Monday, September 23, 2013

இரவின் அமைதி

சாந்தி!
இன்னும் சில வாரங்களில் நான் உன்னை
அழைத்துக் கொள்ள முடியுமென நினைக்கிறேன்

அடுத்த அறையில் நமது அச்சு இயந்திரங்கள்
அவற்றின் இரைச்சல்.
நம் போஜனத்துக்கான இது
தவிர்க்க முடியாதது. அதே சமயம்
அதன் ஓசை கொடியது… முக்கியமாக இரவில்

இரவில், இரவின் குளிர்ச்சி உள்ளது
நக்ஷத்ரங்கள் உள்ளன; நிலவும் இருக்கிறது
இரவின் அமைதியை நாம் இழந்ததால்
அனைத்தையும் இழந்தவர்களாகி விட்டோம்

இதில் நீ தப்பிக்க உனக்குத் தாய் வீடிருந்தும்
என்னோடு சேர்ந்து
உன் அமைதியை தப்பிக்க விட்டுவிட்டாய்

பேறு காலம் உனக்குத் தாய்வீட்டையும்
இங்கு உனக்கு அடிக்கடி கிட்டாது போய்விடுகிற
இரவின் அமைதியையும்
நல்கியிருக்கிறது. எனக்கு சந்தோஷமே

குழந்தை எப்படி இருக்கிறது?
அது முகம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது
என்று எழுதியிருந்தாய். அதன் புலன்கள் எல்லாம்
இப்போதுதான் வளர்ந்துகொண்டிருக்குமாமே

இரவின் அமைதியில் அது துயில்கொள்ளும்;
கனாக் காணும்; கவிதை காணும்; சங்கீதம் கேட்கும்.
இரவின் அமைதியில் அது ஆனந்தம் கொள்ளும்;
அழகைப் பருகும்; எல்லாவற்றையும் பார்க்கும்.
இரவின் அமைதியில் அது சிரிக்கும்.

இயந்திரங்களின் அகோரக் கூந்தல்
வளரும் அதன் புலன்களைக் கெடுத்துவி்ட்டால்…
என்ற அச்சம்.. உனக்கும் எனக்கும்!
டாக்டரும் கூட அப்படியே பயமுறுத்துகிறார்.
கர்ப்பவாசம்போல்
எவ்வளவு ஆறுதலாயிருக்க வேண்டும் இரவு!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP