Monday, August 26, 2013

பொந்துகளிலிருந்து…

வீட்டுக் கூரைகளாய் அமைந்த வெளியில்
உலவும் அணிலுக்கு
பெருச்சாளிகளைப்போல் தோன்றினர் மனிதர்கள்

மெய்யான கனிகளையோ
அதன் வேரையோ
காண இயலாத பெருச்சாளிகள்
அணில்களைக்
’குதித்தோடும் பழங்கள்’ என்றே
கவிதையில் எழுதின
கடித்துத் தின்னவும் தின்றன

மரங்களை
’பெயர்க்க இயலாப் பெரும்வேதனை’ என்றும்
’நகர இயலாத நொண்டி’ என்றும் எழுதின

பிசகாய் கக்கூஸ் கோப்பைக்குள் விழுந்துவிட்ட
ஒரு பெருச்சாளிக் குஞ்சு
கரையேற முடியாது வழுக்கி வழுக்கி விழ
முயற்சியைக் கைவிட்டு
மலத்தின் பெருமைகளை எழுதத் தொடங்கிற்று

எப்போதும்
பொந்துகளிலிருந்து பொந்துகளை நோக்கியே
வாகனாதிகளில் விரைந்த பெருச்சாளிகள்
சூர்யனைக் காணப் பயந்தவை

இருளில் சுறுசுறுப்பாயலையும் இப்பெருச்சாளிகள்
பகலில் கருப்புப் போர்வையணிந்து கொண்டே
கதிரொளியில் விளைந்த தீனி பொறுக்கும்
விதியின் கேலியை
நினைத்து நினைத்துச் சிரிக்கும் அணில்

சூர்யவொளியில் நனைந்தபடி
மரக்கிளை மீது
ஆனந்தமாய் குதித்தோடும் அணில்,
சூர்யனைக் காண அஞ்சும்
பெருச்சாளிகளைக் கண்டு அஞ்சுவதே
விந்தைகளிலெல்லாம் பெரிய விந்தை
சோகங்களிலெல்லாம் பெரிய சோகம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP