Friday, March 29, 2013

எழுந்து நடந்து கொண்டிருந்தேன்...

மரங்களெனும் ஆன்டெனாவின் கீழ்
ஒரு குடிசை எனது வீடு
பார்வையாளனும் பங்கேற்பாளனுமான
ஒரு விசித்திரம் நான்

காட்சிக்குள்ளிருந்து திமிறிய பங்கேற்பாளன்
தன் வாளினை வீசினான்
பார்வையாளனை நோக்கி
போரின் முடிவில் –
முடிவு என எப்படிச் சொல்வேன்?
பார்வையாளன்
பங்கேற்பாளனைப் பிடித்துக் கட்டித்
தள்ளிவிட்டான் ஒரு மூலையை நோக்கி –
எனச் சொல்வேனா?

குடிசையின் கதவு தகர்ந்து
கூரை சரித்து
ஹோ ஹோ என ஆர்ப்பரித்தன
கடலலைகள்
பூக்களை வியந்து முகர்வது போலவும்
பவளங்களை அள்ளி அழகு பார்ப்பதுபோலும்
எங்கள் இரத்தச் சிந்தல்களைத் தீண்டின
கடலலைகள்

எழுந்து நடந்துகொண்டிருந்தேன்
அங்கிருந்தும் நான்,
என் தோளில் ஏறிக்கொண்டிருக்கும்
பார்வையாளன் சுமையாக,
எனது குடிசையைத் தூக்கி நிமிர்த்தி வைக்க,
எழுந்து நடந்துகொண்டிருந்தேன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP