Friday, September 27, 2013

கன்னி

உடல் கூசி, பரபரத்து ஒரு கூரைநோக்கி
ஓடி ஒண்டிய +2 தாவணியே!
பொட்டென்று விழுந்த ஒரு மழைத்துளி
வீதியில் வைத்து
திடுமென்று உன்னைப் பற்றி இட்ட முத்தம்

வெளியெங்கும்
ஆவேசமாய்ப் பெய்யத் தொடங்கிய மழையை
ஓயும்வரை பார்த்துக்கொண்டு நின்றாய்

இட்ட அடிகள் தழுவி
எடுத்த அடிகளுக்கு ஏங்கியுமாய்
பாதம் பற்றிய மழைநீர் கெஞ்ச
நிற்கிறாய் சற்று; ஆனால்
அப்படியே நின்றுவிட முடியவில்லை

பார்க்குமிடமெல்லாம் பளிச்சென்று
நனைந்து நின்றன மரங்கள், பறவைகள்.
பன்றிகளோடு பூமி.
நீ மட்டும் ஏக்கந் ததும்பும் முகத்தோடு
பத்திரமாய் வீடு வந்து சேர்கிறாய்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP