Wednesday, August 7, 2013

எனது கிராமம்

பேருந்துகளாய் முழக்கும் பட்டணத்து வீட்டுக்கு
கால் நடையாய் லோல்படுகிறது கிராமம்,
தன் பிள்ளை முகம் எப்போதும்
வாடிவிடக் கூடாரே என்று;
”கட்டிக் கொடுத்த பிறகும்
எங் கஷ்டம் தீரலியே ஐயா” என்று

தினந்தோறும் சீதனமாய் புல்லுக்கட்டுத் தலைச் சுமைகள்,
அவள் ’அண்ணன்மார்’ இழுத்துவரும்
வைக்கோல் வண்டிகள் காய்கறிகள் பிறவும்

வீட்டுக்கு
வெளியில்
நடைபாதைகளில் நிறுத்திவைத்துப்
பேரம் பேசும் அவமானங்கள்;
”எல்லாம் பொறுத்துத்தானே ஆவணும்
பொண்ணைப் பெத்தவ!”

மடிகரந்து கன்றை விளிக்கும் கொட்டில் பசுக்களுக்கு
எப்போதும் தாய்வீட்டு நினைவுதான்;
புல்மேயப் பரந்த வெளிகள்
விரிந்த விரிந்த வானப் பரப்பில்
எதை மேயும் வெண்மேகங்கள்?
சொல்லும் சுகம் மேவும் காற்று
நினைவு அறுந்து
தூரே………….
சூலுற்ற மௌனத்தின் ஒரு விளைவாய்
பட்டணத்து வருகையாய்
ஊர்ந்து வரும் பஸ்ஸைப் பார்த்தபடி
உயிர்க்கும் வாழ்க்கை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP