Sunday, August 4, 2013

நடத்தல்

எங்கிருந்து தொடங்குவதா?
நிற்குமிடம் அறி
அங்கிருந்தன்றி வேறெங்கிருந்து முடியும் தொடங்க?

காலடியில் உறைந்துபோன நதி
கக்கத்தில் செருகியிருந்த நடை
நடக்கத் தொலையாது விரிந்திருந்த பூமி
எட்டாது போய் நின்ற வானம்

நடையை எடுத்துக் கால்களில் அணிந்துகொண்டேன்

பாதம் ஊன்றிய புள்ளிக்கு
பாய்ந்து வந்தது
பூமியின் எல்லாச் சாரமும்

சுட்டுப் பொசுக்க
கால் தரிக்க மாட்டாது தவிக்கிறேன்
இட்ட அடி மண்தொட எடுத்த அடி விண்தொடும்
நிறுத்தலற்றுப் பாய்ந்தோடும் வாழ்வில்
நட
நடத்தலே வாழ்வு, விதி, போர்!
ஆனால்
நடையின் திவ்யம் கண்டு
என் ஆறு உருகி ஓடத் தொடங்கவும்
நடையைக் கழற்றிக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டனவே கால்கள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP