Monday, July 29, 2013

பூக்காடு

1.
எத்தனை முறை மழை பெய்தும் என்ன
பூக்காது காய்க்காது பழுக்காது
புல் புல்லாகவே தளிர்க்கிறது

2.
புல் நுனியில் ஒரு பூ காணும் ஆவல்
மேனியினின்று உயிரைப் பிரிக்கிறது.
உயிர்
வாழ்வின் புதுத்தேன் அருந்த மலர்தேடி அலைகிறது
உடன்
காமாக்னி பட்டுக் கருகாத
புல் நுனிகளில் மலர்கள் பூக்கத் தொடங்குகின்றன

3.
என்னைப் பின்தொடரும் என் நிழல்
என் மாம்சம்
என் இணை
தன் ஆசை நகங்கள் கிள்ளிய பூ
வாடி மரிக்கிறது அவள் தலையில்
மறுநாள் பிணவாடை போக ரகசியமாய்
அவள் மேனி குளித்தெழுந்தும்
மேனியின் வாடையே பிணவாடை
எனத் திடுக்கிட எழுந்து நகைக்கும்
உயிர்

4.
காலத்தின் அற்பத் தேவைக்கும்
சுயலாபக் கடவுளுக்கும்
காமக் கூந்தலுக்கும் பலியாகாமல்
விடுபட்ட மலர் ஒன்று
கால, சுயலாப, காம
இதழுதிர்ந்து காய்க்கிறது;
அப்படியே கனிகிறது.
கனியுள்ளே கோடி பெறும் வித்துக்கள்
நாளையொரு பூக்காடு விரிப்பதற்கு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP