Wednesday, March 13, 2013

கடலோரம்

ஆடையை நனைக்காமலேயே
இக் கடலோரம் நடந்து போய்
வந்துவிடலாமென எண்ணினேன்
கடல்தாயின் மணல்மடியில்
சகலரும் குழந்தைகளாமே
எவ்வாறு தொலைந்தேன் நான்?
கடலின் இரைச்சலில் தேடியபடி நடந்தேன்
உனது குரலை
கடலின் இரைச்சலில் கேட்காமல் போனது
உனது கூப்பிடு குரல்

பாறைகளின் மீது
இந்த அலைகளுக்கென்ன?
ஆத்திரமா? அமைதியின்மையா?
கொண்டாட்டமா? நோக்கமா?

ஒன்றுமில்லை

மனோவிகாரங்கள்
காற்றில் கரைந்து விடும்போது
தரிசனமாகிறது உயிரின் சிலிர்ப்பு.
பாறைகளின் மீது அலைகள்-
வாழ்வை நடித்துக்காட்டும்
உயிரின் சிலிர்ப்பு

இந்தப் பாறைகளுக்கப்பால்
பார்த்துக்கொண்டிருந்தேன்,
போகாதே என அசைந்துகொண்டிருந்த
ஒரு சிவப்புக்கொடியைத் தொடர்ந்து.
அப்போது உனது குரல்,
ஓங்கி எழுந்து வந்த ஒரு பிரும்மாண்டம்
நனைத்துவிட்டது என்னை

சிரித்துவிட்டேன் நான்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP