Monday, September 30, 2013

ஏதும் செய்ய இல்லா நேரம்

1
ரயில் சக்கரங்களால் இணைந்தன
இணையாத தண்டவாளங்கள்.
உக்கிரமானது எனது பிரயாணம்.
ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இறங்கி ஆசை தீர நடக்கலாம்;
சுவடுகள் பதிக்கலாம்; ஆனால்…
க்ஷணமும் ரயிலை விட்டிறங்க மனசில்லை

2
ஸ்டேஷன்களில் நின்று டீ விற்போனே
சிற்றுண்டி, பழங்கள், பத்திரிகைகள் விற்போனே
இங்கே வா.. நீதான்… வா.
வந்துபோகும் பயணியிடம் கூட
நீ நேர்மையான வியாபாரியாய் இருப்பதற்கு
ரொம்ப ரொம்ப நன்றி! ஆ!
புறப்பட்டுவிட்டது வண்டி!

3
நாம் ஒருவரையொருவர் நோக்குவதென்ன?
நம் நினைப்புகளோ என்றும்
இணையாத தண்டவாளங்கள்
எப்போதும் ரயிலுக்கு முன்னும் பின்னுமாக

எண்ணங்களின் புகை மண்டாமல்
நாம் ஒருவரையொருவர் நோக்கலாகாதா?
அவரவர் ஸ்டேஷன் அவரவர் குறிக்கோளாயிருக்க
உறவின் நிழலாய் வரத்தானே செய்யும் பிரிவு!

ஸ்டேஷனில் இறங்கி
ஏக்கத்தோடு என்னை நோக்கும் பெண்ணே!
நான் இன்னொரு ஸ்டேஷனில்
இறங்க நினைத்திருந்தால்
அதைவிடுத்து உனக்காக
இந்த ஸ்டேஷனிலேயே இறங்குவேன்
தண்டவாளங்கள் இணைய, தண்டவாளங்கள் மேல்
நாம் கைகோர்த்து நடந்து செல்லலாம்.
ஆனால் நானோ எந்த ஸ்டேஷனிலும் இறங்க விரும்பாத
ஒரு விநோதமான பயணி. போய் வா.
எந்த ஸ்டேஷனில் நின்று நீ பயணம் மேற்கொண்டாலும்
அப்போது நாம் சந்திக்கலாமே

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP