Friday, August 23, 2013

உச்சிவெயிலின் போது

இந்த வீதியைப் பார்க்கும் போதெல்லாம்
ஏதோ ஓர் உணர்வு
என்னை அறுக்கிறது

உச்சிவெயிலில் ஒருவன் நடக்கிறான்
அவனைப்பற்றி நீ ஏதும் சொல்வதில்லை.
அவன் நிழலை நோக்கி நடந்துகொண்டிருக்கிறான்
என்று நீ அறிவாய்.
உச்சிவெயிலின் போது எல்லோருமே
தங்கள் பொந்துகளிலும் நிழல்களிலும்
ஒதுங்கிக்கொள்கிறார்கள்
படுகொலைகள் நடக்கின்றன வீதியில்
அகால மரணமடைகின்றன இளநீர்க்காய்கள்

உச்சிவெயிலில் ஒருவன் நிற்கிறான்
நீ வியக்கிறாய்
அவனைக் கிறுக்கன் என்கிறாய்
(மரங்கள் கிறுக்குப் பிடித்தவையே)

உச்சிவெயிலில் அவன் அயராமல் நிற்கிறான்
ஒரு பனித்தூண் போல

சற்று நேரத்தில் அவனைக் காணோம்
அவன் ஓர் அடி எடுத்து நகரவும் இல்லையே


ஆனால் அப்போது இருந்தது அந்த இடத்தில்
கழிவிரக்கம் மற்றும் எவ்வகைத் துக்கமும் அற்ற
எனது கண்ணீரின் ஈரம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP