Saturday, September 21, 2013

பறவைகள் எச்சமிட்டிருந்த விதைகள்

ஒரு நாள் – என் மாடியெங்கும் –
பறவைகள் எச்சமிட்டிருந்த விதைகள்!
என்ன விதைகள் அவை என்று தெரிந்தாலும்
பெயர் தெரிவதில்லை
அவற்றை நான் உரைப்பதற்கு!

அனைத்தையும் சேகரித்துக் கீழே வந்தேன்
மனைவியிடம் ஒன்று; குழந்தையிடம் ஒன்று;
வந்த நண்பர்களிடமெல்லாம் ஒன்று ஒன்று
அன்றாடம் நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும்
மறக்காமல் ஒவ்வொன்று
ஆர்வமாய்க் கொடுத்து வந்தேன்

ஒருவர் அதை என் கண்முன்னே
வாயில் போட்டரைத்து நன்றாயிருக்குதென்றார்
இன்னொருவர், ’நேற்று நீங்கள் தந்த பருப்பைச்
சுட்டுத் தின்றோம். ரொம்ப அருமை!
ஒரு கிலோ வேண்டும்’ என
வீட்டிற்கு வந்துவிட்டார்

ஒவ்வொரு நாளும் மாடிக்குச் சென்று
நான் சேகரித்து வந்தேன் நிறைய விதைகள்
விரிந்த பரப்பிற்குத தாங்கள் சொந்தமென்று
என்னை ஏய்த்து வாங்கிச் சென்றார்
வறுத்தும் அவித்தும் தின்றுவிட்டதறிந்தேன்.

எனக்கு என் வீடுபோக எஞ்சியிருந்த சிறுஇடத்தில்
ஊன்றியிருந்த ஒரு விதை தவிர
நான் சேகரித்தவை ஏதும்
பயனுற்றதாய்த் தெரியவில்லை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP