Monday, September 9, 2013

காதலர் பாதை

என்ன கூறுகிறது,
இடையறாத கடலின் பெருங்குரல்?
கரையோரம் ஒரு சிறு படகு
எதற்குக் காத்திருக்கிறது?
படகின் நிழலில் ஒரு ஜோடி
மண்ணில் புரண்டு
புணர்ச்சியில் ஆழ்ந்துபோனதென்ன?

2.
புணர்ந்தெழுந்தவர் தளர்ந்து நடந்தனர்.
மணல்மேட்டில் உதிதது ஒருவன் வந்தான்
வாசித்தான் தன் கவிதை ஒன்றை.
இன்பத்தின் பிடரி சிலிர்க்க,
அவள் இவனைப் பாய்ந்து தழுவினாள்
இருவரும் சரிந்தனர் அவன் நிழலில்

உவர்ப்பைக் கடந்து
சுவையற்ற பெருஞ்சுவையை ருசித்து
முத்தம் பெயர்கையில்
அவன், படகை எடுத்துக் கடலில்
மீன்பிடி வலைகளுடன்…

3.
அவர்கள் நடந்தார்கள்.
எத்தனை மண்புயல் கடந்தார்கள்?
அவை புரட்டிக் காட்டிய
எத்தனை சவஎலும்புகள் கண்டார்கள்?

கண்டுமென்ன?
யாவற்றையும் திரை போர்த்தியது
பசி, சோர்வு, பயம் எனும் பைசாசங்கள்

மணல்மேட்டில் ஒரு புது உதயம்.
பழங்களும் மீனும் விறகும் நிறைந்த ஒரு
கூடைப் பரிதி; கூடைக் கிரீடம்
அதன் இடுப்பில் ஒரு பெரிய பட்டாக்கத்தி
முகத்தில் கொம்பு மீசை
பசியாறும் பெண்ணுடம்பைப்
புசித்துக் கொண்டிருந்தன கூடைக்காரனின்
காமப்பேய்க் கண்கள்

திடுக்கிட்டு மிரண்டவளைப் பார்த்து இளித்தவன்
கையையும் பிடித்திழுக்கத் துணிந்தான்
இவன் அவனைத் தடுக்க – கைகலப்பு
அவள் பதறிக் குறுக்கிட – சிக்கல்
இவனைக் கெஞ்சித் தடுத்து, அவள்
கூடைக்காரனுக்கு இணங்கிப் படுத்தாள்

புத்துணர்வொன்று தோள்மேல் துள்ள
புகுந்தான் இவன்
தன் கோடரியைக் கையிலெடுத்துக்
காட்டுக்குள்ளே

4.
இருவரும் நடந்தனர்
எங்கும் ஒரு வேதனை, அவமானம்
கிளறிக் கிளறிக் காட்டும் மண்புயல்கள்
மூடவும் செய்வது ஏன்?
மணல்மேட்டில் இப்போது
ஒரு பெரிய கூடை
முகத்தில் அதே கொம்பு மீசை
இடுப்பில் மிகப்பெரியதோர் பட்டாக்கத்தி
அக் கூடைக்காரன் – இவள்
இருவர் கண்களிலுமே காமாந்தகாரம்!
இவள் அவளைப் பிடித்து இழுக்கவே
கொம்பு மீசைகள் கோபம்!
பட்டாக் கத்திகள் மோதல்!
கொட்டிக் கவிழ்ந்த கலயம் போல்
இரத்தக் குழம்பினில் பழையவன்!

பிணத்து நிழலில்
புணர்ந்தெழுந்து நடந்தனர் ’காதலர்’

5.
ஓடிப்போய் அவர்கள் முன்
என் கவிதையை வாசித்தேன்.
’பைத்யம் பைத்யம்’ எனச் சிரித்தது ஜோடி
திடுக்கிட்டுச் சோர்ந்து திரும்பினேன்
பிறகு –
எனது பாறை நோக்கிப் போய்விட்டேன்
ஆற்றின் அழகையெல்லாம்
அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க

6.
’காதலர்கள்’ நடந்துகொண்டிருந்தார்கள்
மூடிமூடிப் புதையுண்டிருந்தவைகளை
மண்புயல்கள் அடிக்கடி
கிளறிக் கிளறிக் காட்டத்தான் செய்தன

கடலின் இடையறாத பெருங்குரல்
கேட்டு கொண்டேயிருக்கிறது
கரையோரம் ஒரு சிறு படகு
காத்துக் கொண்டேயிருக்கிறது
எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்
நம் ’காதலர்கள்’?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP