Sunday, September 29, 2013

வேட்டை

புலியின் மேலுள்ள கோடுகள்போல்
உடம்பெங்கும் சவுக்கடி
ஓயாத வலி, ஒரு புலி

உனது கண்கள்!
அதற்குள்ளே விநோதமான ஒரு வேல்
உனக்கும் எனக்குமிடையேயுள்ள
தூரம் எவ்வளவாயினும்
அவ்வளவு தூரம் நீண்டு என்னைக் குத்திக் கொளுவி
தன்னகத்தே இழுத்துச் சுருண்டுகொள்ளும் வேல்.

புலிதான் எனினும்
வேட்டைக்காரன் இழுத்துச் செல்லும் இரை நான்
வேலின் கொக்கி இழுப்பில்
மாமிசம் கிழிந்த கருணையால்
நான் விடுபட்டு நிற்கையில்
மீண்டும் பாய்ந்து கொளுவி
இழுத்துச் செல்கின்றன உன் விழிகள்…

தம்மை இழுத்துச் செல்லும் ஜீவநதியில்
நம் உடல்கள் சிலிர்த்த சிலிர்ப்புக்கள்…!

சிருஷ்டியின் கைகளில் பட்டுக் கொள்ளத்தானா
இத்தனையும்?
உன் கண்களுள் உற்றுநோக்குகிறேன்.
அங்கே நான்-
அந்த வேட்டைக்காரனாய்
அவன் கைகளிலிருந்து பெருகும் ஜீவநதியாய்
சிருஷ்டியாய்…

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP