Monday, August 19, 2013

தண்டவாளத்து ஆட்டுக்குட்டி

இணையாத தண்டவாளங்களின் நடுவே
நின்று அழுதது
தனித்ததொரு நிலவு.
இரு கண்ணீர்க் கோடுகளென
தண்டவாளங்கள் மேல் விழுந்த
அழுகை
நிலவு நோக்கி மீண்டு திரும்பி
இணைந்தது. உடன்
உட்கிரகித்து ஓடிவந்தது
நிலவைத் தன் தலையில் சூடியிருந்த
ரயில்.
பயந்து எழுந்து விலகி ஓடிற்று
தண்டவாளத்து நடுவே நின்ற
ஒரு ஆட்டுக்குட்டி. ரயில்
கையசைத்துச் சென்றது தன்போக்கில்.
உயிர் பிழைத்து வாழ்வை இழந்த
ஏக்கத்துடன் பார்த்து நின்றது
ஆட்டுக்குட்டி.
சங்கல்பத்துடன் மீண்டும்
தண்டவாளத்தில் போய் அமர்ந்தது.
இணையாத தண்டவாளம் கண்டு
அழுதது தனித்த அதன் நிலவு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP