Saturday, September 7, 2013

போஸ்ட் மார்ட்டம்

1.
பைத்தியம் பிடித்துப்
புலம்பித் திரிந்துகொண்டிருந்தது
டிஃபன் பொட்டலம் கட்டிக்காத்த ஒரு காகிதம்.
எச்சிலையைத் தின்கிறது
புல்வெளியை விட்டு வந்த மாடு.
பழங்களனைத்தையும் இழந்துவிட்ட வாழைத்தார்
கடைக்காரனால், நடுரோட்டில், பஸ்கள் மிதிக்க
நார் நாராய் செத்துக்கொண்டிருந்தது,
எரிந்து முடிந்து புகைந்து கொண்டிருந்தான்
பெட்டிக் கடைமுன் சிகரெட் பிடிக்கும் ஒருவன்.
நடைபாதையில் டீ குடித்துக்கொண்டிருப்போர்
தொப் தொப்பென்று இறந்து விழுகின்றனர்.
குதியாளமிடுகிறது டீக்கடையில் பாட்டு.
கடைத்தெருக்களில் கிடந்த பிணங்கள்
திடீரென்று எழுந்து ஆர்ப்பாட்டம்.
போலீஸ்வேன் ஓடிவந்து
பிணங்களை அடுக்கி எடுத்துக்கொண்டு போனது

2.
பிணங்கள் கூடி பிழையுண்ட ஓர் உயிரை
போஸ்ட் மார்ட்டத்துக்குத் தள்ளின.
குளோரோபாமற்று
நாலைந்து பிணங்கள்
அமுக்கிப் பிடித்துக்கொண்டன.
ஒரு பிணம் அறுக்க
வெதுவெதுப்பான குருதி பீரிட, அலறி,
துடிதுடிக்கும் உயிர்தான்
தான் இன்னும் பிழைத்திருக்குங்
காரணம் என்ன என வியந்தது

3.
ஓ, டாக்டர்!
இந்த மரணத்தின் காரணங்களைக் கண்டுபிடிக்க
நீர் பிணங்களை அறுத்துப் பார்ப்பதென்ன?
குளோரோபாரமின்றி
துடிதுடிக்கும் உயிரோடு
கதறலோடு
பீரிடும் குருதியோடு
தன்னை அறுத்துப் பாரும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP