Thursday, March 28, 2013

பாடல்

உறைய நினைக்கும் குருதியின் உள்
அணுக்களெல்லாம் கிளர்ச்சி செய்ய
நாடி நரம்புகளெல்லாம் பறை முழக்கத்
தசைவெளியினிலோர் நடனம் பிறக்கக்
கழுத்துவரை உடம்பு தன்னை நதிக்குள் நட்டுப்

பதம் பெற்ற கூட்டினின்று
சிறகடித்துப் பறந்த குரல்;

மலை மடு கடல் எங்கும் நிரம்பி
எல்லையின்மையெங்கும் வியாபித்தபோது
மறந்துவிட்டிருந்தது பாடலுக்கு தான் பிறந்த இடம்

தேடலாய்த் திரண்ட அதன் வியாபகம்
தன்னிகரில்லாததோர் கூர் ஆயுதம்,
முனிப்பாய்ச்சல், தர்மவேசக் கர்ஜனை
முரண்களையெல்லாம் உலுக்கி உதிர்த்து
துக்கத்தை அறுத்து
ஆரவாரங்களையெல்லாம் அடக்கி

எங்கும் மவுனத்தை விதைத்தபடி பயணித்தது பாடல்

கோடி ஆண்டுகளாய் இளமை குன்றா
இயற்கையின் நிழலில்
தன் தாகவிடாய் தீர்த்துச்
சற்றே அது இளைப்பாறிய பின்,

கர்ஜித்தபடி பாய்ந்தது சமவெளியெங்கும்
நெருப்பை விசிறும் புயலாய்

பசித்த ஒரு மிருகமாய்
தன் ஊற்றுவாய் தேடி அலைந்தது பாடல்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP