Sunday, March 10, 2013

மழை

மழையைக் கூர்ந்தபடி நான்
மரணத்தின் வாசனையும்
புணர்ச்சியின் வாசனையும் ஒன்றென
உணர்ந்தவனாய் நான்

”கால காலங்களாய்த்
தாகத்தால் சூடேறித்
தகித்துக் கொண்டிருக்கும் இம் மண்ணில்
பொலபொலவெனச் சிந்தி
உடன் மறைந்து போகும்
மழைத் துளிகளல்ல நான்
நான் பெருமழை”
என ஓங்கி அறைந்து கொண்டிருந்தது மழை

என் எண்ணங்களை
எற்றி எற்றித் தூர எறிந்தபடி
இரைந்து பெய்துகொண்டிருந்தது அது

அணைக்கட்டு நீர் விடுதலையாகிவிட்டது
ஒரு பெரிய வாயிற் கதவொன்றின் சிதிலம்
அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது

ஒவ்வொன்றையும்
இரண்டாய்ப் பிரித்து நின்ற
ஒரு பெருஞ்சுவர்
இடிந்து விழுந்து கரைந்து கொண்டிருந்தது

அழுக்கு நீங்கலும் பரிசுத்தமும்
ஒன்றான ஒன்றாய்
சொல்லும் செயலும்
ஒன்றேயான கோலமாய்
இந்த மழை

*ஒரு குவளை நீர் கேட்டவன் முன்
பூமியையே நிறைக்க வந்ததுவாய்ப்
பெய்துகொண்டிருந்தது மழை

ஓரமாய் நிற்கும் (அதில்தான் அந்த
’செருப்புத் தைக்கும் தாகூர்’ இருக்கிறார்)
இந்த மனிதர்களின் சூடேறிய நெற்றிகளின் கீழ் மட்டும்
ஆறாத ரணப்புண் கண்களின்
கரியதோர் சந்தேகப் பார்வை


....................................................
*இவ்வரிகள் ஒரு உத்தியாக தாகூரின் கவிதையைத் தழுவியுள்ளன. செருப்புத் தைக்கும் தாகூர் என்ற குணச்சித்திரத்தையும் இணைத்துப் பார்த்தால் இது நன்கு புலனாகும். தாகூரின் Stray Birdsல் உள்ள அந்த முழுக்கவிதையும்:
I gave my whole water in joy "sings the waterfall, though little of it is enough for the thirsty."

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP