Tuesday, September 17, 2013

சில நாள்

தொடர்ந்து பெய்த மழைகளால்
நனைந்து குளிர்ந்திருந்தது பூமி
தொழிற்சாலைகளின் ஓசைகளடங்கிய
ஓய்வுநாளின் அமைதி
மேகங்களைப் போர்த்திக்கொண்ட நக்ஷத்ரங்கள்
கம்பளி போர்த்திய நிலா
எனக்குப் பிரியமான குளிர்காற்று

ஆனால், தொட்டிலில் தூங்கும் குழந்தைக்காகக்
கதவைச் சாத்துகிறேன். அவளுக்காகவும்.
(என் உடம்புக்கும் ஆகாதென்கிறாள்)
சுகமாய் விரிக்கப்பட்டிருக்கிறது எங்கள் படுக்கை
சாயுங்காலம் மொட்டுக்களாயிருந்த மல்லிகைச்சரம்
விரிந்து மணம் வீசிக்கொண்டிருந்தது அவள் கூந்தலில்
காற்று வெளியெங்கும் நிறைந்துள்ள குளிரில்
அந்த மணம் நகராது ஆசைகொண்டு தங்கியிருந்தது
அவள் இரவு உணவுத் தயாரிப்பிலிருந்தாள்

எங்கும் துக்கத்தின் சுவடுகளற்ற சாந்தி
அப்போதுதான் அந்த உணர்வு தோன்றியது எனக்கு
திடீரென இங்கு வந்து சேர்ந்தவளே இவள்
மிக அன்யோன்யமாய் இங்கு உலவுகிறாள்

அந்த காஸ் ஸ்டவ் நான் வாங்கியதுதான்
மிக விரும்பி அவள் உடுத்தியிருக்கும் அந்தப் புடவை…
இதோ இந்த பீரோ… மற்றும்…
வீட்டிலுள்ள அத்தனைப் பொருள்களுமே,
இந்த வீடே என் உழைப்பால் கட்டப்பட்டதுதான்.
கட்டும்போது நானும் ஒரு தொழிலாளியாய்
நின்று உழைத்திருக்கிறேன்.
இதோ, அவள் கூந்தலிலுள்ள அந்த மல்லிகைகளும்
அவற்றைக் கோர்த்த பண்படுத்திய எனது மண்ணில்
எனது கவனிப்பில் மலர்ந்தவைதான். ஆனால்,

இவள்தான் என்றும் இங்கே இருக்கிறவள் போலவும்
நான் இங்கு சிலநாள் தங்கிப்போக வந்தவனே போலவும்
ஒரு உணர்வு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP