Wednesday, September 18, 2013

அம்மு குட்டி

எழுதவிடுவதில்லை என் குழந்தை அம்மு
அதன் கர்ப்பவாசம் முதல்
’அவள்’ தாய்வீட்டில் இருந்த காலம் வரை
ஒரு நாவல் ஒரு கட்டுரை சில கவிதைகள் என
எழுதிக் குவித்திருந்தேன். இப்போது
எழுத விடுவதில்லை என் குழந்தை

தாத்தா பாட்டி வேலைக்காரி போன்ற
உறவுகள் ஏதுமில்லை எங்களுடன்
நாங்கள் மூவர்
நான் குழந்தையை கவனித்துக் கொள்கையிலும்
அது தூங்குகையிலும்
அவள், வீட்டு வேலைகளில் இயங்குகிறாள்
அவள் எங்கள் அம்முவைக் கவனித்துக்கொள்ள
எனக்குக் கிடைக்கிற சிறுபொழுதில்
அப்படி ஒன்றும் பெரியதாய்
எழுதிவிட முடியவில்லை

உயிரின் சுபாவம் ஆனந்தம் என்பதை
என் குழந்தையிடமிருந்தே நான் கற்றேன்
மேலும்
ஆனந்தம், அழுகை என்னும்
ஒரு ’பைனரி’ பாஷையில்
அனைத்தையும் அது சாதித்துக்
கொண்டதையும் கண்டேன்

இந்தக் கோடை விடுமுறையில்
ஒரு கை பார்க்க வேண்டும் எழுத்தை எனத்
திட்டங்கள் வைத்திருந்தேன்.
திட்டங்கள் தவிடுபொடி, அம்முவின் சிரிப்பில்
(கவலைகள் உட்பட)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP