள் முதன்மையானதைத்தானே
நாம் முதன்மையானது என்று சொல்லமுடியும்
பிறிதொன்றை நாம் கண்டுகொள்ளத்தான்
வேண்டுமென்றாலும்..?
முதன்மையாக நாம் குழந்தைகளாவதுவரை
கடவுளின் ராஜ்யத்தை அடைய முடியாது என்று
சொல்லி இருக்கவில்லையா, இயேசு
ஒரு சொற்றொடரில்
உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான
ஒரே தீர்வாக!
பையுடன் வருகிறார் விருந்தாளி
கொஞ்ச நாள் தங்கப் போகிறார்
என்பதில்தான் நாய்க்குட்டி சிம்பாவுக்கு எத்துணை களி!
விருந்தாளி என்பவர் கடவுள் அல்லவா?
பையுடன் வீட்டைவிட்டு
விடைபெறுகிறார் விருந்தாளி
ஒரு வெறுமையை உண்டாக்கி விட்டுப்
போகிறார் அதுதான் கடவுள் என்பது போல்!
எப்படி கண்டு கொள்கிறது சிம்பா அதையும்தான்!
தளராச் சுறுசுறுப்புடன்
உரக்கக் கத்தும் போதும் சரி,
உரக்க உரக்க ஓடும்போதும்
தாவும்போதும் ஏறும்போதும்
இறங்கும்போதும் குதிக்கும்போதும் சரி
உன்னை மறக்காமல்
சுட்டு விரல் போன்றோ
வால் தூக்கிக் கொள்கிறது
இந்த அணில்?
நீ எங்கே இருக்கிறாய்?
அண்ணாந்து பார்க்கும்படியாய்
வானத்தில்?
எல்லா இடங்களிலும் தேடும்படி
ஒவ்வொரு பொருளிலும்?
உயிரே,
உன்னைப் புரிந்து கொண்ட
ஒரு ஜீவன்
இந்த அணில்பிள்ளைகள்போல்
யாருண்டு?
மேல்வானத்
திரை நடுவேயும்
மரங்களிடையேயும் வந்து
பூத்தது காண்
ஒரு மாலை வெயில்ப் பெருமலர்
காதல் கொண்டு அதனைக்
கொய்ய நெருங்கிக் கொண்டிருந்தது
அந்தி என்னும் ஒரு செம்பொன் மலர்
அதைத் தொடர்ந்து
விண்மீன் புள்ளிகளுடன்
ஒரு காரிருள் மலர்
அதைத் தொடர்ந்து
கொய்த மலர்கள் கோடியுடன் வந்து
கவிழும் ஒரு பூக்குடலையாய்
ஒரு காலை மலர்
அதைத் தொடர்ந்து
பசுமரக் கிளை இலைகளெல்லாம்
விண்மீன்களாக்கி விளையாடும்
நண்பகல் என்னும் ஒரு பேரொளி மலர்
ஒரு மரமும் கூட தன்னைக்
கடவுள் என்றுதானோ சொல்கிறது?
இல்லை, இல்லை.
ஓராயிரம் பூக்களுடன் வசந்தராணியாய்
ஒற்றை மலர் போல ஒரு கோலம்!
ஓராயிரம் பூக்களையும் உதிர்த்துவிட்டு
அத்தனை நாட்டியர்களையும் சவாலுக்கழைக்கும்
ஒளிநர்த்தன அபிநயக் கிளைகளுடன் ஒரு கோலம்!
ஓராயிரம் இலைகள் தனித்தும் கூடியும்
காற்று வெளியில் பொங்கிச் சிறகடித்துக் கொண்டிருக்கும்
போது ஒரு கோலம்!
தனது வாழ்வையே போதனையாயும்
போதனையையே வாழ்வாயும்
தன்னையே அதுவாகவும்
அதனையே தானாகவும்
பெயர் கொண்டும் உருகொண்டும்
சொல்லாகவும் விக்கிரமாகவும் நிற்கும் ஒரு கோலம்!
ஆனால் எந்த கடவுளாலும் விக்கிரகங்களாலும்
ஆவதில்லை
ஒருவன் தன்னைத்தானே உணராத வரை
என்று ஒரு கோலம்!
ஒரு கனியைக் கொடுக்கத்
தெரிந்து கொண்ட மரம்
அதே கனிகளைத்தான்
எப்போதும் கொடுக்கின்றது.
எனக்கு உன்னைப் பற்றியும்
உனக்கு என்னைப் பற்றியும்
தெரிந்தவைகளால்தானே
படைக்கப்பட்டிருக்கிறது
இந்த உலகம்?
நாம் நம்மைப் பற்றி
அறிந்து கொள்வதிலல்லவா
நான் இருக்கிறேன் என்கிறது
விடுதலை?
எந்த ஒரு தேடலுமின்றி
சுற்றித் திரிகிறது சும்மா
ஒரு சின்னஞ் சிறு
வண்ணத்துப்பூச்சி
தான் அடைய வேண்டிய
பெருங்களத்தை
அடைந்து விட்ட பான்மையினால்!
அசையும் நீர்ப்பரப்பில்
குதித்துக்
கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது
ஒரு விளக்கொளி!
இந்தக் கொடுப்பினை இல்லாத விளக்குகள்
களி, துக்கம் கடந்த பேரறிஞர்களாய்
தங்கள் பணியே தாங்களாய்!
போகிற போக்கில்தான்
ஏரியினை வருடிச் செல்கிறது காற்று.
ஏதோ ஒன்றுதான்
கணமும் விடாது அதனைப்
பற்றிக் கொண்டு கிடக்கிறது.
அவன் தன் அமெரிக்க நண்பர்களுக்கு
ஆர்வத்துடன் பிதற்றும் கவிதை இது:
எல்லாம் எத்துனை சுலபமாகவும்
வேடிக்கையாவும் விளையாட்டாகவும்
இருக்கின்றன!
ஆறுக்கு ஆறு அடியுள்ள இரட்டைக் கட்டிலில்
குறுக்கே ஒரு திரை.
பத்தடி தூரத்தில்
எதிர் எதிரே உரையாடிக் கொண்டிருக்கும்
இரண்டு சன்னல்களையும் பற்றி
இணைத்தபடி நீண்ட கொடிக்கம்பியில்
நன்றாய்த் தொங்கும் அது.
இந்தப் பக்கம்,
அவன் வாசிப்புக்கும், கவிதையாக்கலுக்குமான
மின்விளக்கின் பேரொளி
அந்த பக்கம்,
அவன் துணைவியார் நல்லுறக்கத்துக்குகந்த
நயமான இருள்.
உறக்கமற்ற இரவில் அவன் துணைவியார்
உடல் அலுங்காமல் திரைவிலக்கி
எட்டிப் பார்த்துக் கொள்கிறார்…
1
பூமியெங்கும் படர்ந்திருந்த
பேருடல் உயிரொன்றை
பூமியிலிருந்தே அழித்து விட்டவள் நீ
முழுக் கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்
கவிதை என்பது
(வாழ்வு என்பதும்)
ஒரு பெரும் களியா?
பெரும் துயரா?
பேரின்மையா?
எதுவானாலும்
பெருங்களியை மய்யமிட்டுத்தானே
சுற்றி சுற்றி கும்மியடிக்கின்றனர்?
இன்மையிலிருந்து வரும் இசையும்
இருப்பிலிருந்து வரும் இசையும்
பெருங்துயரிலிருந்து வரும் இசையும்
தொட்டுத் தொட்டு
இன்பத்தையும் கொண்டாட்டத்தையும்தானே
எழுப்புகின்றனர்?
கவிதையின் இயல்பு
பெருங்களிதான் என்பதை
நாம் கற்றுக் கொண்டுதானே இருக்கிறோம்?
பரிசுப் பொட்டலம்
பிரிக்கப்படுவதுபோல்
பொழுது உதயமாகிறது
என் ஆவல்
உன் மீதா
இப்பொருள் மீதா
எங்கு படர்வதெனத்
திகைக்கிறது.
தேனீர் நிறையுமளவு இடம் கொடுத்தபடி
வெளியேறி வந்து கொண்டிருந்தது
தேனீர்க் குவளையிலிருந்த வானம்
விளிம்பின்கீழ் சற்று இடம் விட்ட இடத்திலேயே
புது மகிழ்வின் புத்துணர்வோடு
அமர்ந்து கொண்டது
அவன் பருகச் சாய்த்தபோதெல்லாம்
ஒவ்வொரு மிடறு தேனீருடனும்
அந்தக் குட்டி வானமும்
பெரிய வானமும். . .
இருந்த இடத்தில்
இருந்தபடியே
இயங்கிக் கொண்டிருக்கும்
இந்தக் கட்டடங்கள் மரங்கள் சாலைகள்
இன்னும் என்னென்ன பொருட்கள் எல்லாம் . . .
எத்துணை அழகாக அமைதியாக
உறுதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன
மனிதனை அலைக்கழிக்கும்
மனம் என்பதே
அவர்களிடம் இல்லாததால்!
பாதத்திலொரு முள்தைத்து
பாதையெல்லாம் முள்ளாய்க் குத்துகிறது
வழியை அடைக்கிறது வலி
வலியினுள்ளா
வழியினுள்ளா
வாத்தியம் ஒன்று இசைக்கிறது!
தர்மம் வேறு
மதம் வேறு
(தர்மம் - நம்மால் உருவாக்கப்படாததும்
மதம்- நம்மால் உருவாக்கப்பட்டதும் ஆம்)
இல்லையா?
தர்மத்தின் முன்னொட்டாக
மதத்தின் பேரைச் சேர்க்கிறது
சாத்தான்!
பாவம்
அவனும்
தன்னைத்தானே
அறிந்து கொள்ளாத
அறிவிலிதானே?
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் கட்சிக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் மதத்திற்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் அமைப்புக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
ஒரு பக்கம் அத்துணை பெரியதாய்
ஒரு சத்சங்கத்தையே அவன் நண்பர்கள்
வளர்த்த போதிலும்
சாதி எனும் சாத்தானைக் கண்டு கொள்ளாமல்
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலோடே
கடவுளின் ராஜ்ஜியத்தை எழுப்ப முடியாதது கண்டான்
தீமையின் விஷவேரைக் கண்டுகொண்டா-
னவன் குரலைக் கேட்டு இருக்கிறீர்களா?
எல்லாவற்றையும் மறுப்பவன்
எந்த ஒரு வழியும்
இல்லை என்று மட்டும் சொல்லி விடாமல்
ஒரு வழி இருக்கிறது என்றவன் சொல்வதை
நாம் கவனிக்கலாமல்லவா?
ஒரே வழி அதனை
நாம் கவனிக்காதமைதானோ
போரும் துயரும் அறமின்மையுமே
தொடர்ந்து வரும்
இந்த உலகைப் படைத்திருக்கிறது?
ஒரு கணம் போதுமே என்கிறானே
தீதிலாதோர் தேவருலகைப் படைத்து விட?
கணந்தோறும் எரிந்து கொண்டே
ஒளிர்ந்து கொண்டுமிருக்கும்
அழியாச்சுடர் அல்லவா அது?
மேரா நாம் இஸ்க்
தேரா நாம் இஸ்க்
என் பெயர் அன்பு
எங்கள் பெயர் அன்பு எனப்
பாடலின் இசைப் பெருக்கம்
இப்பேரண்டமெங்கும் விரிந்துவிடுமாறு
ஒலித்தது பாடல் அவன் பாடியது
ஆனால் அந்தப் பாவி பாடாத வேளையில்
கூட்டத்தில்
ஓர் இடம் பிடிப்பதற்காக
அப்புறம்
கூட்டத்தில்
தானே ஒசத்தியானவன் எனும்
ஒர் பேர் பெறுவதற்காக
அப்புறம்
தான் பேர் பெற இயலாமற் போனாலும்
தன் குழு, தன் இனம், தன் சாதிக்காரனுக்காக …
மெது விஷத்தால்
தன்னையும் உலகையும்
போராலும் துயராலும்
கொன்று கொண்டிருக்கிறான் மனிதன்
பேர் புகழ் பணம் தரத் தொடங்கிவிடும்
எந்தச் செயலானால் என்ன
எந்தக் கலையானால் என்ன
கவிதையேயானாலும் என்ன
ஒசத்தியான மனிதனுக்கு
பயிற்சியினால் ஆகாதது என்ன?
பயிற்சியைத் தாண்டி ஒன்று உண்டா?
அன்பாவது, அறமாவது –
அழகு பற்றியெல்லாம் எவனுக்குத் தெரியும்?
உருவமில்லாத இந்த மெய்ப்பொருள்களை
யார் அறிவார்?
யாரால் ஏய்த்துவிட முடியாது?
கச்சிதமாக தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி
சுடாமலா போகும்?
வர விடுவோமா பிற குலத்தோரை
எத்தனைக் கால பாரம்பரியம் நம்முடையது?
நாம் தீட்டும் பொய்களாலும் இழி சித்திரங்களாலும்
கண்களும் காதுகளும் இயலாதவன் போன்ற நம் நடிப்பாலும்
நாம் செய்யும் கொலைகளை விடப்
பிறிதொரு ஆக்கச் செயல் உண்டோ?
பயப்படாதீர்கள், அன்பர்களே
கவிதையின் ஆரம்ப வரிகளுக்குச் செல்லுங்கள்
குற்றத்தின் வேர் கண்டுவிட்டால் போதும்
மின்னற்பொழுதே தூரம்
இதோ கண் முன்னே தான் இருக்கிறது
கடவுளின் ராஜ்ஜியம்!
தேவதேவன் கவிதைகள் தன்னை கவர்ந்துள்ளது பற்றிய வே.ஸ்ரீநிவாச கோபாலனின் கேள்விக்கு ஜெயமோகனின் பதில் இந்தக் கட்டுரையில் உள்ளது
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
”சிலுவைப் பிரயாணம்" கவிதை இங்கே
கேள்விகளோடு வந்து நிற்கும்போது
உரையாடுகின்றன இந்த மலைகள்!
கேள்விகள் இல்லாதபோதுதான்
எத்துணை அமைதியாக!
இரைச்சல்களோடு வந்து நிற்கும்போதும்
எத்துணை துல்லியமாக எதிரொலித்தபடி!
கூடி வாழ்ந்தபடி
கூட்டமாய்ப் பறந்து திரியும்
குருவிகளை பறவைகளைப்
பார்த்திருப்பீர்கள்.
அவர்கள் நம் பார்வையில்
ஒன்றுபோல் காணப்படுவதில்
ஒரு பொருளுண்டு
ஒரு கதையுண்டு.
வெகுகாலத்திற்கு முன்பு
அவர்களிடையே அரசர்கள் இருந்தார்கள்
செல்வர்கள் இருந்தார்கள் ஏழைகள் இருந்தார்கள்
தீரர்கள் இருந்தார்கள் சாமான்யர்கள் இருந்தார்கள்
பெரியவர்கள் இருந்தார்கள் சிறியவர்கள் இருந்தார்கள்
வேறுபாடுகள் இருந்தன ஒற்றுமைகள் இருந்தன
சான்றோர்கள் இருந்தனர் துன்பமும் இருந்தது.
துயரை முடிவுக்குக் கொண்டுவர அறிந்த
சான்றோர் ஒருவர் தோன்றினார்.
முழுமையான, புனிதமான ஒரு மனிதர்.
அந்நாள் தொட்டு
ஒவ்வொரு புனிதராய்த்
தோன்றிக் கொண்டே இருந்தார்கள்.
ஓர் ஒற்றை ஆலமரம் மட்டுமேயாய்
இருந்த இடம் திடீரென்று
ஒர் பெருங்காடாக மாறிவிட்டது.
ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமியெங்குமொரு பச்சைக் கம்பளமே
விரிந்து விட்டது.
வானத்தை நோக்கி
வேர் விரித்தாற் போன்று
அத்தனை இலைகளையும்
உதிர்த்து நின்ற ஒர் மரத்தில்
குபீரெனப் பொங்கி எழுந்தன
புதுத் துளிர்கள்.
ஒற்றை விதை ஒன்றில் தோன்றிய
ஒற்றைப் பூமரம்தான்
ஒற்றைப் பூங்கொத்தாக
கொள்ளை கொள்ளையாய்
விதைகள் வீசப்போகும்
கொள்ளை கொள்ளையான பூக்களுடன்.
பூமியெங்குமோர் புன்னகையைக் கொளுத்திற்று
பயிர்கள் எங்கும் அமர்ந்து
பசியாறி எழுந்து பறந்த
படைக் குருவிகள் போல்
நீங்கியதோர் வெக்கையும்
குளுகுளுவென்று எழுந்ததோர் பசுமையும்.
இனி இந்த பூமியில்
எந்த ஒரு கசடும் படியவே முடியாதென
ஒரு பெருவெள்ளம்
கொட்டிப் புரண்டு பாயத் தொடங்கியது
அருவிகளும் ஆறுகளுமாய்.
பளீரிடும் வெண்பட்டுக் கம்பளமாய்
விரிந்த வெயிலில்
சின்னஞ்சிறு புழுக்களும்
இன்பமாய் நெளிந்து ஆடின.
மயில் தோகை போல்
வானில் படர்ந்த மேகங்களிலிருந்து
பொழிவதற்கு முன்
ஒரு மனிதனின் மூளையைப்
பொட்டெனத் தீண்டிவிட்ட
சொட்டுத் துளியினில்தான்
எத்தகைய பேரின்பம்!
அன்றுதான்
வேறுபாடுகளையோ துயர்களையோ அறியாத
இந்த புதுக் குருவிகளும்
தோன்றி விட்டன என்கிறார்கள்.
வல்லினம் பெப்ரவரி 2013 இதழில் வெளிவந்த கட்டுரை.
வண்ணத்துப்பூச்சிகள் கவிஞர்களுக்குப் மிக பிடித்த நண்பர்கள் எனலாம். அவர்களின் துயர் பகிரும் உயிராகவும் கூட இந்த வண்ணத்துப்பூச்சிகள் உலவித் திரிந்திருக்கின்றன. குழந்தைகளுக்கும் உற்ற தோழனாகவும் உறக்கத்தில் அலறி எழுவதற்கான காரணமுமாகவும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. சிறியதும் பெரியதுமான ஆங்காங்கே மொய்த்துக் கிடந்து எப்போதும் படபடத்த சிறகோடு பறந்தபடியேயிருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் மிக அழகாக எதையோ நமக்கு உணர்த்தியபடியே இருக்கின்றன. ஒரு வண்ணத்துப்பூச்சி எப்போதுமே ஒரு வண்ணத்துப்பூச்சியாக பிறப்பதில்லை.
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
”ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை” கவிதை இங்கே
ஒளிரும் வானத்தைச்
சிறிய பெரிய
விண் சுடர்களாய்க் காட்டுகின்றன
வனப் பூங்காவின் மரங்கள்!
விண்ணில் ஒளிர்ந்தாலும்
மண்ணை வாழ்த்தவே
தரையில் வந்து
விரிந்து கிடக்கும் பூக்கள்.
தன் வேர்களையும்
இப் பேரண்டத்தின் வேர்களையும்
நன்கறிந்து கொண்ட
பெருந் தேவதைகள்!
இயங்கும் பெருக்குமாறோடு
விளையாடின சருகுகள்
கொஞ்ச நேரம்
அவரும் அவைகளுடன்!
2021ல் வெளிவந்தது.
நத்தையின் அகத்துள் அமைந்த பெரும்புரவி என்கின்ற படிமத்திற்கு இணையானது கீழுள்ள தேவதேவனின் கவிதை. ஒரு ஆறுக்கு ஆறு அறையில் எப்படி இருளும், ஒலியும் ஒரு சேர முயங்க முடியும். ஒருவன் எப்படி தன் வீட்டு அறையின் மறுமுனையில் அமெரிக்காவை பொருத்தி காண முடியும் என்றால் அது கவிஞனின் வாழ்வில் மட்டுமே சாத்தியம்.
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
யாருமே இல்லாத அந்த பழக்கடை
ஆசீர்வாதிக்கப்பட்டது போல இருந்தது!
வானத்தையும் மரத்தையும் பறவைகளையும்
பக்கத்துக் கடைக்காரர்களையும்
காவலாக வைத்துவிட்டு
தேனீர்க் கடைக்குச் சென்றிருந்த பழக்கடைக்காரன்
வேகமாய் திரும்ப வந்தபோது
அருந்திய தேநீரின் சுவையாலோ
கண்டு கொண்ட மனிதர்களைக்
கண்டுகொண்ட விழிப்பினாலோ
கடமை மிக்கதொரு
கடவுளைப் போலவே தோன்றினான்!
தாகம்!
’தண்ணீர்’ என விரல் அடையாளமிட்டுக் கேட்கிறீர்கள்.
வருகிறது
தேவாமிர்தம் என அருந்தி முடிக்கிறீர்கள்
பெற்றுக் கொண்ட குவளையுடன்
இன்னும் கொஞ்சம் கொண்டு வரட்டுமா
என்று கேட்கிறார்
போதும் என்கிறீர்கள்
அப்படி ஒரு நிறைவுடன்தானே?
பணம் பொருள் சேர்ப்பதில் மட்டும்
ஏன் இந்த நிறைவு இல்லை?
ஜனவரி 2019ல், இந்து தமிழ் திசைக்கு கொடுத்த பேட்டி இது
இயற்கை வியப்பு, ஆன்மிக அம்சத்தைத் தனது கவிதைகளின் அடிப்படையாகக் கொண்டு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் கவிஞர் தேவதேவன். கடவுளின் இடத்தில் இயற்கை ஒழுங்கை வைத்து அதன் விகாசத்தில் அது தரும் ஆனந்தத்தில் இயங்கும் பக்திக் கவிஞர் இவர். ‘கவிதை பற்றி’ என்ற சிறிய உரையாடல் நூலும் முக்கியமானது. முதல் தொகுதியான ‘குளித்துக் கரையேராத கோபியர்கள்’ தொடங்கி நாற்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். ‘புரியாது கழிந்த பொய்நாட்கள் எல்லாம்’ என்பது இவரது சமீபத்திய தொகுப்பு. கவிதையை உயிர்த்துவம் மிக்கச் செயல்பாடாகக் கருதும் தேவதேவனிடம் உரையாடியதிலிருந்து…
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
”ஒரு புல்லின் உதவிகொண்டு” கவிதை இங்கே
என்ன காலம் இது?
என்ன வேலை இது?
அசையும் பல்லை
சுட்டு விரல் ஒன்றால்
தொட்டு அழுத்தி
ஆட்டு ஆட்டு என்று
ஆட்டிக் கொண்டிருந்தான் அவன்!
அதுவும் ஆட்டத்தில்
ஆட்டத்தை இரசித்துக்கொண்டே
ஆடிக்கொண்டிருந்தது
உயிரினின்றும்
கழன்று போகப் போகும்
கவலையே இல்லை
மரணம் பற்றியோ
எதிர்காலம் பற்றியோ
இழப்பு பற்றியோ
எந்த நினைவுகளுமே இல்லாத
பேறுபெற்ற வாழ்வின்
பெருநடனத்திலல்லவா
திளைத்துக் கொண்டிருந்தது அது!
நடை வழியில் கிடந்தது ஒரு சுள்ளி
இந்த அமைதியான காலை வேளையில்
அது தன் உள்ளே வைத்திருந்த குரல் கேட்கவே
அதை நெருங்கி
அவன் தன் பாதங்களால் தொட்டு அழுத்தினான்
அதுவும் மகிழ்ந்து வெளிப்படுத்திய
இனிமையான அந்தக் குரல்
உரைத்தது காண்:
“வெளியினதும் உன்னுடையதுமான
உறவு அன்றி ஏதுமில்லை, அன்பா!”
நடைபாதையில்
செம்பொற்கம்பளம்போல் விரிந்து கிடந்த
டுயூலிப் மலர்களைக்
கூட்டிவைத்திருந்தார் தோட்டக்காரர்
எந்த ஒரு மலரும்
தன் தனித்தன்மையை விடாமலேயே
கூடிக் களித்துக் கொண்டு
அப்போதும் ஓர் ஒற்றைப் பூச்செண்டு
மலர் போல!
ஒரு நாளுக்குள் உதிர்ந்து
ஒரு வாரத்திற்குள் சுருண்டு
உலர்ந்து விடும் இந்த மலர்
தனக்குள் வைத்திருக்கும் காலத்தை யார் அறிவார்?
இந்த மொத்த உலகின் ஒரு பகுதியாகவே
தன்னை உணர்ந்த மலர்
இந்த மொத்த உலகிற்கும் தனது மணம்
பரவிக் கொண்டிருப்பதைத்தான் அறியாதா?
துயரங்களேயற்ற அமைதியான
முழுவாழ்வையும் வாழ்ந்து விடத்தானே செய்கிறது?
இந்தப் பேரன்மையும் பெருவாழ்வையும்
பேரழகையும் தெரிந்து கொண்டுதானா
காதலன் காதலிக்கு மலரை நீட்டுகிறான்?
காதலி தன் தலையில் சூடிக் கொள்கிறாள்?
வரலாறு அதிகாரமிக்கவர்களாலும் பூசிமெழுகுபவர்களாலும்தான் எழுதப்படுகிறது என்றாலும் அவற்றையும் மீறி உண்மையை ஆய்ந்துணர முடிபவர்களால் நாம் கண்டடைவது என்ன? நாம் கண்டுகொள்ளாததும் கண்டுகொள்ள வேண்டியதும் என்ன என்பதுதானே அதுவாக இருக்க முடியும்?
அதுதான் மெதுவிஷமாய் நம் உள்ளும் புறமுமாய் எங்கும் பரவிக்கிடக்கிறது என்கிறோம். கண்ணுக்குத் தெரியாத அதற்கு நாம் என்னென்ன(சாத்தான்!) பெயர்களைச் சூட்டினாலும் அது பெயர்களில் மறைந்து கொண்டு மீண்டும் மீண்டும் நம்மைப் பற்றிக் கொள்கிறது. மெதுவிஷமும் பற்றமுடியாத ஒரு புதுமனிதனை நாம் உருவகித்துப் பார்க்கிறோம் இப்போதும். விளம்புவதற்கப்பாற்பட்ட ஓர் செயலாக, செயல்களாக, அது உலவ வேண்டும்.
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
தன் காலடியில் ஒரு சிறு சக்கரம்
இருப்பதைக் கண்டு கொண்டவர்கள்
பேறு பெற்றோர்
அதுவே தர்மசக்கரம் என்பதை உணர்ந்தோர்
பெரும் பேறு பெற்றோர்
அதனை இயக்கும் பிடி கிடைத்தோர்
மீப் பெரும் பேறு பெற்றோர்
அதுவே மொத்த உலகத்தையும்
விபத்தே இல்லாமல் படைத்து இயக்கும்
மய்யமற்றதோர் மய்யப்
பெருஞ்சக்கரம் என்பதை உணர்ந்தோர்
மீ மீப் பெரும் பேறு பெற்றோர்.
எத்துணை பெரிய மகிழ்ச்சி அது!
”அவள் சைக்கிள் ஓட்டக்
கற்று விட்டாள்! கற்று விட்டாள்!” எனக்
கத்தினான் தெருவில்
கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த சிறுவன்
நேற்று சைக்கிள் ஓட்டத்
திணறிக் கொண்டிருந்த தன் தோழி
இன்று வெற்றிகரமாய்ச்
சைக்கிள் ஓட்டிச் செல்வதைக் கண்டு!
அது எத்துணை பெரிய அதிசயம் என்பதும்
நம் ஒவ்வொரு செயலும்
நம் பேருலகத்தோடே இணைந்திருப்பதும்
அந்த பேரொலிக்கன்றி யாருக்குத் தெரியும்?
வானம் வந்திறங்கி
மல்லாந்து மகிழ்ந்து கிடக்கிறது,
ஒளியும் நிழலும் பூக்களும் கொண்டு
புனைந்து நெய்ததொரு பொற்கம்பளத்தில்
‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்ற ஒரு குறளும் உண்டல்லவா? ஏன் இச்சொற்றொடர் பிறந்துள்ளது? சிந்தித்துப் பார்த்தால் போதும். அனைத்துத் தவறுகளுக்கான காரணத்தையும் நாம் கண்டுபிடித்துவிடலாம். இந்த அறிவு என்பதும் ஆராய்ச்சி என்பதும்கூட எளியதொரு செயல்தான். எது கடினமானதும், நடைபெறாது உலகைத் துயருக்குள்ளாக்கியிருப்பதும் அதை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும், ஏன் எப்போதும் செய்ய வேண்டிய ஒன்றை விலக்கிக்கொண்டே இருக்கிறோம் என்பதும்தானே நாம் இப்போது காண வேண்டிய உண்மை?
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
ஆயிரம் பறவைகளின்
ஓற்றை அலகுபோல்
ஒரு மின்தூக்கி
கட்டிக் கொண்டிருக்கிறது காண்
ஆயிரம் பறவைகளுக்கான
ஓரு வீட்டினை!
வசுதைவ குடும்பகம் என்பதையோ
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதையோ
கடவுளைத் தந்தை எனக் கொண்ட தேவகுமாரனையோ
என்றைக்கு நாம் அறிந்து கொண்டோம்?
உலகப் பயணம் வாய்த்த போது தெரிந்ததா?
அடுக்கக மாடிக் கட்டடங்கள் எழும்பிய போது தெரிந்ததா?
தொழில்நுட்ப வளர்ச்சியால்
உலகம் ஒரு குட்டி கிராமமாகி விட்டபோது தெரிந்ததா?
எத்தகைய மதங்களாலும் ஞானிகளாலும் மாமனிதர்களாலும்
கடவுள்களாலும் சொற்களாலும் தத்துவங்களாலும்
இயலவில்லை என்பது புரிந்ததா?
இனம் என்பதும் சாதி என்பதும் மதம் என்பதும்
நாடு என்பதும்தான்
மானிடத் துயரின் விஷவேர் என்பது புரிந்ததா?
அமைதியின் பேரின்பக் கஞ்சி குடிப்பதற்கிலார்
அதன் காரணங்கள் யாதெனும் அறியுமிலார்
அய்யகோ அய்யகோ என்று
அலறும் துடிப்பினையுமிழந்து நின்றார்
இந்த நிலை கெட்ட மனிதனை உயிர்ப்பிக்கத்தானே
நீங்காத நெஞ்சப் பொறுப்புடனே
பார்வையில் மட்டுமே பிறக்கும்
பாதையினைத் தெரிந்து கொண்டவர்களாய்
பார்க்கத் தொடங்கியிருக்கிறோம், நாம்?
எத்தனை மேலான
பெயர்கள், காட்சிகள், சொற்கள் என
பார்த்தும் கேட்டும் படித்தும்
எத்தனை எத்தனை வியப்புகள்
அத்தோடே
மயக்கங்களும் ஏமாற்றங்களும்!
பெயர்கள் உருவங்கள் சொற்கள்
எல்லாம் கடந்து
காண்பதற்கு அழகாக இருப்பவையல்லவா
உண்மையும் நன்மையும் அன்பும் அழகும்?
குழந்தைகளின் களியாட்டங்ளைக் கவனியுங்கள். எல்லோரும் இவ்வாறே இன்புற்றிருக்க விழைவதுவே மானுட லட்சியம். ஆனால் துன்பம் நேர்கையில், அது தனது மானுடப் பொறுப்புணர்வை நோக்கித் திரும்புவதுதானே இயற்கையாக இருக்கவேண்டும்? தடைக்கல்லாக இருப்பது எது? நம் தன்மய்யம் ஒன்றே அல்லவா? இதை அறிந்திராதவரை நம் கலைகளாலும் இலக்கியங்களாலும் ஏது பயனும் இல்லை அல்லவா?
நான் என்னும் பிடியிலிருந்துதானே நமது அனைத்துக் கடவுள்களும் சாத்தான்களும் ஆட்டம்போடுகின்றன. மாறாக, ‘நான் இல்லை’ எனும் காலமற்றதும் இடமற்றதும் பொருளற்றதுமான ஓர் இன்மைநிலையில்தானே, அன்பும், அழகும், உண்மையும், மெய்யான வாழ்வும் ஒளிர்கின்றன? இயற்கையாக இது தோன்றும் போதெல்லாம்தானே அதனை ஒரு கருணை என்று கண்டுகளிக்கிறோம்? எவ்வளவோ உயர்தொழில்நுட்பத்தையும் அறிவியலையும் கண்டடைந்துவிட்ட நாம் இதனையும் கண்டடைந்துவிடமுடியாதா என்ன?
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
“கடவுள்தான் உன்னை அனுப்பியமாதிரி இருக்குப்பா”,
என்று உள்ளம் நெகிழ்ந்து உருகிய கண்ணீர்
நெஞ்சம் வந்து முட்ட- எல்லோர்க்கும் தான்
நிகழ்ந்த அனுபவங்களையெல்லாம் யோசித்துப் பாருங்கள்.
கடவுள் இருக்கிறார், எங்கே இருக்கிறார்,
என்பதையெல்லாம் தெரிந்து கொள்வீர்கள்.
ஆனால் இந்தத் தருணங்களால்
நிறைந்திருக்க வில்லையே நம் வாழ்க்கை?
நாம் சமைத்திருக்கும் வாழ்வை
நாம் தெரிந்து கொண்டோமா?
இளைப்பாற்றும் இடங்கள் என்றும்
காக்கும் அரண்கள் என்றும் – நம்மை
மக்கு மடையர்களாக்கும்
தடைகளையெல்லாம் அழித்தாலல்லவா
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை நாம் படைக்க இயலும்?
ரொம்ப ரொம்பத்
தீவிரமான ஒரு மனிதனைச்
சந்திக்க நேர்ந்தது.
நாம் படைத்த பெரும் பெரும்
இலக்கியங்களைக்கூட
பொழுது போக்குகளாகத்தானே
ஆகிக் கிடக்கின்றன என்கிறான்.
இவன் கோளாறுதான் என்ன
உனக்கு என்னதான் வேண்டும்
எனக் கேட்டால்
அதை நீங்கள்தானே
கண்டுபிடிக்க வேண்டும் என்கிறான்.
(அதாவது ஒவ்வொருவரும்
தானேதான் கண்டுபிடிக்க வேண்டுமாம்)
நீங்கள் இந்த மனிதனைப்
பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லையா?
அவனை நான் பார்த்துவிட்டேன்
அவன் இடத்தையும் அறிவேன்.
(நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் தானே
இருக்க வேண்டும் அவன்?)
மெதுவிஷமும் பற்ற இயலா
அந்தப் புது மனிதன்!
மாற்றப் படாத வீடு என்று
குழப்பங்களையும் போர்களையும்
துயர்களையும் சுட்டுகிறான்
என்ன செய்ய எனத் துவள்கையில்
தோள் தொட்டு
மின்னற் பொழுதே தூரம் என்கிறான்
அய்யோ அய்யோ
நாம் கொளுத்தி வளர்த்துவிட்ட தீயை
நாம் தானே அணைக்க வேண்டும்
அவசர அவசரமான பணிகள்
எத்தனை எத்தனை எனத் தவித்தால்
தீயைத் தீயென
நாம் கண்டு கொண்டால் போதும்
தயாராய்க் காத்து நிற்கின்றது
பூட்டிக் கிடக்கும் பொன்னுலகைத் திறந்துவிட
அருட்பெருஞ்சோதியின்
தனிப்பெரும் கருணை என்கிறான்
குளித்துக் கரையேறாத கோபியர்கள் எனச் செல்லமாய்
மானுட சமுத்திரக் குழந்தைகளை
தன் மாயக் கண்ணாடியில் காட்டுகிறான்
மரமே ஒரு பூவாக
வனமும் வானமும் பூமியும்
வாழ்வுமே ஒரு பூவாக!
”நான் ஒரு மலர்தான் என்பதுதானே
முதன்மையும்
மறைந்து கிடக்கும் பேருண்மையுமாம்”
என்றபடி வெளிப்பட்டுவிட்டார் காண்
வசந்த ராணி!
‘கடவுளைக் கண்டமாதிரி இருக்கிறது.’ ‘கடவுளாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது.’ ‘கடவுளே வந்தாலும் முடியாது.’ ‘கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் உண்மையிலேயே எவ்வளவு நன்றாக இருக்கும்!’ ‘பார்த்தீர்களா, கடவுள் இருக்கிறார்.’ – இது முதல்வரியைப் போன்றதேதான். இப்படி இப்படி கடவுள் என்ற சொல்லைத்தான் நாம் எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம். அறிவுக்கு அப்பால் நின்றபடிதான் ஒரு கவிஞனும் கடவுள் என்று தனக்குப் பெயர் சூட்டிக்கொள்கிறான்.
ஊட்டி நாராயணகுருகுலத்திலிருந்து வந்த துண்டுபிரசுரம் மூலம் நித்ய சைதன்ய யதியின் தன் வரலாற்று நூல் வெளிவந்துவிட்டது என அறிவிக்கப்பட்டிருந்தது. சற்றும் தாமதிக்காமல், உடனேயே தொகை அனுப்பி – அப்போதே அது எனக்கு மிகப் பெரியதொகை – உடனே வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லும் வழி அஞ்சல்நிலையத்திலேயே அதைப் பெற்றுக்கொண்டு பள்ளியின் ஓய்வுநேரத்திலேயே அதைப் படிக்கத்தொடங்கி ஒரே மூச்சில் அதை முடித்தேன். வாசிப்பில் அணுக்கமான நண்பரிடம் நான் அதைச் சொல்ல அவர் அதை ஊர்ந்து வாசிக்கத் தொடங்கி, நானே திரும்பவும் மற்றொரு நூலை வாங்கிக் கொள்ளும்படிச் செய்துவிட்டார். அந்த நூலில் இரண்டு இடங்களில் நான் அடிக்கோடிட்டிருந்தேன். ஒன்று மிகப் பிரபலமான அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய வருத்தத்திற்குரிய உண்மை. மற்றொன்றுதான் கடவுளைப் பற்றி அவர் என்னைப்போலவே எழுதியுள்ள வரிகள்.
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
உன் துயரங்களையெல்லாம்
எங்காவது இறக்கிவைக்கப் பார்க்காதே
இறக்கி வைத்து வைத்த இடத்தையே
கைகூப்பித் தொழுகிறவனாய் ஆகாதே.
துக்கம் ஒரு மணிமுடியாய்
இரத்தம் வடிக்கும் முள்முடியாய்
உன் சிரசிலேயே இருக்கட்டும்
துக்கம் அறிந்தவன்தானே
துக்கம் நீக்கும் வழிசுட்ட முடியும்?
துக்கம் நீங்கி
துக்கம் போலுமே பெருநிறை ஒளிரும்
பேரின்மை வெளியில்தானே
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தைக்
காட்ட முடியும்?
எந்த நற்செயல்களும்
அடையாளங்களுக்குள்ளிருந்து வரவில்லை!
அடையாளங்களுக்குள்தானே
இரகசியமாய் ஒளிந்திருக்கிறான் சாத்தான்?
அவன்தானே நல்லிணக்கம் பேசுகிறான்?
நல்லிணக்கம் செய்வதெல்லாம் கடவுள்
நம் அடையாளங்களையெல்லாம்
நம்மிலிருந்து கழற்றி எறிந்திருக்கும்
வேளைகளில் மட்டுமே அல்லவா?
வெள்ளிமலை உச்சியிலிருந்து
குட்டிச் சிறுமியாய்
குதித்திறங்கி ஓடிக்கொண்டிருந்த வண்டியில்
நாட்டிய சுந்தரி கிருபா லட்சுமி.
வழியெங்கும் கொஞ்சம் கொஞ்சம்
இலைகளுதிர்ந்து கிளைகளுடன் நிற்கும்
மரங்களெல்லாம்
“என் சதங்கைக்குப் பதில் சொல்லடி” என்றபடி
அப்பப்பா,
எத்தனை எத்தனை அபிநயங்களுடன்!
என் செல்லமே, இனி நமக்கு இந்த
இயற்கையுடன்தான் போட்டி
பாவப்பட்ட இந்த மனிதர்களுடன் அல்ல.
முதல் எண்பதுகளில் ஓர் ஆண்டு அது. அடையாறு வசந்தவிஹாரில் பத்துநாட்கள்(ஏழு நாட்கள்?) ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவினைக் கேட்கச் சென்றிருந்தேன். அந்தப் பத்துநாட்களின் பிற பொழுதுகளெல்லாம் பிரமிளுடன் கழிந்தன. ஊர் திரும்புகையில் பிரமிள் போகிறது போகிறீர்கள் திருவண்ணாமலை சென்று யோகி ராம்சுரத்குமாரைச் சந்திந்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறியிருந்தார். சென்றேன்.
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
எல்லோரும் இப்படி ஆகமுடியும்
எல்லாவற்றையும்
களைந்து நின்ற
காலமற்றபோதே
கடவுளானேன்
இதைச் சொல்லும்
இப்போது தவிர.
கடவுளின்போது
நானில்லை
நீயுமில்லை
ஒரு சொல்லுமில்லை
காதலும்
செயலும் மட்டுமே
இருந்தன அப்போது.
கற்றது கைம்மண் அளவு
கல்லாதது கணநூல் அளவு
கவிதை அளவு
முடிவிலாது
உருளும் இவ்வுலக அளவு
இல்லையா, என் கண்மணி?
காட்சி மேடைக்குக் கீழே
சுட்டெரிக்கும் வறுமையினைப்போல்
உரத்த வெயில் படலம்
மேடை நிழலுக்குள்ளிருந்து கொண்ட
வி அய் பிக்கள் முகம் நோக்கி
வெயிலில் நடம்புரிகின்றனர் குழந்தைகள்
சுவர் நிழலில் ஏழைப் பெற்றோர்கள்
ஏங்கி ஏங்கி அலமறுகின்றன
தூர நிறுத்தி வைக்கப் பட்ட மரங்கள்!
ஒரு காட்சி ஊடகத்தின் கருத்தரங்க மேடையில் பார்வையாள விருந்தினராகக் கருத்துரைக்க அழைக்கப்பட்டிருந்தேன். அதை இயக்குபவர்கள் அன்றைய அந்தப் பொருளுக்கு என்னைத் தேர்ந்தெடுத்துள்ளமை பெரும் வியப்பூட்டுவதாயிருந்தது. ஒரு பக்கம் தங்கள் தொழிலில் மிகக் குறைந்ததும் சரியானதும் நேர்மையானதுமான கட்டணத்தையே போதுமெனச் செயல்படுபவர்கள், பொருள் சேர்த்தே தங்கள் வளத்தையும் தொழிலையும் பெருக்க விரும்பாதவர்கள். மறுபக்கம், இல்லை, நாம் சற்று வளம் தேடிக்கொள்வதுதான் சரி என்று அதற்கான தங்கள் காரணங்களோடு சாதிப்பவர்கள். ஒரு மருத்துவர், ஒரு ஆட்டோக்கார இளைஞன், ஒரு உணவு விடுதிக்காரர் இவர்கள் நோயாளிகள், ஏழைகளிடமிருந்து மிகமிகக் குறைந்த கட்டணமும் அதுகொண்டே நிறைந்த உழைப்பின்மூலம் போதிய வருமானமும் மிகப் பெரிய மனநிறைவையும் அடைவதாகச் சொன்னார்கள். இவர்களை நான் அங்கே காணநேர்ந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. என் வாழ்வின் ஓர் அற்புத நிகழ்வு அது.
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
இந்தக் காணொளியில் ரசிகர் பாலாஜி ராஜு, கவிஞர் தேவதேவனைச் சந்தித்த அனுபவம், அவரது கவிதைகளின் வழியாக விரிந்த கவிதை உலகிற்கு சென்றது மற்றும் அவருக்கு மிக நெருக்கமான கவிதைகளான ”அமைதி என்பது”, ”எத்துணைக் காதல் தெரியுமா இந்த சிறிய பசைப் பாட்டிலுக்க” மற்றும் ”தோள் பை” பற்றி உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.
ரசிகர் பாலாஜி ராஜுவின் காணொளி
அமைதி என்பது” கவிதை இங்கே .....
”எத்துணைக் காதல் தெரியுமா இந்த சிறிய பசைப் பாட்டிலுக்கு” கவிதை இங்கே.....
"தோள் பை” கவிதை இங்கே.....
அப்போது இரண்டு பாதைகள் இருப்பதே
எனக்குத் தெரியாது
நான் உன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேனா,
அல்ல, நீதான் என் முன்னே நடந்து கொண்டிருந்தாயா,
நான் தனியானவன் தானா,
_ எதையும் நான் அறியேன்.
ஒரு நாள் அந்த இரண்டு பாதைகள் முன்னே இருக்க
நீ சென்று கொண்டிருந்த பாதையை
நான் தேர்ந்தேன். தன்னந்தனியாகவேதான்
நான் உன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்ததையும்
பிரிய முடியாததையும்
வாழ்வின் எல்லா அழகுகளையும் ரகசியங்களையும்
நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதையும்
நான் கண்டேன்.
தேவதைகளின்
பின்னழகாய்
விரிந்த கருங்கூந்தல்
சென்று கொண்டிருந்தது
அவன் முன் - னழகாய்!
அறியாமையின்
ஒளியும் இருளுமான
பெருஞ்சுடர் வடிவம்!
அடுப்பங்கரையிலிருந்தபடியே மனைவி தன் குட்டிக்குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பா, எங்கே… என்ன செய்துகொண்டிருக்கிறார்?” ஓடிப்போய் அடுக்களைக்கும் கூடத்திற்குமிடையேயுள்ள வாயில்நிலையைப் பற்றி நின்று ஆடியபடி எட்டிப் பார்த்த குழந்தை, கூடத்தின் ஒரு மூலையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தபடி அம்மாவிடம் “க வி தை…” என ராகம் போட்டது. இங்கேதான் அமர்ந்து கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது அதன் பொருள். ஆனால் குழந்தையின் அந்தக் குரலில் திடுக்கிட்டவனாய் அவன் அசந்துவிட்டான். ஒரு கவிதைக்கணம் அது அவனுக்கு. வாழ்வின் இதுபோன்ற ஓர் அனுபவத்தை நாம் சொல்லி மாளாது அல்லது சொல்ல முடியாது.
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
பிழைப்புக்கான
அலுவல் நேரமாய்
வாழ்க்கை கழிகிறது
வாழ்வுக்கான
வாழ்வு நேரமாய்
வாழ்வு எங்கும்
நிலைத்திருக்கிறது
அவன் பற்றிக் கொண்ட
வாழ்க்கைதானே
அவனைப் பற்றிக்
கொண்டிருக்கிறது?
பூஜாக்குடலை ஏந்தியபடி
பூப் பறித்துக் கொண்டிருந்தது
ஒரு பெரிய பூக்குவியல் ஒன்று
அவைகள் பூஜித்துக் கொண்டுதானே
இருக்கின்றன
அவைகளை ஏன் பறிக்க வேண்டும்
கடவுள் கேட்டாராக்கும்
எனும் பழைய கேள்விகளையெல்லாம் மறந்தவனாய்
ஒன்றும் பேச முடியாதவனாய்
அவன் அவளைப் பார்த்தான்.
என்ன? என தன் முகத்தில்
ஒரு கேள்வியை வரைந்து காட்டினாள் அவள்.
இல்ல, இதைவிட
நல்லதாய் ஒன்று செய்யலாமே என்றான்
பளாரென்று அவன் முகத்திலறைந்ததுபோல்
காதல் பண்ணலாம் என்கிறாயா? என்றது
அழுத்தமான அவள் பார்வைதான்
சற்றே அதிர்ந்தாலும்
ஆமாம் அதேதான் என்பதை
உறுதியாகவே சொல்லின
அவன் இதழ்கள்
அன்று முதல் அவள்
எல்லாப் பூக்களையும் போலவே
இவ்வுலகைப் பூஜிக்கும் ஒரு
பூக்குவியலாக மட்டுமே
ஆகிவிட்டாள்.
ஓடும் ரயிலில்
அவன் மடியில் தலைவைத்து
அமர்ந்திருந்தது
ஒரு தோள் பை.
அடக்கமான
அய்ந்து திறப்புவாய்கள் அதற்கு.
அவனுடையன
எல்லாவற்றையும் சுமந்துகொண்டு
தன்னையே அவனைச் சுமக்கச் செய்யும்
பேரறிவன்!
குழந்தையாய் வந்த பேரன்னை!
மடியில் அவன் கையடங்கலுக்குள்
அது சாய்ந்து படுத்திருப்பதைப் பாருங்கள்!
என்ன ஒரு உறவு அது!
தீண்டும், வருடும்,
அவன் விரல்களில் பூக்கும் மகரந்தங்களும்
விழிகளில் ததும்பும் கண்ணீருமாய்!
இத்துணை அமைதியும் அன்பும்
ஒழுக்கமும் உடைய உயிர்கள் இருக்கத்தானே செய்கின்றன இவ்வுலகில்.
அருகில் வந்து அமர்ந்தவன் இடித்து
இடைஞ்சலிக்காமல் இருக்கும்படி
அதனை மேலும் நெருக்கமாய்த் தனக்குள்
இழுத்து அணைத்துக்கொண்டான் அவன்.
தனக்குப் பாதுகாப்புத் தரும் உயிரைத்
தான் பாதுகாக்கும் முறையோ அது, அல்லது
அருகிலமர்ந்த அந்த மனிதனுக்காகவோ?
விளக்கிச் சொல்லத்தான்,
பிரித்துச் சொல்லத்தான்,
சொற்களாலே சொல்லிவிடத்தான்
முடியுமோ இந்த அன்பை!
ஒரு கவிதையின் நம்பகத்தன்மை அதை எழுதியவன் தன் எழுத்துகள் மூலம் சம்பாதித்து வைத்திருக்கும் புற ஆளுமையிலிருந்து அல்ல. அவனது மற்ற கவிதைகளிலெல்லாம் கனன்றபடி விரிந்துகிடக்கும் அந்த ஆளுமையிலிருந்தே ஏற்படக்கூடியது. இதுவே மனிதனைவிட அவனது கவிதை முக்கியமானது என்பதை நாம் காணும் இடம்.
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
இயேசுவே
மதமாகிய சிலுவையிலிருந்தும்
உம்மை நான் மீட்பேன்
இதுவே என் சேதி என் தந்தையே.
உமது ஆசைகளையும் தோல்விகளையும்
கண்ணீரையும் இரத்தத்தையும்
நான் அறிவேன்.
துயர் நீக்க அறிந்த
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தில்
உம்மை நான்
இளைப்பாற்றுவேன் என் தந்தையே.
எங்கோ விழுந்து
தொலைந்துவிட்டது
பசைப் பாட்டிலின்
நுண்துளை மூடி.
தன் பணி முடிவதற்குள்
பயனற்றுப் போக விரும்பாத பசை
நுண்துளையருகே இருந்த
தன் உடல் மரித்துக் காத்துக் கொண்டது.
எண்ணங்களால் உருவாக்கப்பட்ட
தத்துவங்களல்ல இது.
எந்த மனிதனும்
கண்டேயாக வேண்டிய
உண்மை.
உயிரின் குரல்.
அமைதியின் மொத்தம்.
அழகின் கொண்டாட்டம்.
அன்பின் ஈரம்.
அறத்தின் தகிப்பு.
புத்த புன்னகை.
நித்தியத்தின் கரங்களிலிருந்து
சுழலும் வாள்.
ஒளிமட்டுமேயான
ஓவியநிலா.
நாம் அறியாதவற்றின்மீது
தோன்றித் தவழ்ந்து ஓடும்
அமுதநதி.
உண்மையைச் சொல்வதானால்
அது நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய
ஞாபகம் அல்ல!
முழுவாழ்வின் மலர்ப் புன்னகை.
முழுமையின் புனிதத் தொடுகை.
சிதைவும் உயிரின்மையுமல்ல.
உடைந்த ஒரு பகுதி அல்ல.
உடைந்த ஒரு பகுதியின்
கண்ணீரோ கூக்குரலோ
கதறலோ அல்ல.
எனினும்
முழுமையின் முழுவாழ்வின்
கண்ணீர் என்றொன்றும்
காதல் என்றொன்றும்
இருக்கவே இருக்கிறது
ஆற்றல்களெல்லாம் அடக்கப்படாமலேயே
கொந்தளித்துக் குழைந்துகொண்டு கிடக்கும்
அமைதி என்பதும் அதுதான்.
கவிதை என்பதும் அதுதான்.
எனது பதிப்பாள நண்பர் ஒருவர் எனது கட்டுரைத்தொகுப்பு ஒன்று கொண்டுவரும் முயற்சியில் அனைத்துவகைக் கட்டுரைகளையும் திரட்டி அனுப்பிவைக்கச் சொன்னார். அனுப்பிவைத்தேன். அந்தக் காலத்தில் ஒரு நிழற்பட நகல்கூட எடுத்துவைத்துக்கொள்ளாத நிலையில் பதிப்பாளரிடமும் கிடந்து அவைகள் தொலைந்து போயின. இருவருக்குமே எதிர்பாராதது அது. தொகுப்பாக ஒரு ஐநூறு பக்க அளவு வந்திருக்கக்கூடிய அந்த எழுத்துகளின் இழப்பு எதுவாக இருக்கும் என யோசிக்கிறேன். அன்று என்னிடமிருந்த ஊக்கமும் உணர்ச்சிகளும் எண்ணங்களோடும் கருத்துக்களோடும் ஊடாடிய வகையில் நிகழ்ந்த ஒரு நாட்டியத்தைத்தான் நாம் அதில் பார்த்திருக்க முடியும். அந்த எழுத்திற்காக நான் இப்போது வருத்தப்படவே இல்லை.
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
உதிர் இலைகளின் நடனத்தைக்
கற்றுக் கொண்டனவாய்
இந்த வண்ணத்துப் பூச்சிகள்!
ஒரு பெரிய மரத்திலிருந்து பிரிந்த துயரமே இல்லை.
எத்துணை அமைதியாகக் கிடக்கின்றன இந்தச் சருகுகள்!
காற்றை உணரவும்
நடந்து செல்வோர் பாதம் தொடுகையில்
தான் சொல்ல வேண்டியதைச் சொல்லவும்
தன் காதலை ஒலிக்கவும் இசைக்கவும்..
பெரும்பாலான பொழுதுகளில் அனைத்தையும் மறந்தபடிதான் நடைவழிக்
காற்றில் உயிரின் சிலிர்ப்புடன் மட்டுமே
எத்துணை அமைதியாகக் கிடக்கின்றன!
இந்த தென்னை மர சிரசுகள்!
காய்களுடனும் கனிகளுடனும்
அத்துணை பெரிய காதலுடனும்
பூமியிலிருந்து பீரிட்டுக் கொட்டும்
நூறு நூறு நீருற்றுக்கள்!
அங்கே எந்த ஒரு தென்னை மரமும்
கூட்டத்தோடு இல்லை.
கூட்டத்தோடு இல்லாமலும் இல்லை.
தன்னந்தனியாக இல்லை.
தன்னந்தனியாக இல்லாமலும் இல்லை.
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP