Thursday, August 8, 2013

தேரோட்டம்

உண்மையிலேயே மகாகொடூரமான நாள்தான் இது
வீதியெல்லாம் அலைந்த
இவளின் கைக்குழந்தைக்குக் கிட்டாத
கவளம் சோறாய்க்
கொல்லும் வெயில்; அதனைத்
தீர்க்கிறேன் பேச்சாய், முழக்கமாய்
ஐஸ் விற்கிற மணி ஒலி
பலூன்களுக்காய் முரண்டும் குழந்தைகள்
சாமி பார்க்க எக்கும் விழிகள்
வாணமாய் உயர்ந்து (நட்சத்ரப்) பூ விரிக்கும் விண்ணில்
என் வாழ்வோ
சூறைவிட்ட நோட்டிஸ்களாய்
வெறுமைமீது
மோதிச் சிதறி
கீழே விழுந்து
வியர்வையாய் சதையாய்
மயக்கும் முலைகளாய்
கூந்தலிலிருந்து உதிரும் மலர்களாய்
கால்களே கால்களை மிதித்துத் துன்புறும் கால்களாய்
அலைமோதி
நெரிபட்ட குழந்தையொன்றில் அழத் தொடங்கும்;
சறுக்கு, தடி, சம்மட்டிகளுடன் உழைப்பாளி வர்க்கமொன்றாய்த்
தேரை உருட்டும்;
நேர்ந்துகொண்ட கடன் நெஞ்சோடு
வடம் பிடித்து இழுக்க;
சற்றே நெகிழ்ந்து கொடுக்கும் மனதாய்
அசைந்து கொண்டு
நடக்கத் தொடங்கும்;
துயர்க் கடல் வீதியாய்
கருப்பு அலைவீசுகிற தலைகளுக்கு உயரே
தேர் தேர் தேர் என்று
அண்ணாந்த முகங்களுடன்
நெருக்கியடித்துக் கொள்ளும்
கூட்டம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP