Sunday, September 16, 2012

வேறு இடமும் விலைமதிப்பும் கவியின் கவலையும்

வைகறையின் காபிக் கடைச் சந்திப்பில்
வீட்டுமனைத் தரகர் பால்ராஜூ
பேசிக் கொண்டிருந்தார்: அய்யா,
உங்கள் கவலை எனக்குப் புரிகிறது.
நீங்கள் போட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய்க்கு
இந்த 25 வருடத்திற்கு வட்டி என்ன ஆயிற்று!
வேறு இடத்தில் போட்டிருந்தால், இந்நேரம்
எத்துணை நன்மையாய் முடிந்திருக்கும்
உங்களுக்கு.

எஸ்ஸி ஏரியாவாக அமைந்துவிட்டது.
அங்குபோய் வேறு சாதிக்காரன்
இடம்வாங்க அஞ்சுகிறான்.
இன்னொரு எஸ்ஸிதான் வாங்கவேண்டியிருக்க,
எஸ்ஸிகாரங்க கையில் சில்லறை இல்லாமையாலும்
சில்லறை உள்ளவனும்
இங்கு தன் பங்களாவைக் கட்ட விரும்பாமையாலும்
அந்த நிலம் விலை உயராமலே கிடக்கிறது.

பாருங்க இங்க மாப்பிள்ளையூரயிணில்
எல்லாரும் நாடாக்க மாருங்கதான்
அங்கேயும் நிலம்மதிப்பு அப்படியே கிடக்கு.
ஒரே சாதிக்காரங்க இருக்கிற இடத்திலயும்
இந்தக் கதிதான்.
வேறு சாதிக்காரன் வந்து குடியிருக்க
பயப்படுறான். ஒரு பிரச்னை வந்தால்
எல்லோரும் ஒண்ணுசேர்ந்துக்கிடுவாங்கண்ணு
பயம்.

ஆசிரியர் காலனியப் பாருங்க. அன்றைக்கு
சென்ட் 8 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினாங்க.
எப்படிக் கிடந்த இடம்!
இன்றைக்கு சென்ட் ரூபாய் நான்கு லட்சம்.
ஏன்? அங்கே எல்லா சாதி ஜனங்களும்
கலந்து கிடக்கிறாங்க.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP