Sunday, July 21, 2013

பாலத்தின் கீழ் ஓடும் நதி

ஆடிஆடி வரும்
அலைக் குழந்தைகளுடன்
காலமாம் நதி போகும்

குறுக்கே
வாழ்வென்னும்
ஓர் அகண்ட பாலம்

விடுவிடெனப் போகும் அம்மை
விரலிலிருந்து நழுவிக்
குனிந்து
பாலத்தின் மர இடுக்கினூடே
என்ன ஏது என்று
நோக்கும்
ஆர்வக் குழந்தையை
சிடுசிடுத்து இழுத்துப் போவாள்

வான் பார்த்து ஆடும் அலைகள்
பாலத்து நிழலில்
சற்றுப் பயமும் கலந்த
புதுமையில் ஆனந்தித்தபடி
அம்மா அம்மா மேலே என்ன?
என்ன;
அலட்சியம்,
அசுவாரஸ்யம்,
ராங்கித்தனம்-
எல்லாம் புடை சூழ
இழுத்துப் போவாள்
நதியம்மாவும்.
அவளுக்கு இவள் மீதும்
இவளுக்கு அவள் மீதும்
ஆர்வமே இல்லையெனினும்
ஒரே இடத்தில்
அவளுக்கும் வழிவிட்டு
இவளுக்கும் ஒரு வழி அமைந்த
ஆச்சர்யத்தைக்
குழந்தைகள் காணத் துடிப்பார்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP