Thursday, March 21, 2013

சர்வமும் பூர்வமும் சட்டையுரிக்கும் பாம்பும்

’பிராமணன்’ ஆக முடியவில்லை,
அது இங்கே இன்னும்
பிறப்பால் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாலும்;
ஆகவே ’முற்போக்கு’

’முற்போக்கு’ அறைக்குள்ளும் அதே கூத்தா?
வாங்கடா வெளியே என்று
வந்தாயிற்று ’தலித்’ கொட்டாய்க்கு

கொட்டாய்க்குள்ளும் அது வந்துண்டா?
அட, அப்போ பார்த்துக்கிடலாமண்ணே
கொஞ்ச நேரம் நிம்மதியா
இருக்கவிடமாட்டேங்கிறியே என்றவர்
வாடைக்காற்று உடம்புக்கு ஆகாதென்று
தன் கொட்டாய்க்குள் புகுந்துகொண்டார்

உஸ் உஸ்ஸென்று உறுமி அலைகிறது
காற்றினிலே ஒரு சர்ப்பம்
வேலியிலே தொங்கிக்கொண்டிருக்கிறது
அதன் பிராமணச்சட்டை
அதன் அசைவிலும் சிமிட்டலிலும் அதிர்கிறது
யாராலும் எடுத்து அணியமுடியாத அதன் மகத்துவம்

குளித்து முடித்து
தன் முற்போக்குச் சட்டையை எடுக்கத் திரும்பிய
சண்முகனைத் துரத்திற்று, படம் விரித்து
ஜன்னல் கம்பியில் மின்னல்போல் நின்றிருந்த சர்ப்பம்

கொட்டாய்க்குள் புகுந்து
அங்குள்ளோரையும் அலறியடிக்கச் செய்துவிட்டு
ஒளிரும் கண்களிலும்
நிமிர்ந்து நின்று
தன் இரட்டை நாக்கை நீட்டி இழுத்த
சப்புக்கொட்டலிலும்
வெற்றிகொண்ட கடமைவீரனின்
பெருமிதத்தைக் காட்டிவிட்டு,
வெடுக்கென்று மடங்கி,
விடுவிடுவென்று தப்பித்து
சுதர்ம வேகத்துடன்
விரைகிறது அது
தன்னை வழிபடுவோரையும்
தடி எடுத்துக் கொல்ல வருவோரையும்
விட்டு விடு விடுவென்று...

கண்ணுக்கு மறைந்து
காற்றில் கலந்து
என் உயிர்மெய்யைத் தொட்டு
உலுக்குகிறது அதன் தீண்டல்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP