Friday, September 20, 2013

கூழாங்கற்கள்

இக் கூழாங்கற்கள் உண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன் முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்.
’ஐயோ… இதைப் போய்…’ என ஏளனம் செய்து
ஏமாற்றத்துள் என்னைச் சரித்துவிட்டாய்1

சொல்லொணாத
அந்த மலை வாசஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ இக்கூழாங்கற்கள் உனக்கும்
என எண்ணினேன்

இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளூடே ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது

இவற்றின் யௌவனம்
மலைப்பிரதேசத்தின்
அத்தனைச் செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது

இவற்றின் மௌனம்
கானகத்தின் பாடலை
உற்றுக் கேட்பது

மலைப்பிரதேசம் தன் ஜீவன் முழுசும் கொண்டு
தன் ரசனை அனைத்தையும் கொண்டு படைத்த
ஓர் உன்னத சிருஷ்டி

நிறத்தில் நம் மாம்சத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்குக் கடினத்தன்மையும் காட்டி
தவம் மேற்கொண்ட நோக்கமென்ன? என்றால்
தவம்தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP