Wednesday, September 4, 2013

ஆதார மையம்

இந்த கோளில்
எத்தனை கோணங்களில்
என் பார்வைக் கத்தி விழுந்து
இதழ் இதழாய்
கண்கள் எரிந்து குளமாக,
உரிக்க உரிய,
உதிர்ந்து போவதில்லை எதுவும்

எத்தனை கோணத்தில்
எத்தனை பார்வைக்
கத்திகள் வீழினும்
என் மனவெளிக் கோளில்
ஆச்சரியமாய்
அவைபற்றி இருந்து வரும்
ஆதார மையமொன்றுண்டு
என்ன அது?
கேட்காதே
கேட்டும் சொல்லியுமா
புரிந்துவிடப் போகிறது?

ஞாயிற்றுக் கிழமைகளில்
மனைவிக்கு ஒத்தாசையாய்
சமையல் கட்டில்
கண்ணீர் பொங்க
வெங்காயம் அரிகிறாய்

நடைபாதைச் சாப்பாட்டுக்
கடைக்காரி முன்
உணவு முடிக்கும்
கூலித் தொழிலாளியாய்,
மாம்பழத்தை
முழுசாய் நறுக்கிச்
சிதையாமல் இலையில் வைத்துத் தர
சிதையாமல் காத்திக்கிறாய்

கற்போடு
மனைவியை அமர்த்தித் தூங்க வைத்துப்
பின்
மேஜையில் காத்து நிற்கும்
வெள்ளைக் காகிதங்களைத்
தள்ளி வைத்து
துண்டம் துண்டமாய்க்
காணும் அலமாரிப் புத்தகங்களை
ஒரே பார்வையில் கூட்டி ஒதுக்கிவிட்டு
ஒரு தனிப்
பூவின் மகரந்தங்களெனக் காணும்
நட்சத்திரங்கள் மேல்
பன்னீர்ப்பூ உதிர்ந்து கிடக்கும் முற்றத்தில்
நீ பாய் விரித்துப் படுக்கிறாய்

அப்போதெல்லாம்
அப்போதெல்லாம்
உன்னால் ஸ்பரிச்சிக்கப்படுகிறதே
அதுதான்; அதுதான்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP