Tuesday, July 30, 2013

புசித்தல்

கைக்கெட்டின ரொட்டி
வாய்க்கெட்டப் போகிற சமயம்
நிறுத்து
என விழும் தினசரித்தாள்
ஜன்னல் வழியாய்
பேப்பர்ப் பையனைப் பின்தொடர்ந்து
சாவாய் உறைந்து நின்றுவிடும்
செய்தித்தாளின் எழுத்துக்கள்
மறுகணம், அதே கணம்
அச் செய்தித்தாள் தளத்தை விட்டு
இரை தேடி உறுமியபடி
அவனை நோக்கிவரும் எழுத்துக்கள்

மழை தண்ணியின்றி
எரி்ந்துபோன ஒரு கிராமத்தைவிட்டு
வெளியேறும் கிராமத்து ஜனம்…

’கிறிஸ்துவே!
நீர் இரண்டு அப்பத்தை
ஆயிரக்கணக்கானோர்க்குப்
பெருக்கிப் பகிர்ந்த
அற்புதம் மட்டும்
எனக்கு வரவில்லையே!’
என்று இரங்கிவிட்டு
உண்ண முடியாமல் விட்டுப்போன ரொட்டியை
பசி அழைக்க திரும்பி வந்து பார்க்கையில்
ஆயிரக்கணக்கான உயிர்கள் பசியாறி
கொண்டாடும் திருவிழாத் தேராக்கியிருந்ததை
கண்டு ’கண்டேன்’ என்கிறான்
கொண்டாடிக் குதியாளமிடுகிற
எறும்புகளை உதறித் தள்ளி
எடுத்துப் புசிக்கிறான்
அந்த சத்தியத்தை – ரொட்டித்துண்டை!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP